பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்75

ஒரு கற்பனைக் கவிதை

கற்பனையிலேயே செத்துப்போ என்றது மனம்
நானும் செத்துப்போனேன்
கற்பனை உலகில் உயிர் வாழ்ந்தேன்
எல்லோரும் சந்தோஷமாய் இருந்தார்கள்
நானும் என் நண்பர்களும்கூட
அற்புதமான ஓவியங்களைப் பார்த்தேன்
நெஞ்சின் ஆழத்திலிருந்து
துவங்கிய இசையைக் கேட்டேன்
உன்னதமான கலை இலக்கிய வடிவங்களை
தரிசித்தேன்
உண்மையான கவிதைகளை எழுதினேன் படித்தேன்
முழுமையான இதழ் ஒன்றை நடத்தினேன்
ஒரு நாள் என் சாய்வு நாற்காலியில்
அமர்ந்துகொண்டிருக்கும்பொழுது
என் மனம் கேட்டது
எப்படி இருக்கிறாய் என்று
நன்றாய் இருக்கிறேன்
பசிதான் தீரவில்லை என்றேன்