பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

43

    கருவி-(அறிதற்) கருவிகளான சத்தம் பரிசம் முதலிய தத்துவங்கள். சேட்டை-சேஷ்டை-குறும்புச் செயல். கொண்மின்-கொள்ளுங்கள்; மின் ஏவற்பன்மை விகுதி.

    யாக்கை நிலையன்றாதலால் கருத்துள்ளபோதே  சிவபெருமான் திருவருட் காட்படுமின் என்றார்.

    காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
    பாலுண் கடைவாய் படுமுன்னே-மேல்விழுந்தே
    உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
    குற்றாலத் தானையே கூறு.

என்ற பட்டினத்தடிகள் திருவாக்கையும் காண்க.

(33)

34. தலைக்கொள் வெண்தலை மாலையன், தண்ணிலா
        மிலைக்கும் தென்கரு வாபுரி வேதியன்,
    புலைக்கு ரம்பை யுடம்பிற் குடிபுகுந்(து)
        அலைக்கும் நெஞ்சம் ஒழித்தேனை ஆள்வனே.

    முதன்மை வாய்ந்த பிரமன் முதலியோரது வெளுத்த மண்டையோடுகளை மாலையாக உடையவன், குளிர்ந்த இளஞ்சந்திரனைச் சூடும் சடாமுடியை உடையவன், தென் திசையிலுள்ள திருக்கருவையில் கோயில்கொண்டேழுந் தருளிய வேதநாயக னாகிய சிவபெருமான், (ஆன்மா உறையும்) கீழ்மையாகிய குடிலாயுள்ள என்னுடம்பில் தான் குடியேறி, (என்னைக்) கலக்கும் மனத்தை ஒழித்து என்னை அடிமைகொள்வான்.

    தண் நிலா-குளிர்ந்த சந்திரன். மிலைக்கும்-சூடும். புலை-கீழ்மையான, குரம்பை-சிறுகுடில்.

    கலக்கும் மனத்தை ஒழித்தலாவது, மனக்கலக்கத்தை ஒழித்தல் ; அஃதாவது நிலையற்ற சிற்றின்பங்களை நாடிச் சிதர்ந்து பல முகப்பட்டு அலையும் மனத்தை ஒரு முகப்படுத்திச் சிவபெருமான் திருவடிமீது நிலைத்து நிற்கச்செய்தல்.