பக்கம் எண் :

392திருவேங்கடமாலை

ஸ்ரீ

திருவேங்கடமாலை.

"திரு" என்னும் பலபொருளொருசொல் - வடமொழியிலே "ஸ்ரீ" என்பதுபோலத் தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞான நூல்கள் மந்திரங்கள் புண்ணியஸ்தலங்கள் புண்ணியதீர்த்தங்கள் முதலிய மேன்மையை யுடைய பலபொருள்களுக்கும் விசேஷணபதமாகி, அவற்றிற்கு முன்னே மகிமைப் பொருளைக் காட்டி வரும்; ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபக்திசாரர் ஸ்ரீராமாயணம் ஸ்ரீஅஷ்டாக்ஷரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீகைரவிணி ஸ்ரீபாதம் எனவும், திருமால் திருமழிசைப்பிரான் திருவாய்மொழி திருவெட்டெழுத்து திருவரங்கம் திருவல்லிக்கேணி திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக. இனி, இதனை, ஸ்ரீ என்பதன் சிதை வென்பாரும் உளர். இது வேங்கடத்துக்கு அடைமொழி; மாலைக்கு அடைமொழியாகவுமாம்.

வேங்கடம் என்பது - திருமாலினது திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத் திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலதும், "கோயில் திருமலை பெருமாள்கோயில்" என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகின்ற மூன்று ஸ்தலங்களுள் இடையது மாகிய தலம். தன்னை அடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால், "வேங்கடம்" எனப் பெயர் பெற்றது; வடசொல். வேம் - பாவம், கடம் - எரித்தல் எனப் பொருள் காண்க. இதனை, "அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசல மெனும் பேர், வைத்தன ரதுவே தென்னில் வேமென வழங்கெழுத்தே, கொத்துறு பவத்தைக் கூறுங் கடவெனக் கூறிரண்டாஞ், சுத்தவக்கரங் கொளுத்தப்படு மெனச் சொல்வர் மேலோர்", "வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ் சீர் வேங்கடமலை யான தென்று" என்னும் புராணச்செய்யுட்களாலும் அறிக. ஸ்ரீசைலத்தின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் பிராமணோத்தமனது குமாரனாகிய மாதவனென்பவன் தன்மனைவியாகிய சந்திரரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக்கொண்டிருக்கையில் மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக் கண்டு காமுற்று அவளைக் கூடி மனையாளைத் துறந்து அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து பின்பு வழிபறித்தல் உயிர்க்கொலை முதலிய கொடுந்தொழில் புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக்கொடுத்து வந்து முடிவில் வறியவனாகிப் பலவகை நோய்களையும் அடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந் தொடரப் பித்தன்போல அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்த மாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று முன்னைய பிரமதேஜசைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபத மடைந்ததனால் இதற்கு "வேங்கடாசலம்" என்னும் பெயர் நிகழ்ந்ததென்று