பக்கம் எண் :

சீறாப்புராணம்

741


முதற்பாகம்
 

வற்றியையும் நாம் பெற்றுக் கொண்டோமென்று தனது மனக் குறைவை நீக்கினான்.

 

1977. தெரிவைபின் வரத்திமஸ் கிறைவர் செவ்விய

     குருசினந் நபிகொழுங் கமல மெல்லடி

     பரவிநற் புகழ்சில பகர்ந்து வாக்கொடும்

     வரிசையி னெறிக்கலி மாவை யோதினார்.

4

      (இ-ள்) திமஸ்கு நகரத்தினது அரசரான அந்த ஹபீபென்பவர் தனது மகவாகிய அப்பெண் பின்னால் தொடர்ந்து வரும் வண்ணம் அழகிய குரிசிலான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் செழிய தாமரை மலரையொத்த மெல்லிய பாதங்களிற் பணிந்து நன்மையைக் கொண்ட சில புகழினாற் றுதித்து வரிசையினது ஒழுங்கையுடைய “லாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹி” யென்னும் கலிமாவை வாக்குடன் கூறினார்.

 

1978. அரசரு மமச்சருந் திமஸ்கி னாதிபர்

     பரிகரி வீரரும் படைக்கு ழாங்களுந்

     தெரிவையின் றொகுதியுஞ் சிறந்த நந்நபிக்

     குரிமையி னொடுங்கலி மாவை யோதினார்.

5

      (இ-ள்) அன்றியும், அங்கு வந்திருந்த அரசர்களும், மந்திரிமாரும், திமஸ்கு நகரத்தினது மன்னவரான ஹபீபென்பவரின் குதிரை வீரர்களும், யானை வீரர்களும், மற்றும் படைக் கூட்டங்களும், பெண்களின் தொகுதியும், சிறப்புத் தங்கிய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு உரிமையோடுங் கலிமாவை யோதினார்கள்.

 

1979. ஈனமொன் றில்லதோ ரிறைவ னாகிய

     தானவன் றனையுளத் திருத்தித் தக்கதோர்

     வானவர் புகழ்முகம் மதுவை வாழ்த்திநற்

     றேனெனுங் கடற்பெருந் தீனி லாயினார்.

6

      (இ-ள்) அவ்வித மோதி யாதொரு குற்றமுமில்லாத ஒப்பற்ற இறைவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் நினைப்பை மனதின்கண் இருக்கும்படி செய்து தகுதி பொருந்திய இணையற்ற தேவர்களான மலாயிக்கத்துமார்கள் புகழா நிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் துதித்து நன்மை தங்கிய தேனென்னும் கடலாகிய பெரிய தீனுல் இஸ்லாத்திலானார்கள்.

 

1980. மறைமுறை யொடுந்தின வணக்க நீங்கிலா

     திறைவனைத் தொழுதிசு லாமி னேர்வழி

     குறைவறப் படித்தருங் குபிரை நீக்கியே

     முறைதவ றாப்பெரு முசிலி மாயினார்.

7