ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம். | 156 |
| | |
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம். | 157 |
| | |
அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம். | 158 |
| | |
இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம். | 159 |
| | |
ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந் தானாகி நின்ற தனையறியவ தெக்காலம். | 160 |
| | |
என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம். | 161 |
| | |
இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச் சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம். | 162 |
| | |
மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம். | 163 |
| | |
என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம். | 164 |
| | |
கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல் நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம். | 165 |
| | |
நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல் சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம். | 166 |
| | |
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம். | 167 |
| | |
கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல் வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம். | 168 |
| | |
கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல் உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம். | 169 |