பக்கம் எண் :

128ஆத்மாநாம் படைப்புகள்

புறநகர்

யாரையும் எதிர்பார்க்காத நாள்
பெரிதாய் வேலை ஏதுமில்லை
சில பக்கங்களைப் புரட்ட முடிந்தது
இசைப்பொட்டி இயங்கிற்று
பொழுது நகர்ந்துவிட்டது
மாலை
படிக்கட்டில் அமர
உலகம் வியர்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தது
எரிபொருள் பொறுக்கும் குறத்தி
பள்ளிப் பெண்கள் சீருடையின்றி
காகிதம் தின்னும் ஆவினங்கள்
வேலையில் கசங்கி முகம் கோணிய மனிதர்கள்
திரும்பும் பேருந்துகளில்
சற்றே தெளிந்த முகங்கள்
புறப்படும் பேருந்துகளில்
என் வானொலித்துக்கொண்டிருக்கிறது
சிறிய நிறுவனங்களில் அமைதி நிலவுகிறது
மாலை இதழ்கள்
பரபரப்புடன்
திரித்துக்கொண்டிருந்தன
தேனீர்க் கடைகளில்
அரசியல்
சூடாகக் கிடைக்கிறது
கட்சி வேறுபாடின்றிப்
பொது மக்கள்
திருப்தியாயிருக்கிறார்கள்
வெளிப்படையான
கலவரம்
குழப்பம்
தெளிவின்மை
எதுவுமின்றி
நகர்ப்புறம்
அமைதியாகவே
ஊர்கிறது