பக்கம் எண் :

சீறாப்புராணம்

731


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், மேகத்தைப் பார்க்கிலும் பெருக்கமுற்று விஷத்தைப் பார்க்கிலும் கறுப்படைந்து சமுத்திரத்திற் பொருந்திய கரிய மணலைப் பார்க்கிலும் பளபளப்புற்றுப் பூங்காவுகளில் தங்கியிருக்கும் கொன்றைக்காய்த் திரளைப் பார்க்கிலும் திரட்சியுற்றுக் கடற்பாசியினது தொடரைப் பார்க்கிலும் தழைப்புக் கொண்டு வாசனையானது கமழும் வண்ணம் குழற்சியாகி நெறித்துவார்தல் பெற்று ஒழுகிப் பூலோகத்தி னிடத்துள்ள வாலிபர்களின் கண்களை வழுக்கும்படி எங்களின் நன்மை பொருந்திய நயினாரான நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முந்தின நாளில் ஹபீபரசனின் சொற்படி சந்திரனை வரவழைக்கு முன்னர் அழைத்த இருளைப் பார்க்கிலும் இருண்ட கருமையான கூந்தலை யுடையவள்.

 

1957. கீற்றிளம் பிறையுங் கணிச்சியின் வளைவுங்

          கிளர்ந்தசெவ் வகத்திமென் மலருந்

     தோற்றிடத் தோற்றி விளங்குநன் னுதலாள்

          சுடருமுள் வாரணத் தலகு

     மாற்றருந் தனுசுங் கருங்கொடி யெதிர்வு

          மாற்றிமைக் கட்கடற் கரையின்

     மேற்றிகழ் கரிய பவளமென் கொழுந்தாய்

          விளங்கிய செழும்புரு வத்தாள்.

19

      (இ-ள்) அன்றியும், கீற்றாகிய இளஞ் சந்திரனையும், வளையுளியின் வளைவையும், ஓங்கிய செவ்வகத்தி மரத்தினது மெல்லிய புஷ்பத்தையும், தோற்றுப் போகும் வண்ணம் பிரகாசித்து விளங்கா நிற்கும் நல்ல நெற்றி யுடையவள். ஒளிருகின்ற முட்களையுடைய சேவலினலகையும், மாற்றுதற்கரிய வளைவைக் கொண்ட வில்லையும் கருநிறத்தையுடைய காகங்களிரண்டு தம்மில் எதிர்முகங் கொண்டு நிற்கும் எதிர்ப்பாட்டையும், மாறுதலாக்கி மையினை எழுதப் பெற்ற கண்ணாகிய கடலினது கரையின் மேல் பிரகாசிக்கும் கருமையுற்ற மெல்லிய பவளக் கொழுந்தாய் இலங்கப் பெற்ற செழிய புருவத்தையுடையவள்.

 

1958. மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து

          வரியளி யினைச்சிறைப் படுத்திக்

     கடற்குளந் தேறா தலைதரச் செய்து

          கணையயில் கடைபடக் கறுவி

     விடத்தினை யரவப் படத்திடை படுத்தி

          மீனினம் பயப்படத் தாழ்த்தித்

     திடக்கதிர் வடிவா ளெனக்கொலை பழகிச்

          சிவந்தரி படர்ந்தமை விழியாள்.

20