பக்கம் எண் :

சீறாப்புராணம்

794


முதற்பாகம்
 

2137. படித்தலம் புகழ்நபி பாதம் போற்றிநின்

     றடிக்கடிப் புதுமையுற் றறபி யீந்தின

     திடத்தினிற் குலைபொருந் திடச்செய் வீரெனத்

     திடத்தொடும் பயத்தொடுஞ் செப்பி னானரோ.

14

      (இ-ள்) அன்றியும், அந்த அறபியானவன் இவ் பூலோகமானது புகழா நிற்கும் நபியாகிய நபிகட்பெருமான் நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருவடிகளை அடிக்கடி துதித்து நின்று ஆச்சரிய மடைந்து இந்த ஈத்தங் குலையை ஈத்த மரத்தின்கண் பொருந்தும் வண்ணம் செய்வீர்களாக வென்று தைரியத்தோடும் அச்சத்தோடும் கூறினான்.

 

2138. மழைமுகிற் கவிகையின் வள்ள னன்கெனக்

     குழைதரும் விரிதலைக் குலையைப் பார்த்துநின்

     னுழையினிற் செல்கென வுரைப்ப வோடிமுற்

     புழைவழி நுழைந்தது பொருந்தி நின்றதே.

15

      (இ-ள்) அறபியானவன் அவ்வாறு கூற மழையைப் பொழியா நிற்கும் மேகக் குடையினது வள்ளலான நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நல்லதென்று தளிர்களைத் தரா நிற்கும் விரிந்த தலையையுடைய அந்த ஈத்த மரத்தினது குலையை நோக்கி நீ உன்னிருப்பிடத்திற் செல்வாயாக வென்று சொல்ல, அக் குலையானது ஓடி முன்னருள்ள புழையினது நெறியிற் புகுந்து சேர்ந்து நின்றது.

 

2139. மேதையச் சமுமுள விலங்கி னாயதோர்

     சாதியன் றீதொரு தருமுன் னாதலும்

     போதலும் படைத்தவர் புதிய நாயகன்

     றூதுவ ருண்மையென் றடியைச் சூடினான்.

16

      (இ-ள்) அவ்வாறு நிற்க, இஃது அறிவையும் அச்சத்தையுமுடைய மிருகங்களிலான ஒரு சாதி யல்ல ஒரு மரம், இஃதை முன்னே வரவும் போகவும் செய்தவர்கள் புதிய ஆலத்தையுடைய நாயகனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவினது சத்தியத்தைக் கொண்ட றசூல் தாமென்று அந்நபிகட் பெருமானவர்களின் பாதங்களைத் தனது சிரசின்கண் அணிந்தான்.

 

2140. பாதபங் கயமலர் சிரசிற் பற்றிநின்

     றாதியிற் சொலுங்கலி மாவை யன்பொடு

     மோதினன் றெளிந்தன னுரிய நாயகன்

     றூதுவர்க் கிவனொரு துணைவ னாயினான்.

17