பக்கம் எண் :

92

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
        அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
    ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
        உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
    பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
        பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
    காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
        காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே.

என்னும் தேவாரத் திருவாக்கினும்,

    ஊட்டுவிப் பானும் உறங்குவிப் பானுமிங் கொன்றொடொன்றை
    மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
    காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின்வழி
    ஆட்டுவிப் பானும் ஒருவனுண் டேதில்லை யம்பலத்தே.

என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கினும் காண்க.  இறைவன் உயிர்களைப் பாவைபோல் ஆட்டுவது கன்மக்கயிற்றின் வழியே என்பதும் ஈண்டுப் பெறப்   பட்டது காண்க.  திரையைநீக்கிப் பார்ப்போர்க்குப் பொம்மலாட்டி புலப்படுவது போல மாயையாகிய திரையை நீக்கிக் காண வல்லார்க்கு இறைவனும் புலப்படுவன் என்க. இக் கருத்தானே ‘ மாயையெனும் திரையை நீக்கி நின்னையார் காணவல்லார்’ என்றார் பிறரும்.

(83)

84. நடித்த தாள்களும் நகைமணி
        முறுவலும் முகமும்
    பொடித்த வேர்வெழும் புருவமும்
        அருள்விலோ சனமும்
    முடித்த தண்பிறை வேணியும்
        முகலிங்கன் மழுமான்
    பிடித்த செங்கையும் காண்பவர்
        புவியிடைப் பிறவார்.