பக்கம் எண் :

சீறாப்புராணம்

646


முதற்பாகம்
 

1719.வண்டுக ளுண்டு பாட மணிச்சிறை மயில்க ளாடக்

    கொண்டல்கண் டூங்குஞ் செந்தேன் கொழுங்கனி குழைபைங் காவு

    முண்டகத் தடமுஞ் செவ்வி முருகவிழ் கழனிக் காடுந்

    தெண்டிரை பரந்த தென்னத் திரட்படை படர்ந்த தன்றே.

61

      (இ-ள்) அப்போது அங்குள்ள கூட்டமாகிய சேனைகளானது தேனீக்கள் மதுவையருந்திக் கீதங்களைப் பாடவும் அழகிய சிறகுகளையுடைய மயில்களாடவும் மேகங்கள் நித்திரை செய்யா நிற்கும் சிவந்த தேனைக் கொண்ட செழிய பழங்களமைந்த தளிர்களையுடைய பசிய சோலைகளிலும் தாமரைத் தடாகங்களிலும் அழகிய நறவமானது நெகிழும் புஷ்பங்களையுடைய வயற்காடுகளிலும் தெள்ளிய சமுத்திரமானது பரந்ததைப் போலப் பரந்து நடந்தது.

 

1720.வரிவளைக் குலத்தின் குப்பை வாசியின் குரத்திற் றாக்கி

    விரிகதிர்த் தரளஞ் சிந்தும் விளைநிலங் கடந்து செந்தே

    னருவிகள் வரையிற் செம்பொ னணிவடம் புரள்வ போல

    நிரைநிரை செறிந்து தோன்று நெடுமுடிக் குறிஞ்சி சார்ந்தார்.

62

      (இ-ள்) அன்றியும், இரேகைகளைக் கொண்ட சங்கினங்களின் குவியல்கள் குதிரைகளின் குளம்புகளினால் தாக்குண்டு விரிந்த கிரணங்களையுடைய முத்துக்களைச் சொரியா நிற்கும் வயற்களைத் தாண்டி மலையின்கண் சிவந்த தேனினாலான அருவிகள் செந்நிற மமைந்த பொன்னினாலாகிய அழகிய மாலைகள் கிடந்து புரள்வதைப் போல வரிசை வரிசையாக நெருக்கமுற்று விளங்கும் நெடிய சிகரங்களை யுடைய குறிஞ்சி நிலத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1721.கண்விரித் தனைய தூவிக் கலவமா மயிலுங் கீதப்

    பண்விரித் தென்னப் பேசுந் தத்தையும் பறவை யாவும்

    விண்படர்ந் திரியச் செந்தேன் விளைதருப் படிந்து தோன்றா

    மண்பட நெரியத் தாவும் விலங்கின மலைய வந்தார்.

63

      (இ-ள்) அன்றியும், கண்ணானது திறந்ததைப் போன்ற தூவிகளையுடைய கலாபத்தைக் கொண்ட பெருமை பொருந்திய மயில்களும் இராகத்தினது பண்ணை விரித்ததைப் போன்று பேசா நிற்கும் கிளிகளும் மற்றும் பட்சி சாலங்களும் ஆகாயத்திற் பரவியோடவும், சிவந்த மதுவானது விளைகின்ற தருக்களானவை கண்பார்வைக்குத் தோற்றாத பூமியானது கெடும் வண்ணம் நெரியவும், பாயா நிற்கும் மிருகக் கூட்டங்கள் மயங்கவும், நடந்து வந்தார்கள்.