பக்கம் எண் :

52சோழமண்டல சதகம்

          ஓர்கயல் பாயும்அவன்
திண்ணையும் கெண்டை புரட்டும்கல்
          யாணத்தில் சென்றவர்க்கே

என்பதாகும்.

இராமாயண அரங்கேற்றம்

திண்மை ஏறும் கம்பனிடம்
          செய்யத் தகுமென் சிறப்பீந்து
நன்மை ஏறும் இராமகதை
          நற்பேர் புவியில் தழைத்தேற
உண்மை ஏறும் திருவரங்கத்து
          ஒருவன் சபையில் உத்தரநாள்
வண்மை ஏற அரங்கேற்றி
          வைத்தார் சோழ மண்டலமே
71

சோழ நாட்டார் கவிவல்ல கம்பருக்குச் சிறப்புக்கள் பல தந்து இராமகாதையின் புகழ் உலகில் சிறக்கத் திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமான் முன்னிலையில் பங்குனி உத்தர நாள் அன்று அரங்கேற்றம் செய்தனர்.

எண்ணிய கோத்தம் எண்ணூற் றேழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய ராம காதை பங்குனி உத்தர நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே

என்பது பழம்பாடல். இதில் குறிக்கப்பட்ட காலம் கி.பி. 885.

சடையன் புகழ்

எட்டுத் திசையும் பரந்துநிலா
          எறிக்கும் கீர்த்தி ஏருழவர்
சட்டப் படும்சீர் வெண்ணெய்நல்லூர்ச்
          சடையன் கெடிலன் சரிதமெலாம்
ஒட்டிப் புகழ ஆயிரநா
          உடையாற்கு அன்றி ஒருநாவின்
மட்டுப் படுமோ அவன்காணி
          வளம்சேர் சோழ மண்டலமே
72

உலகெங்கும் நிலவொளி பரந்துள்ளதுபோல் உழவர் புகழ் எங்கும் பரவியுள்ளது. அவருள் ஒருவரான வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் புகழை ஆயிரநாவு படைத்த ஆதிசேடனாலும் உரைக்க முடியாது அதனை ஒரு நாவில் எவ்வாறு உரைக்க முடியும்?