பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

41

ஈண்டு வாய் என்றது இதழ்களை. ‘ திரிமலம் இற்றது ’ என்றது பன்மையில் ஒருமைவந்த வழுவமைதி. மூவகையாகப் பிரிவுபடும் மலம் என்னின் வழாநிலையே யாம். மும்மலங்களுள் ஆணவம் என்பது உயிர்களை அனாதியேபற்றி முத்திநிலையி லும் அணுத் தன்மைப்பட்டு ஒடுங்கிக் கிடப்பதல்லது ஆன்மாவைவிட்டு அகலாத இயல்பிற்று ; ஆதலால் இது சகசமலம் என்றும் கூறப்படும். சகசமாவது இயற்கை. மாயை என்பது உயிர்களுக்கு ஆணவத்தின் வலியைக் கெடுத்துப் பேரின்பப்பேற்றை அளித்தற்குச் சாதனமாக இறைவனது திருவருட்சத்தியால் தொழிற்படுத்தப்படும் தனுகரணபுவனபோகங்கள் தோன்றி ஒடுங்குவதற்கு இடமாகும் முதற்காரணம். கன்மம் என்பது ஆணவ இருளிற் கட்டுண்டு செயலற்றுக் கிடந்த ஆன்மா, இறைவனது அருட்குறிப்பால் பேரின்ப முத்திநிலை எய்தற்பொருட்டு மாயாகாரியமான தனு கரணாதிகளோடு பொருத்தப்பட்ட வழி அறிவு விளக்கமுறத் தொடங்குதலானே அவ் வறிவுவிளக்கத்தின் பக்குவத்துக்கேற்றவாறு நிகழ்த்தும் வினை. இக் கன்மமும் மேற் கூறப்பட்ட மாயையும் ஆன்மாவைச் செயற்கையாக இடையேவந்து பற்றுவனவாதலின் இவை இரண்டும் ஆகந்துகமலம் எனப்படும். ஆகந்துகமாவது செயற்கை. ‘ இயற்கை சகசஞ் செயற்கையா கந்துகம் ’ என்பது பிரயோக விவேக உரைச்சூத்திரம்.

    ஆன்மாவினை அணுத்தன்மை செய்துநிற்றலானும், ஆன்மாவின் முத்திநிலையில் அதனை அணுத்தன்மைசெய்து நின்ற தான் அணுத்தன்மைப்பட்டு நிற்றலானும் ஆணவம் எனப்பட்டது. தனு கரணபுவனபோகங்கள். தோன்றி ஒடுங்குவதற்கு இடமாதல்பற்றி மாயை எனப்பட்டது ; மா=ஒடுங்குதல், யா=வருதல். இச்சா ஞானக் கிரியைகளால் உண்டாம் தொழில் கன்மம் எனப்பட்டது; கன்மம்=தொழில்=வினை.

    ஞானக் கண்ணைப் பாசவிருள் மூடியிருந்ததாதலால், அப்பாசம் அகலவே ஞானக்கண் திறந்ததென்பார் ‘ மலமிற்றது ; கண் திறந்தது ’ என்றார்.

(31)