பக்கம் எண் :

சீறாப்புராணம்

977


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவன் அவ்விதங் கொண்டு செல்ல, விடத்தினது முட்களைப் போன்ற பற்களையுடைய சர்ப்பங்கள் தங்கா நிற்கும் அந்தத் தௌறு மலையினிடத்து அர்த்த இராத்திரியில் கூட்டி லிருந்தெழுந்த ஆண் சிங்கத்தை நிகர்த்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் ஆசையோடும் தாமரை மலரை யொத்த மெல்லிய தங்களின் முகங்க ளானவை யலரும் வண்ணம் கணிக்க முடியாத வஞ்சகத்தை யுடைவர்களாகிய அந்தக் காபிர்களின் இதயத்தை நிகர்த்த முட்களைக் கொண்ட காட்டினது சிறிய அப் பாதையின் கண் போனார்கள்.

 

2632. கூன வான்றொறு வெனுங்குவட் டிடையெழில் குலவுந்

     தான வாரண முகம்மதின் றனுவிற்றண் கதிரால்

     வான் வாவிர வியின்கதி ரெனமலை மலைந்து

     கான வாரணக் குலஞ்சிலம் பினகடல் கடுப்ப.

7

      (இ-ள்) அவ்வாறு போக, கூனலினது பெருமையை யுடைய அந்த ஒட்டக மென்று கூறா நிற்கும் மலையின் மீது அழகானது பிரகாசிக்கப் பெற்ற, ஈகையைக் கொண்ட புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் காத்திரத்தினது குளிர்ந்த பிரகாசத்தால் ஆகாயத்திற் பொருந்திய சூரியனது பிரகாசமென்று அக்கானகத்தின் கண்ணுள்ள சேவல் கூட்டங்கள் மிகவுந் தடுமாறிச் சமுத்திரத்தைப் போலுங் கூவின.

 

2633. எயிற்று வல்விலங் கினந்திரி கானெலா மெடுத்து

     வயிற்றி டைப்படுத் திருந்தவல் லிருட்குல மறுகப்

     பயிற்றும் வேதவா சகமுகம் மதைக்கொடு பரிவின்

     கயிற்ற சைப்பிடா தேகின சுரிநெடுங் கழுத்தல்.

8

      (இ-ள்) கொம்புகளை யுடைய யானைகளின் கூட்டங்களானவை சஞ்சரியா நிற்கும் அந்தக் கானக முழுவதையும் எடுத்துத் தன்னுதரத்துட் படுத்தியிருந்த அக் கொடிய அந்தகாரத்தின் கூட்டமானது சுழலும் வண்ணம் பயிற்றுகின்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது வாசகத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சுருங்கிய நீண்ட கழுத்தையுடைய அவ்வொட்டாக மானது அன்போடும் கயிற்றை அசைக்காத வண்ணம் கொண்டு சென்றது.