பக்கம் எண் :

42

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

32. பாடி னேன்புகழ் ; பங்கயச் சேவடி
        சூடி னேன்;கரு வாபுரிச் சோதியை
    நாடி னேன் அவன் நான்எனும் வேறற ;
        கூடி னேன் அடி யார்திருக் கூட்டமே.

    (இறைவனது) புகழை எடுத்துப் பாடினேன்; அவனது செவ்விய திருவடித் தாமரைகளைத் தலையிற் சூடினேன் ; திருக்கருவாபுரியில் எழுந்தருளிய ஞான தேஜோமயனை அவன் நான் என்னும் வேறுபாடு அகலத் தியானித்தேன் ; (அவனது) அடியவர் திருக்கூட்டத்தோடு கலந்திருந்தேன்.

    பங்கயம்-தாமரை.

    பாடுதல், வாக்காற் செய்யும் வழிபாடு ; சேவடி சூடுதல், மெய்யாற் செய்யும் வழிபாடு ; சோதியை நாடுதல் மனத்தாற் செய்யும் வழிபாடு : எனவே மனமொழிமெய்களாற் செய்யக் கடவ மூவகை வழிபாடுகளும் கூறினார்.

(32)

33. கூட்ட மிட்ட கருவி குலைந்திடச்
        சேட்டை யற்றுள் அறிவு சிதையுமுன்
    நாட்டம் மூன்றுடை நாதன் முகலிங்கன்
        தாட்டு ணைக்கம லம்தலைக் கொண்மினே.

கூட்டம் கூட்டமாகக் கூடிய சத்தமுதலிய தத்துவங்கள் தத்தம் நிலையினின்று தடுமாற அத் தத்துவக் குறும்புகளொழிந்து உள்ளிருக்கும் அறிவு கெடுதற்குமுன்னமே, சோமசூரியாக்கினி என்னும் மூன்று கண்களையுடைய தலைவனும் திருமுகம்வாய்ந்த லிங்கவடிவினனுமாகிய இறைவனது இரண்டு திருவடிகளாகிய தாமரைகளைத் தலையிற் சூடுங்கள். (பெறுதற்கரிய பேற்றைப் பெறுவீர்கள்.)