பக்கம் எண் :

சீறாப்புராணம்

830


முதற்பாகம்
 

2233. ஒருநொ டிக்குளந் தரமடங் கலுந்திரிந் துலவி

     யொருநொ டிக்குளிவ் வானகங் கவிந்தமட் டுலவி

     யிரும னத்தொடும் வரவரம் படைத்தவ ரெழிலா

     ரிருசெ விக்கொடுத் தேவலின் படிக்கிசைந் திருப்பார்.

26

      (இ-ள்) அன்றியும், ஒரு நொடி நேரத்தினகம் ஆகாய முழுவதிலு மலைந்து உலாவி ஒரு நொடி நேரத்தினகம் இந்த வானமானது கவிந்த மட்டும் திரிந்து பெரிய மனத்தோடும் வரும் வண்ணம் வரத்தைச் சம்பாதித்தவர். அழகு பொருந்திய இரண்டு காதுகளையும் கொடுத்துக் கூறும் ஏவலின்படி பொருந்தி இருப்பவர்.

 

2234. சித்தி ரத்தடப் புயவரை முகம்மது திருமு

     னுத்த மத்தொடு மொடுங்கிநின் றொருசலா முரைத்து

     முத்த வெண்கதி ரவரிரு மெனுமொழி கேட்டுப்

     பத்தி யாயரு கிருந்தொரு மொழிபகர்ந் திடுவார்.

27

      (இ-ள்) அவ்வாறு அவர் அழகிய பெரிய தோள்க ளென்னும் மலைகளையுடைய நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தில் மேன்மையோடும் ஒடுக்கமுற்று நின்று ஒப்பற்ற சலாமோதி முத்தினது வெள்ளிய பிரகாசத்தை யுடையவர்களான அந்நாயக மவர்கள் இருமென்று கூறும் வார்த்தைகளைத் தமது காதுகளினாற் கேள்வியுற்றுப் பத்தியாக அருகி லுட்கார்ந்து ஒரு வார்த்தை சொல்லுவார்.

 

2235. எத்த லத்துயி ரினுக்குநல் லுணவளித் திரங்கும்

     அத்த னென்னைநும் மேவலுக் கருளின னதனா

     லித்த லத்தில்வந் தடைந்தன னினியருட் கடைக்கண்

     வைத்தி ரேற்பணி விடைதறு கிலன்மறை மதியோய்.

28

      (இ-ள்) வேதங்களினது அறிவைக் கொண்ட முகம்ம தென்னுந் திருநாமத்தை யுடையவர்களே! எந்த இடத்திலுள்ள ஜீவப் பிராணிகளுக்கும் நல்ல உணவைக் கொடுத்து இரங்கா நிற்கும் அத்தனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் என்னை உங்களது ஏவற் றொழிலுக்காய்க் கற்பித்தான். அதனால் நான் இந்தப் பூலோகத்தின்கண் வந்து சேர்ந்தான். இனித் தாங்கள் காருண்ணியத்தையுடைய கடைக்கண்ணினது நோக்கம் வைப்பீர்களேயானால் தங்களின் பணிவிடைகளிற் றவற மாட்டேன்.

 

2236. அருந்து மாரமு தக்கலி மாவுரைக் கடங்கா

     திருந்த வூரெவை பகைத்தவ ரியாவர்நும் மிதயம்

     பொருந்தி டாத்திசை யெத்திசை பொருவராக் கதிர்மெய்

     வருந்தல் செய்தவ ரெவர்தெரி தரவழங் கிடுமே.

29