பக்கம் எண் :

20

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

மொத்திக் கரைசேர்த்தல்போல, ஆன்மகோடிகளைத் தம் அருட்பெருக்கால் பிறவியிற் புகுத்திப் புகுத்திப் பேரின்பக் கரைசேர்ப்பவர் என்பது பற்றிச் சிவபெருமானை ‘அலையெறி அமுதவாரிதியே’ என்றார்.               

(13)

14. உன்பத மேத்தித் துன்பவே ரறுக்க
        உலகினிற் திருவுடன் வாழும்
    மன்பதைக் கெல்லாம் எய்திடுந் தரமோ!
        வலியவந் தெனைத்தடுத் தாண்டுள்
    அன்புவந் தொருவ ரறிந்திடா அறிவும்
        அறிவுறுத் தருளினை அதற்கு
    முன்பெது புரிந்தேன்? கருவையம் பதிவாழ்
        முதல்வனே! முக்கண்வா னவனே!

    திருக்கருவை யென்னும் திருப்பதியில் வாழும் முதல்வனே! மூன்று கண்களையுடைய தேவனே! உனது திருவடியைத் துதித்துத் துன்பத்தை வேரோடறுக்க, உலகத்தில் செல்வத்தோடு வாழும் மக்களுக்கெல்லாம் வாய்க்குந் தரமோ? (அம்மக்களுள் ஒருவனாகிய) என்னை (நீ தானே) வலியவந்து தடுத்து அடிமைகொண்டு, நின் உள்ளத்தில் (என்பால்) அன்புகொண்டு மகிழ்ந்து ஒருவர் அறிய ஒண்ணாத மெய்யறிவையும் அறிவுறுத்தருளினாய். அச் செயலுக்கு, முற்பிறப்பில் என்ன (நல்வினை) செய்தேன்? (நானறியேன்.)

    திரு-செல்வம். மன்பதை-மக்கட்பரப்பு.

    செல்வம் ஆன்மாவை ஆணவாந்தகாரத்துள் அழுத்தி அது காரணமாகத் தோன்றும் அறியாமையே பற்றுக்கோடாகப் பலவகைத் துன்பங்களையும் தரும் என்பது பற்றி, ‘ திருவுடன்வாழும் மன்பதைக்கெல்லாம் துன்பவேரறுக்க எய்திடுந்தரமோ ’ என்றார். துன்பவேராவது அறியாமை. அறியாமையை அறுக்க வல்லது அறிவேயாதலால் ‘ அறிவும் அறிவுறுத்தருளினை ’ என்றார்.             

(14)