பக்கம் எண் :

சோழமண்டல சதகம்53

வண்ண மாலை கைபரப்பி
          உலகை வளைந்த இருள்எல்லாம்
உண்ண எண்ணித் தண்மதியம்
          ஒத்து நிமிர்ந்த நெடுநிலா
விண்ணும் மண்ணும் திசையனைத்தும்
          விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணெய் சடையன்தன்
          புகழ்போல் எங்கும் பரந்துளதால்

என்பது கம்பர் பாடல் (பால. மிதியைக் காட்சிப்படலம் - 73).

இணையார மார்பன்

தீரம் பெரிய தென்னர்பிரான்
          சிங்கா தனத்தில் சேருமிவன்
ஆரென்று உரைப்ப நம்பிஇணை
          யார மார்பன் அடியேற்கும்
சாரும் சரரா மனுக்குமொரு
          தம்பி எனக்கம் பண்புகழும்
வாரம் பெறுவெண் ணெயர்பெருமான்
          வளம்சேர் சோழ மண்டலமே
73

ஒருமுறை கம்பர் சோழனை வெறுத்துப் பாண்டியனிடம் இருந்தார். அவரை அழைத்துவரச் சோழன் அனுப்பிய இணையார மார்பன் மதுரை சென்றான். இணையார மார்பனைப் பார்த்துப் பாண்டியன் ‘இவன் யார்’ என்று கேட்கக் கம்பர் சடையப்ப வள்ளலுக்கு இளையானான இணையார மார்பனைத் தன் தம்பி என்று கூறினார்.

என்னுடைய தம்பி சரராம னுக்குஇளையான்
கன்னன் மதயானைக் கம்பன்மகன் - துன்னும்
பணையார்நீர் வேலிப் பழனம்சூழ் சோணாட்டு
இணையார் மார்பன் இவன்

என்பது கம்பர் பாடிய பாடலாகும்.