பக்கம் எண் :

174ஆத்மாநாம் படைப்புகள்

ஒரு நிஜக்கதை

ஒரு நாள் இரவு
நிர்மலமான வானத்தின்
நட்சத்திரங்களை
எண்ண ஆரம்பித்தேன்

ஒரு மாபெரும் மனிதனாகி
எவரும் முயலாத
வேள்வியைத் துவங்கினேன்

எண்ணி எண்ணி எண்ணி
ணிண்எ ணிண்எ ணிண்எ
ண்எணி ண்எணி ண்எணி

சுத்த சரியாய் இருக்கையில்

திடீரென்று எங்கிருந்தோ
ஒரு நட்சத்திரம் வந்தது
அதையும் சேர்த்தேன்
மீண்டும் ஒன்று
இப்படியாக
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
வந்துகொண்டேயிருந்தன
ஓய்ந்தனாய் ஓய்ந்தனாகி ஓய்ந்தனானேன்
நான் குறித்து வைத்திருந்த
அந்த எண்ணிக்கைச் சீட்டை
கிழித்து எறிந்தேன்
நிர்மல வானத்தில் நட்சத்திரங்கள்
கண் சிமிட்டி
தம்மையே சிமிட்டிக்கொண்டன
நான் என் மூலையில் சுருண்டிருந்தேன்