சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற் றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம். | 128 |
| | |
ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல் ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். | 129 |
| | |
கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய் புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம். | 130 |
| | |
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில் பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். | 131 |
| | |
தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம். | 132 |
| | |
பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம். | 133 |
| | |
ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம். | 134 |
| | |
காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம் பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம். | 135 |
| | |
ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின் நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம். | 136 |
| | |
குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப் பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம். | 137 |
| | |
மத்தடுத்து நின்று மருளாடு வார்போல பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம். | 138 |
| | |
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ் வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம். | 139 |
| | |
என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின் தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம். | 140 |
| | |
உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக் கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம். | 141 |