பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

77

    கிட்டுதற்கரிய தவங்களைச் செய்து, நான் சரீரம் வருந்த மாட்டேன்; (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று) எண்ணப்படுகின்ற ஐந்து புலன்களையும்  அழித்து, அதனால் விளையும் நல்வினை தீவினைகளை வேரோடறுக்கமாட்டேன் ; பரந்த நிலவுலகு துதிக்க, திருக்களா நிழலில் விரும்பி வாழும் இறைவனே ! அடியேனாகிய யான் இனிப் பிழைக்கும் வகை, எவ்வகை ?

    நண்ணரும்-கிட்டுதற்கரிய; செற்று-அழித்து; (செறு - பகுதி; உறு-உற்று, குறு-குற்று என்பவற்றிற்போல றகரம் இரட்டித்து நின்று இறந்தகாலங் காட்டிற்று); கண் அகல்-இடம் அகன்ற.

    இருவினை-நல்வினை,   தீவினை. ஆன்மாவைப் பிறவியிற் கட்டுப்படுத்தலில் நல்வினை பொன்விலங்கும் தீவினை இருப்பு விலங்கும் போல்வனவாதலின் ‘இருவினை அறுக்கமாட்டேன்’ என்றார்.

    வருத்தமாட்டேன், அறுக்கமாட்டேன்-எதிர்மறைத் தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று; மாட்டு வன்மையுறுத்தற் பொருளில் வந்த விகுதி, என் தன்மை யொருமை விகுதி, எதிர்மறை ஆகாரங்கெட்டது சந்தி.

(67)

68. உய்யவோ ருறுதி நாடா
        உலகினிற் சமய மென்னும்
    வெய்யஆர் கலியின் வீழிந்து
        வெந்துய ருழக்கின் றேற்குத்
    தையலோர் பாகம் வைத்துத்
        தண்டமிழ்க் கருவை வாழும்
    ஐயன்வந் தாண்டு கொண்ட
        ததிசயம் விளைக்கு மாறே.

    கடைத்தேற ஒரு பற்றுக்கோட்டை நாடி, உலகில் வழங்கும் புறச்சமயங் களென்னும் கொடிய கடலில் வீழ்ந்தழுந்தி, கொடிய துன்பத்தில் வருந்துகின்ற எனக்கு,