பக்கம் எண் :

சீறாப்புராணம்

913


இரண்டாம் பாகம்
 

2469. ஏதெ னிற்குறை சிகளற பிகளிவ ணிருந்தோர்

     வேத னைப்படக் கொலைவிளைத் தாலயம் வீழ்த்திச்

     சூது வஞ்சனைத் தொழிலொடு மாய்த்திடத் துணிந்து

     போது கின்றன ரென்றுகூக் குரலொடும் புகன்றான்.

4

      (இ-ள்) அவ்வாறு பேசி முடித்த வார்த்தை யாதென்றால் இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் ணுறைந்தவர்களான குறைஷிகளும் அறபிகளும் துன்பப் படும்படி கொலைத் தொழிலைப் புரிந்து கோவில்களையும் விழும் வண்ணஞ் செய்து வஞ்சகத்தை யுடைய மாயச் செய்கையினால் மாய்க்க நிச்சயித்துத் திரு மதீனமா நகரத்திற்குச் செல்லுகின்றார்க ளென்று ஓசையுடன் கூவினான்.

 

2470. விரிந்த வீதிக டொறுந்தொறுங் கூக்குரல் விளக்கித்

     திரிந்த மாயவஞ் சகன்றனை நோக்கிக்கண் சிவந்து

     புரிந்த நின்வலி கெடுக்குவன் காணெனப் புகன்றார்

     சொரிந்து வானவர் புகழ்தர வருமிற சூலே.

5

      (இ-ள்) தேவர்கள் புட்ப மாரி பொழிந்து புகழும் வண்ணம் வந்த நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அகன்ற தெருக்களெல்லாவற்றிலும் அவ்வாறு யாவருக்குங் கேட்கும்படி ஓசையை விளக்கிச் சஞ்சரித்த கபடத்தையுடைய பொய்யனாகிய இபுலீ சென்பவனைப் பார்த்துக் கண்கள் சிவக்கப் பெற்று இவ்வாறு செய்த உனது வல்லமையைச் சிதைப்பேன் பாரென்று கூறினார்கள்.

 

2471. தேய மெங்கணு மிருள்கெடச் செழுங்கதிர் குலவ

     மேய வாவியின் வனசங்கள் விரிதர விளங்க

     மாய வஞ்சகன் கூக்குரன் மறுத்துவா யடைப்பக்

     கூய வெத்திசை தொறுந்தொறுஞ் சேவலின் குலங்கள்.

6

      (இ-ள்) அவ்விதங் கூற, அந்தத் திரு மக்கமா நகரத்தினது திசைகளெல்லாவற்றிலும் சேவலின் கூட்டங்கள் உலக முழுவதிலும் அந்தகாரமானது கெட்டுப் போகவும், செழிய பிரகாசமானது பிரகாசிக்கவும், தடாகங்களிற் பொருந்திய தாமரை மலர்கள் அலரவும், கபடத்தை யுடைய பொய்யனாகிய இபுலீ சென்பவனின் சத்தத்தை மறுதலித்து அவனின் வாயானது அடைக்கவும், தெளியும்படி கூவின.

 

2472. ஒடிந்து வீழ்திரைக் குணகடற் கதிரவ னுதிப்ப

     விடிந்த காலையின் மக்கமா நகரினின் வீரர்

     கடந்து சொல்லொடு மதீனமன் னவர்களைக் கடிதி

     னடர்ந் திவண்கொடு வருகெனத் தூதுவிட் டழைத்தார்.

7