பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்27

இற்று உறும் அருத்தியில் இயம்பினன்; இயம்பப்
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா,
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகி, சொல்
அற்று, உறும் அழுந் தொழில் அலால்,
                         எவனும் ஆற்றான்.

     இதையெல்லாம் சூசை குழந்தைநாதன் மீது கொண்டிருக்கும்
அன்பினால் சொல்லினான்; மேலும் சொல்ல விருப்பம் மிக்கு உணர்ந்த
பலவற்றையும் சொல்லமாட்டாமல், முதிர்ந்து தாக்கும் துன்பம் என்னும்
வெள்ளத்தில் முழுகி, பேச்சு அற்று, மிகுதியாக அழும் செயலை
மேற்கொண்டதே அல்லாமல் எவ்விதமாயும் தாங்க மாட்டாதவன்
ஆயினான்.

                     மரியாள் தேற்றுரை

     - மா, கூவிளம், -மா, கூவிளம்

             12
ஆசை வெற்புவீ ழரந்தை வாரியுட்
சூசை பட்டய்யச் சுழியின் மூழ்கலிற்
பூசை வாயினாள் புகற்கை தந்துர
மாசை யங்கரை மருவச் சொல்லினாள்.
 
ஆசை வெற்பு வீழ் அரந்தை வாரியுள்
சூசை பட்டு, அய்யச் சுழியின் மூழ்கலின்,
பூசை வாயினாள் புகல் கை தந்து, உர
மாசை அம் கரை மருவ, சொல்லினாள் :

     ஆசை என்னும் மலையினின்று விழும் துன்பம் என்னும் வெள்ளத்தில்
சூசை அகப்பட்டு, ஐயம் என்னும் நீர்ச்சுழியில் மூழ்கி வருகையில்,
இறைவனை எப்பொழுதும் பூசனை புரியும் வாயை உடைய மரியாள் தன்
வார்த்தையாகிய கையைத் தந்து, மன உறுதி என்னும் பொன் மயமான
கரையை அவன் அடையும் படி, பின் வருமாறு சொல்லத் தொடங்கினாள் :

             13
உருக்குங் காலுல குயிரெ லாங்கெட
முருக்குங் காலமே முடிந்து போயருள்
பருக்குங் காலமாய்ப் புரந்து பாதுகாத்
திருக்குங் காலமென் றிளவ லாயினான்.