பக்கம் எண் :

சீறாப்புராணம்

648


முதற்பாகம்
 

1725.மைக்கருங் கவிகை வள்ளன் முகம்மதுக் குதவி யாகத்

    தக்கவ னருளாற் செம்பொற் றலத்தினும் பாரிற் றோன்றுந்

    திக்கினுங் கதிர்கு லாவுஞ் செழுஞ்சிறைத் தடங்கட் செவ்வி

    மிக்குயர் வடிவ தாகச் சபுறயீல் விசும்பில் வந்தார்.

67

      (இ-ள்) கரிய மேகக் குடையையுடைய வள்ளலாகிய நபிமுஹம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு ஒத்தாசையாகத் தக்கவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் திருவருளினால் சிவந்த பொன்னினாலாகிய சுவர்க்க லோகத்தின் கண்ணும் பூமியின்கண் தோற்றா நிற்கும் எண்டிசைகளிலும் பிரகாசமானது ஒளிர்கின்ற செழிய சிறகுகளினது பெரிய கண்களி னழகைக் கொண்ட ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் மிகவும் உயர்ந்த வடிவமாக ஆகாயத்தின்கண் வந்தார்கள்.

 

1726. ஆயிரஞ் சிறையு மொவ்வா வாயிரஞ் சிரசு மாயீ

    ராயிரம் விழியுந் தோன்ற வாயிர முகமு மாகி

    யாயிர நாவி னாலு மகுமதே யென்னக் கூவி

    யாயிரம் பெயரி னான்றன் சலாமென வருளிச் செய்தார்.

68

      (இ-ள்) அவ்விதம் வந்த ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் தங்களின் ஈராயிரம் சிறகுகளும் யாவும் ஒப்பாகாத ஆயிரம் தலைகளுமாகி இரண்டாயிரம் கண்களும் தெரியும்படி ஆயிரமுகங்களுமாய் ஆயிரம் நாவுகளினாலும் நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை, அஹ்மதே! என்று சொல்லிக் கூப்பிட்டுத் தங்களுக்கு ஆயிரம் நாமத்தை யுடையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் சலாமென்று அருளிச் செய்தார்கள்.

 

1727.விரைவினிற் சலாமென் றோது மொழிவழி விசும்பை நோக்கிக்

    கரையிலா வடிவு தோன்றுங் காரணங் கண்டி யாரோ

    தெரிகில மென்ன வுள்ளந் தெருமந்து வருத்த முற்றார்

    மரையிதழ் வனப்பு மொவ்வா மலர்ப்பத முகம்ம தன்றே.

69

      (இ-ள்) அப்போது தாமரை மலரினிதழ் களினது அழகும் ஒப்பாகாத பூம்பதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சீக்கிரமாய்ச் சலாமென்று சொல்லும் வார்த்தைகளின் வழியாக ஆகாயத்தைப் பார்த்து எல்லையில்லாத வடிவமானது தெரியும் காரணத்தைக் கண்டு இவர் யாவரோ? நாம் அறிந்திலோமென்று சொல்லித் தங்களின் மனமானது சுழலப் பெற்றுத் துன்பமடைந்தார்கள்.