பக்கம் எண் :

சீறாப்புராணம்

862


முதற்பாகம்
 

அருமையான நல்ல நிலைமையை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை நடாத்திக் குவிந்த குபிரை யொழித்து இருக்கின்றார்களென்று களங்கமற்று மனக் களிப்புடனே இவ்விடத்தில் வந்து சேர்ந்தேன். இனி எளிதில் எனது வினையாகிய பாவங்க ளனைத்தையும் ஜெயித்தேன்.

 

2318. பதத்தினி லடைந்த பாவியென் மனத்திற்

          பருவரற் களங்கறத் துடைத்துக்

     கதத்தொடு மிறுக்கி வைத்தபா தகன்றன்

          கட்டறக் கருணையிற் படுத்தி

     யிதத்தொடு முமது தீன்வழிக் குரிய

          னிவனென நிறுத்திமே லையினும்

     விதித்தசொற் கடவாப் படிநடத் திடுக

          வேண்டுமென் றுரைத்தடி வீழ்ந்தான்.

21

      (இ-ள்) ஆதலால் உங்களது பாதங்களில் வந்து சேர்ந்த பாவியான எனது இருதயத்தின் துன்ப மாகிய குற்றமானது அற்றுப் போகும் வண்ணம் இல்லாமற் செய்து உக்கிரத்தோடும் இறுக்கி வைத்த பாதகனின் கட்டானது அறும்படி காருண்ணியத்தினுட்படுத்தி இதத்துடன் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்திற்குச் சொந்தமானவன் இவனென்று நிற்கப் பண்ணி மேலைக்கும் கற்பித்த வார்த்தைகளைத் தாண்டாத விதம் என்னை நடத்த வேண்டுமென்று கூறித் திருவடிகளில் விழுந்தான்.

 

2319. இரங்கிநின் றிறைஞ்சி யுரைத்தவா சகத்தை

          யிருசெவி குளிர்தரக் கேட்டு

     நெருங்கிட விறுக்கி வைத்தவர் பெயரை

          நினைத்தரு ளொடுமுறு வலித்து

     மருங்கினி லொடுங்கி யிருந்தகாம் மாவை

          விழித்தணி மதுரவாய் திறந்துன்

     னுரங்கெட விடுக்கண் விளைத்தவ ரியாவ

          ருரையென முகம்மது முரைத்தார்.

22

      (இ-ள்) இரக்கமுற்று நின்று வணங்கி அவ்வாறு கூறிய வர்த்தமானங்களை நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் இரு காதுகளும் குளிர்ச்சியடையும்படி கேள்வியுற்று அவ்விதம் நெருங்கும் வண்ணம் இறுக்கிக் கட்டி வைத்தவரின் நாமத்தைச் சிந்தித்துக் கிருபையோடும் சிரித்துப் பக்கத்தில் ஒடுக்கங் கொண்டு உட்கார்ந் திருந்த அந்தக் காம்மாவென்பவனை யழைத்து அழகிய தங்களின் மதுர வாயைத் திறந்து உனது வல்லமையானது கெட்டுப் போகும் வண்ணம் இவ்விதத் துன்பத்தைச் செய்தவர் யாவர்? அதைக் கூறுவாயாக வென்று கேட்டார்கள்.