அப்பதவி நினக்குரிய இன்பவுருவமல்லவோ? (ஆம்) வன்னியா லுண்ணப்பட்ட பொருள் எல்லாம் தூய்மையாம் என்று கருதியே நீ சுவைத்த உன் எச்சிற் கனிகளை எவரும் உண்கின்றார். குற்றமில்லாதவர் எவரும் இனிய சொற்களையே கற்பார். நீயோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என மதியாமல் யார் சொல்லும் எவ்வகைச் சொல்லையும் கற்றுக் கொள்வாய். நீ பேசுவதைக் கேட்டு உன்னைப்போல் பேசவல்லவ ரொருவருண்டோ? (எவரும் இலர்.) (வி - ம் ) சுகம் என்பது கிளிக்குப் பெயர் ; இன்பத்திற்கும் பெயர். சாயுச்சியம் என்பது நாலாம் பதவி ; அஃது இறைவனோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்கும் நிலை. உன்வடிவே சுகவடிவு என்றார். இதனாற் சாயுச்சியபதவி நின்னுருவந்தான் என்பது கருத்து. வன்னி என்பது கிளிக்குப் பெயர் ; நெருப்பிற்கும் பெயர். தீயிற்பட்ட பொருள் யாவும் வெந்து தூய்மையாகும் என்று கருதியோ வன்னி என்னும் பெயர் கொண்ட உன் வாயிற்கடித்த பழமாகிய எச்சிலையும் விரும்பி உண்கின்றார். இது வியப்பே என்றபடி. கிளி கடித்த பழம் கீழே கிடந்தால் அதனைக் கொம்பிற் பழுத்த பழமென்று கூறி விரும்பி எவரும் உண்பது கண்கூடு. அது கருதியே இதனைக் கூறினர். குற்றமில்லாத பெரியோர் இனிய சொற்களையே கற்பார்கள்; வன்சொல்லைக் கல்லார். நீயோ யார் யார் என்ன என்ன சொன்னாலும் அவற்றை அப்படியே கற்றுச் சொல்கின்றாய் எனவும், உன் சொல்லைக் கற்க வல்லார் ஒருவரும் இலர் எனவும் அதன் ஆற்றல் கூறினர் எனக் காண்க. பொற்பு - அழகு. இஃது ஈண்டு நற்பண்பை யுணர்த்திற்று, மக்கட்கு அழகாவது அதுவேயாதலின். பரிசித்த - தீண்டிய. உருசித்த - சுவைத்த. துரிசு - குற்றம். 17-20 : நின்போலத் தள்ளரிய யோகங்கள்....விழித்திடாய் (சொ - ள்.) உன்னைப்போல ஒருவராலும் தள்ள முடியாத யோகப் பயிற்சி செய்யாமலே எப்போதும் பச்சைப் பிள்ளையாய் வாழ்ந்த பெரியோர் யார்? (ஒருவரும் இலரே.) அறிஞர் உள்ளத்தால் உணர்ந்து கண்ட திருமாலைப்போலப் பூமியில் உள்ளோர் வாட்டம் நீங்கப் பாலனத்தாலே நீ பசி | | |
|
|