பக்கம் எண் :

76

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

திருக்களா நிழலில் எழுந்தருளிய இறைவனே !  இழிந்த எனது மனமென்னும்பேய், எல்லாப் பொருளுந் தானென்னும் வடிவமைந்து, சங்கற்பத்தையும் விகற்பத்தையுங் கொள்ளுதலால், விண்ணுலகமாகியும், மண்ணுலகமாகியும், கடல்களாகியும், மலைகளாகியும், செய்த இந்திர சாலத்தினால் நான் உனது இயல்பை யறியா தொழிந்தேன்.

    சங்கற்பமாவது ஒருபொருளைக் கருதுதல்; விகற்பமாவது இது வானன்று மண், இது மண்ணன்று வான் என ஒன்றற்கொன்று வேறுபாடு காணும் பேத உணர்ச்சி.

    யான் வேறு; என் காட்சிக்கட்படும் மாயாகாரியமாகி மண் முதலிய பஞ்சபூதங்களாலான இவ்வுலகம் வேறு; எனக்கும் என்னைப்பற்றிய மாயைக்கும் இடந்தந்து யாண்டும் என்றும் வியாபகமாகி மாயையினை முதற்காரணமாகப் பயன்படுத்தலல்லது அதனோடு பற்றிலதாகி உலகிற்கு நிமித்தகாரணமாகி என்னை ஆண்டருளும் இறைவன் வேறு;  அந்த ‘அருளுடைய பரமென்றோ அன்றே நானுளன், எனக்கே ஆணவாதி பெருகுவினைக் கட்டென்று அருணூல்’ கூறிய முப்பொருளுண்மை உணராமல் யானே யாவும் என்னும் மாயாவாதப் பித்துரையில் மயங்கி உன்னை உணரேனாயினேன் என்பார் ‘ஈனமாம் மனப்பேய், தானென உருவமாகிச் செய்த இந்திரசாலந்தன்னால் நானுனை உணரமாட்டேன்’ என்றார்.

(66)

67. நண்ணருந் தவங்கள் செய்து
        நானுடல் வருந்த மாட்டேன்;
    எண்ணுமைம் புலனுஞ் செற்றங்
        கிருவினை யறுக்கமாட்டேன்;
    கண்ணகன் ஞாலம் போற்றக்
        களாநிழ லமர்ந்து வாழும்
    அண்ணலே! இனியெவ் வாறோ
        அடியனேன் உய்யு மாறே ?