பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

29

திற் கிலக்கான மெழுகுபோல் கரைதல் இயல்பாதலால் ‘கனிந்திட’ என்றும், உறைத்து நின்ற மனம் நெகிழ்ந்து விரிதலே இன்பத்திற் கேதுவாதலின் ‘களிகூர’ என்றும், இன்பானுபவத்தால் அவ்வின்பத்திற்குக் காரணமான ஞானத்தில் தெளிவு பிறத்தலின் ‘போதமுற்றிட’ என்றும், ஞானவிளக்கமாகவே அறியாமை காரணமாக ஏற்பட்ட யான் என்னும் அகப்பற்றும் எனதென்னும் புறப்பற்றும் கொண்டெழுந்த ஆணவமயக்கம் அகலுதலின் ‘புலைச்செருக்கறமாற’ என்றும் கூறினார். இது காரணமாலையணி.

(21)

22. முடிக டந்தது ககனகோ ளகைநெடு
        முகட்டினுக் கப்பாலும் ;
    அடிக டந்தது பாதலம் ஏழினுக்
        கப்புறத்(து); அனலோடும்
    துடிகள் தந்தகை கடந்தன திகந்தமால்:
தொல்புகழ்க் களாவீசன்
    பொடிகள் தந்தபால் மேனியன் திருநடம்
        புகலுதற் கெளிதாமோ !

    ஆகாயத்தாற் சூழப்பட்ட அண்ட வட்டத்தின் நெடிய சிகரத்திற்கு அப்புறத்தும் திருமுடி கடந்தது ; பாதாள உலகம் ஏழினுக்கப்பாலும் திருவடி சென்றது ; திசை முடிவில் அக்கினியும் உடுக்கையும் அணிந்த திருக்கரங்கள் சென்றன : (ஆதலால்) தொன்றுதொட்டுள்ள புகழ்வாய்ந்த திருக்களாநீழலில் எழுந்தருளிய ஈசனும், விபூதியை யணிதலால் வெள்ளிய திருமேனியை யுடையனுமாகிய இறைவனது திருநடனத்தின் பெருமை எடுத்துக் கூறுதற்கு எளிதாகுமோ. (ஆகாது என்பது கருத்து.)

    ககனம்-ஆகாயம். கோளகம்-அண்ட வட்டம். முகடு-உச்சி. அனல்-(சிவபெருமான் திருக்கரத்தில் ஏற்றருளிய யாக) அக்கினி. துடி-உடுக்கை. திகந்தம் -திக்கு அந்தம்-திசை முடிவு. ஆல்-அசை. தொல் புகழ்-பழைமையான புகழ். பொடி-நீறு.