ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது பெற்றார் பிறப்பற்றார் பின். 34 | (உரை) ஓங்காரமே நல் திருவாசி - பிரணவந்தானே நல்ல திருவாசி யாகவும், - உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறை சுடராம் - பொருந்தி அப்பிரணவத்தைவிட்டு நீங்காத பஞ்சாக்கரமே நிறைந்த உள்ளொளியாகவும், - ஆங்காரம் அற்றார் அறிவர் - யான் எனது என்னுஞ் செருக்கற்றவர்கள் அறிவார்கள், - அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பின் பிறப்பு அற்றார் - அழகிய திருவம்பலத்தான் செய்யும் நிருத்தமாகிய இதனைத் தரிசித்தவர்களே பின்பு சனன மரண மற்றவர்கள். 34 தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. 35 | (உரை) துடியதனில் தோற்றம் - டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்திலே சிருஷ்டியாகவும், - அமைப்பில் தோயும் திதி - அமைத்த ஸ்ரீ அத்தத்திலே ஆன்மாப் பொருந்தும் இரக்ஷையாகவும், - சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - சொல்லப்பட்ட அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்திலே மலசங்காரமாகவும், - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் - உறுதியாக ஊன்றிய மலர்போலும் பொருந்திய ஸ்ரீ பாதத்திலே பிரபஞ்சத்தை மறைக்குந் திரோதமாகவும், - நான்ற மலர்ப்பதத்தே முத்திநாடு - தூக்கிய மலர்போலும் ஸ்ரீபாதத்திலே அநுக்கிரக முத்தியாகவும் திருக்கூத்துச் செய்வனென்று விசாரித்தறிவாயாக. 35 1மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பாதம் தான். 36 | 1. ஒரு பிரதியில் இது 'மன்னதிகை' என்ற கடைசிப் பாட்டின்பின் காணப்படுகிறது. |