பக்கம் எண் :

சீறாப்புராணம்

742


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், புறுக்கானுல் அலீமென்னும் வேதவொழுங்கோடு பிரதிதினமும் வணக்கத்தை விட்டு நீங்காது இறைவனாகிய ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவைப் பணிந்து இஸ்லா மார்க்கத்தினது நேர்மையான பாதைகளைக் குறைவில்லாது கற்று அரிதான குபிர் மார்க்கத்தை யொழித்து முறைதவறாத பெரிய முசிலிமானார்கள்.

 

1981. மானகர்த் திமஸ்குமன் னவருந் தம்பெருஞ்

     சேனையு முகம்மதின் றிருமு னாகிச்செங்

     கான்மல ரடியிணை யிறைஞ்சிக் கைகொடுத்

     தானநல் லறிவராய்ப் புறப்பட் டாரரோ.

8

      (இ-ள்) அவ்வித முசிலிமாகிய பெருமை பொருந்திய திமஸ்கு நகரத்தினது மன்னவரான ஹபீபென்பவரும் அவரின் பெரிய சேனைகளும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகம் தங்கிய முன்பிலாகி வாசனையையுடைய சிவந்த தாமரை மலர் போன்ற இரு பாதங்களிலும் பணிந்து கையைக் கொடுத்துத் தஸ்பீகு செய்து நன்மையைக் கொண்ட அறிவை யுடையவர்களாய் அந்த மக்கமா நகரத்தை விட்டுப் புறப்பட்டார்கள்.

 

1982. நபியெனு முகம்மதை வாழ்த்தி நன்னெறிப்

     புவியெனு நகரினோர் புறத்தி னீங்கிநின்

     றபுசகல் தனையழைத் தரசர் நாயகர்

     கவினுறும் பலமொழி யெடுத்துக் காட்டினார்.

9

      (இ-ள்) அவ்வாறு புறப்பட்ட இராஜநாயகரான ஹபீபென்பவர் நபியென்னும் நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் துதித்து நன்மையுற்ற சன்மார்க்கத்தை யுடைய தானமென்றும் கூறா நிற்கும் அம்மக்கமா நகரத்தினது ஓர் பக்கத்தில் அகன்று நின்று கொண்டு அபூஜகி லென்பவனைக் கூப்பிட்டு அழகு பொருந்திய பல வார்த்தைகளை எடுத்துச் சொல்லிக் காட்டினார்.

 

1983. மந்திர மறைமுகம் மதுவை வாக்கினிற்

     சிந்தையி லிகழ்ந்தவர் நரகஞ் சேர்குவ

     ரந்தமி னாயகன் றூத ராமெனப்

     புந்தியிற் புகழ்வர்பொன் னுலகம் போதுவார்.

10

      (இ-ள்) மந்திரமாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை வாக்கினாலும் மனசினாலும் நிந்தித்தவர்கள் நரகலோகம் போய்ச் சேர்வார்கள்.