பக்கம் எண் :

சீறாப்புராணம்

647


முதற்பாகம்
 

1722.வரிப்புலிக் குழுவு மாறா மதகரித் திரளுஞ் செங்கட்

    டிருக்கறத் திசைக ணோக்குஞ் சீயமும் வெருவி யோடிப்

    பொருப்புறைந் தொதுங்கிற் றென்றாற் புரவலன் சேனை வீரர்

    விருப்புறும் வீரத் தன்மை யாவரே விரிக்கற் பாலார்.

64

      (இ-ள்) அன்றியும், இரேகைகளையுடைய புலிக்கூட்டங்களும் நீங்காத மதத்தையுடைய யானைக் கூட்டங்களும் சிவந்த கண்களினால் திருக்கானது அறும்வண்ணம் எண்டிசைகளிலும் பாரா நிற்கும் சிங்கக் கூட்டங்களும் பயந்து தாங்கள் நின்ற இடத்தை விட்டும் ஓடி மலைகளில் ஒதுக்கமுற்றுத் தங்கிற்றென்று சொன்னால் ஹபீபரசனினது சேனையிலுள்ள வீரர்களின் உவகையுற்ற வீரத்தினது தன்மையை விரித்துச் சொல்லும் இயல்பை யுடையவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.

 

1723.நெடுவரைக் குறிஞ்சி நீந்தி நிரைதொறு புகுதச் சேர்த்தி

    யிடுகுறு நுனைமுள் வேலி யிடையர்தம் பாடி யேங்கப்

    படர்கொடி நுடங்கு முல்லைப் பரப்பையு நீந்தி யீந்தி

    னடவிகள் புடையிற் றோன்று மறபுநாட் டகத்திற் புக்கார்.

65

      (இ-ள்) அவ்வாறு அவர்களி யாவர்களும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தைத் தாண்டி வரிசையாகிய பசுக்களானவை புகுதும் வண்ணம் சேர்த்து வைத்த கூரிய முனையைக் கொண்ட முள்ளினது வேலிகளை யுடைய இடையர்கள் வாசஞ் செய்யும் ஊர்களிலுள்ள யாவும் அஞ்சும்படி படர்ந்த கொடிகளானவை அசையா நிற்கும் முல்லை நிலத்தினது விரிவையுங் கடந்து பக்கங்களில் ஈத்தஞ் சோலைகள் விளங்கிய அறபி ராச்சியத்தின் எல்லையில் வந்து புகுந்தார்கள்.

 

1724.மதிதவழ் குடுமி மாட மக்கமா நகர மென்னும்

    பதியினுக் கடுப்ப மற்றோர் பாடியி னிழிந்து பாயுஞ்

    சதிகதிப் பரியு நீண்ட தடக்கைமா கரியும் பொங்கக்

    கதிரயின் மன்ன ரீண்ட கபீபர சிருந்தா னிப்பால்.

66

      (இ-ள்) அவ்விதம் புகுந்து சந்திரனானது தவழப் பெற்ற சிகரங்களைக் கொண்ட மாளிகைகளை யுடைய மக்கமா நகரமென்று செல்லும் பட்டினத்திற்குச் சமீபமாய் வேறே யொரு சிற்றூரில் இறங்கிப் பாயா நிற்கும் விரைந்த நடையையுடைய குதிரைகளும் நீண்ட கையையுடைய பெருமை பொருந்திய யானைகளும் ஓங்கவும், பிரகாசத்தைப் பெற்ற வேலாயுதத்தையுடைய அரசர்கள் நெருங்கவும், ஹபீபரசன் தங்கியிருந்தான். இதன் பின்னர்.