பக்கம் எண் :

418நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

ணென்றோ மனையா ளென்றோ) கருதாது (இரக்கமின்றி) விட்டுச் சென்ற நேரத்தில், தனியே நின்று என் நினைந்தாய் என்னா புலர்ந்து புலம்பினாள் - நீ தன்னந் தனியாக நின்று கொண்டு எவ்வாறான எண்ணங் கொண்டாயோ என்னென்ன கூறிக்கொண்டு தவித்தாயோ என்று சொல்லி வாட்டமுற்றுக் (கண்ணீர்விட்டு) அழுதாள்.

(க - து.) தமயந்தியின் தாய், தமயந்தியைப் பார்த்து, ‘என்அரிய மகளே! உன்னை உன் கணவன் அஞ்சத்தகும் இருட்டிலே தன்னந் தனியே விட்டுச் சென்றபோது நீ என்ன நினைந்தாயோ ? என்ன செய்தாயோ ?’ என்று கூறிப் புலம்பிக் கண்ணீர் விட்டு அழுதாள் என்பதாம்.

(வி - ரை.) பனி - நடுக்கம். அஃதாவது அச்சம் ; அல்லது இரவுக் காலத்தில் பனி பெய்வது இயற்கை ; வெளிச் சென்றால் கை கால்கள் நடுங்கும்படி குளிர் மிகுதியாக இருக்கும் ; அதனால் பனி நீர் பெய்கின்ற இருள் என்றலுமாம். ‘உன்னை நினையது’ என்றமையால் கணவன் என்ற சொல்லை இசை யெச்சமாக வருவித்துப் பொருள் கூறப் பெற்றது. ‘என் செய்தாய், என் நினைந்தாய்’ என்பன, தாய்மை உள்ளத் துடிப்பை உணர்த்துகின்றன. என்னை ?

1‘பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளைப்
பெறாமலடி யறிவாளோ ?’

என்ற தாயுமான அடிகளார் செம்மொழிக்கேற்ப ‘முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட் சுமந்து’ பெற்ற தாயாகலான், அத்தாய்மையின் உள்ளம் தன் மகளைக் காண்டொறும் காண்டொறும் கரைந்து துன்பம் அலை அலையாய் வந்து வந்து தன் மனத்தை நெகிழ்ப்ப வருந்தும் நிலையைச் சுட்டுகின்றது. தாய்மை உள்ளம் பெரிது ; உரியது ; சிறந்தது ; அவ்வன்பு கட்டற்ற ஒன்று. இவ்வுள்ளப்பாங்கை அழுது அழுது தொழுது தொழுது ஆண்டவன் இணையடி பற்றிய மணிமொழிப் பெருந்தகையார், ஆண்டவன் பேரிரக்கப் பண்பினையும், அவன் தமக்கு அருள் சுரந்து பெருந் துறையிடத்துப் பெருஞ்சீர்க் குருந்த மரநீழலில் ஆட்கொண்டு, சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கிய சிறப்பையும் வியந்து பாராட்டித், திருவாசகமென்னும் ஒருவாசக மறையில் குறிக்குங்கால், பிற உலகிலுள்ள எப் பொருளையும் உவமை காணாராய் இத்தாய்மைப் பண்பினையே,

1. தாயுமானவர் பாடல், பெற்ற : 1.