பக்கம் எண் :

80தமிழ்ஒளி கவிதைகள்2

எத்தும் வழி வகுத்தார்

புத்தர் அசோகர், புகழ்நபி ஏசு
புனித மிகும் காந்தி -
இத்தகு, ஞானச் சுடர்கள் எழுந்தும்
‘இருளர்’ எனும் கொடியோர்,
பித்தர் அரக்கர் பெருங்கொலை மூடர்
பிசாசென ஆடுகின்றார்!

கட்சிகள் கட்டிக் கலாம்விளைத் துக்கொலைக்
கத்தியைத் தீட்டுகிறார்,
ரட்சகர் போற்பல நாடகம் ஆடி
நரித்தனம் காட்டுகிறார்!
புத்தர் திருப்பெயர் உச்சரிப்பார் அவர்
போர்வை தனைப்பிரித்தால்
எத்தனை யோலபல பாபக் கறைகள்
இருந்திடும் தோல் உரித்தால்!

சீடர்கள் செய்யும் திருச்செயல் காணத்
திரும்பப் பிறந்துவரின்
நாடகம் கண்டு கிறிஸ்து துடிப்பார்;
நபி, விஷமும் குடிப்பார்!
‘நாட்டைப் புரக்கும்’ அமைச்சர் மனைகளில்
நம்மரும் காந்தி அண்ணல்,
மீட்டும் பிறந்திடில் தம்மையே சுட்டுயிர்
விட்டுப் பறந்திடுவார்!

‘போற்றும் குறள்வழி’ செல்பவரோடு
துணைவரின் வள்ளுவரும்
‘ஆற்றில் விழுந்து மடிந்திடுதல் அறம்’
ஆமென் றுரைத்திடுவார்!

வித்தகர் மண்ணிற் பிறந்து பிறந்துநல்
வேதந் தனைவகுத்தார்,
இத்தரை மீதுபின் பற்றிய சீடர்கள்
எத்தும் வழிவகுத்தார்!

‘மனிதன்’ - 1954