11.சட்டை முனி ஞானம் - 4 பாலனாம் சிங்கள தேவதாசி பாசமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி சிறப்புடனே குவலயத்தில் பேருண் டாச்சு போகர் ஏழாயிரம் 5875 இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதம் சிங்கள நாட்டு தேவதாசிக்கும் தமிழருக்கும் மகனாகப் பிறந்தவர். பிழைப்புத் தேடித் தமிழகம் வந்தனர். விவசாயக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினார். வேலையில்லா நாட்களில் சட்டைமுனி கோயில்களில் தட்டு ஏந்தி யாசகம் பெற்றும் தம் தாய் தந்தையர்க்கு உதவி வந்தார். உரிய வயது வந்ததும் சட்டை முனிக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அவர் மனம் இல்லறத்தில் லயிக்கவில்லை. ஒருநாள் கோயில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த ஒரு சித்தரைத் தரிசித்தார். அவரிடமிருந்து அபூர்வ சக்தியை அறிந்த சட்டைமுனி அவருடன் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டார். பின் போகரின் சீடராக வாழ்ந்தார். அப்போது கொங்கணர், கருவூரார் தொடர்பு கிட்டியது. பொதுவாகச் சித்தர்கள் தங்கள் கருத்துகளை மறைவாக பரிபாஷையிலே எழுதினர். ஆனால் சட்டை முனி அனைவரும் புரியும் வகையில் நேரடியாகவே எழுதினார். |