கைகளைக் காட்டிவிடு - ரத்தக்
கறைகள் படிந்ததும்
ஏன்!
பொய்கொள வாழ்ந்தவனே - நெஞ்சில்
பூட்டிய வஞ்சகம் ஏன்?
நாவில் புழுத்துருளும் - பாப
நஞ்செனும் சொற்களுடன்
கூவித்திரிவதும் ஏன்? - கொலை
கொள்ளையைத் தூண்டிடவோ?
குழந்தைகள் தூங்குகிறார் - உன்றன்
கூச்சல் நிறுத்திவிடு!
பழகிடும் அன்னையின் கை - தர்மம்
பாலிக்கும் நேரமிது!
சென்றிட்ட யுத்தத்திலே - அவள்
செல்வமகன் தனையே
கொன்றிட்ட பாதகனே - உன்றன்
கூக்குரல் நின்றிடட்டும்!
யுத்தம் தொடுத்திடவே - வெறி
யூட்டிய பாதகனே!
கொத்திடும் பேய்க்கழுகே - கொடுங்
கூக்குரல் நின்றிடட்டும்!
ஊரும் உறங்குதடா - சுவை
யூட்டும் அமைதியிலே
போருக்கெவர் வருவார்? - நீ
போய்விடு சாவுலகம்!
ஆற்றுநீர் ஓடுதடா - குளிர்
ஆனந்தத் தென்றலிலே!
காற்றில் மிதக்கும்இசை - தனில்
காதல் மிதக்குதடா!
|