பக்கம் எண் :

சீறாப்புராணம்

974


இரண்டாம் பாகம்
 

2624. இருள கற்றிய கதிரவன் கதிரென விதழிற்

     பரிவு பெற்றிடு மமிர்தநீ ருடலெலாம் பரந்த

     கரிய வெவ்விட மனைத்தையு மணுவறக் கடிந்து

     சொரியுங் காந்திகொண் டரியமெய் மாசறத் துடைத்த.

45

      (இ-ள்) அந்தகாரத்தை யகலச் செய்யுஞ் சூரியனது கிரணத்தைப் போன்ற அதரத்தின் கண்ணுள்ள இன்பத்தை யடையா நிற்கும் அமுதத்தை யொத்த அந்நீரானது சரீர முழுவதும் பரவிய கரு நிறத்தையுடைய கொடிய அந்த நஞ்சுக ளெல்லாவற்றையும் அணுப்போலுமில்லாம லழித்துச் சிந்துகின்ற பிரகாசத்தைக் கொண்டு அருமையான அவர்களின் தேகத்தினது களங்கமானது அற்றுப் போகும் வண்ணம் துடைத்தது.

 

2625. பன்ன கக்கொடு விடப்பெரும் பருவர றீர்ந்து

     மின்னு செங்கதிர் வேலபூ பக்கரும் விறலார்

     மன்னர் மன்னவர் முகம்மது நபியுடன் வரையி

     னின்னி சைப்புக ழொடும்புதி யனைத்தொழு திருந்தார்.

46

      (இ-ள்) அந்தச் சர்ப்பத்தின் கொடிய நஞ்சினது பெரிய துன்பமானது அவ்வாறு தீரப் பெற்றுச் செந்நிறத்தைக் கொண்ட ஒளியானது பிரகாசியா நிற்கும் வேலாயுதத்தையுடைய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் வெற்றி பொருந்திய அரசரதிபரான நாயகம் நபிகள் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களோடு அந்தத் தௌறு மலையின் கண் இனிமையான இராகத்தையுடைய கீர்த்தியுடன் புதிய ஆலத்தினது அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை வணங்கித் தங்கியிருந்தார்கள்.