பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்105

காளை நான்

வழக்கம்போல்
காளை
தென்னை மரத்தில்
கட்டப்பட்டுள்ளது அதன் கொம்புகளுக்கு
வண்ண மணிகள்
கழுத்துக்குக்
குலுங்கும் சலங்கை
வயிற்றைச் சுற்றி
திருஷ்டிக் கயிறு
அசை போட்டபடி
காளை
அமைதியாயிருந்தது
நான்
என் குளிர்க்கண்ணாடிகளுடன்
பக்கத்தில் இசைப்பெட்டி
சில புத்தகங்கள்
நாமிருவரும்
ஒரே தளத்தில்
இருப்பதாய்
மனம் அசை போட்டது
சிறிது நேரத்தில் மூக்கணாங்கயிற்றுடன்
பிணைத்திருந்த
கயிற்றை அவிழ்த்து
வண்டிக்காரன் சென்றுவிட்டான்
காளையும் நகர்ந்துவிட்டது
என் மூக்கைத் தொட்டுப் பார்த்தேன்
கயிற்றை இழுப்பவர்களை நினைத்ததும்
அடிவயிற்றிலிருந்து
பெரும் பீதி தோன்றிற்று
ஆயினும் எனக்கு நிம்மதி
எனக்கு மூளை இருக்கிறது
மனம் அமைதியாய் இருக்கிறது