பக்கம் எண் :

8

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

நாள்தோறும் அழுந்திக்கிடக்கும் என்னையும் ஒரு பொருளாகக் கருதி ஆட்கொண்ட ஞானவடிவனே! தமிழ் வழங்கும் திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரிபவனே ! (உன் பெருங்கருணைத் திறத்தை என்னென்பேன் !)

    வேனிற்காலம் மன்மதனுக்கு உரியதாதல்பற்றி, அவற்கு ‘வேனிலாளி’ ‘வேனிலான்’ எனப் பெயர் வழங்கும். சிலை-வில். வேள்-மன்மதன். தொடுதல்-எய்தல். கணை-அம்பு. கவற்சி-கவலை-மனச்சுழற்சி ; கவி, கவர், கவண் முதலிய மொழிகளை இதனோடு ஒட்டி நோக்குக. பானல்-நீலோற்பலம்.

    காமம் முதலிய இழிகுண வசத்தால் உண்டாம் துயராதலின் 'ஈனத் துயரக் கடல்’ என்றார். ‘எனையும்’ என்றதில் உம்மை இழிவு குறிப்பது.

(4)

5.  நடித்தேன் பொய்க்கூ(டு) எடுத்(து), அவமே
        நன்னாள் கழிய ; இந்நாளில்
    படித்தேன் உனது திருநாமம் ;
        பண்டை வினையின் பற்றறுத்தேன் ;
    பிடித்தேன் பிறவிக் கடல்நீந்தப்
        பெரிய புணையா உனதடியை ;
    முடித்தேன் உள்ளத்(து) எண்ணமெல்லாம் :
        கருவை வாழும் முன்னோனே !

    திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் முதல்வனே, பொய்யான இச்சரீரத்தை எடுத்து நல்ல நாட்கள் யாவும் வீணே கழிய (மெய்ந்நிலையில் நிற்காது, பொய்யாக) நடித்து ஒழித்தேன், (இளமை கழிந்த) இக் காலத்தில் தான் உனது திருநாமங்களை ஓதினேன் ; (அதனால்) எனது பழவினையின் தொடர்பை விலக்கினேன் ; பிறவியாகிய