பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 85

கோவாவில் கொடுமை!

சுதந்தரக் கொடி
பறந்திடும் எனில்
சுட்டு மடிக்கின்றார்! - அன்னியர்
சுட்டு மடிக்கின்றார்!

இதந்தரும் மனை
மக்கள் துடித்தழ
எம்முயிர் வேகிறது! - தோழர்
தம்முயிர் போகிறது!

வந்த பிரஞ்சியர்
ஆங்கிலர் ஓடினர்
வழிதடு மாறிடவே - இரு
விழிதடு மாறிடவே!

வெந்த மனத்திடை
வெள்ளையர் இன்னமும் - 
வீசுவதோ தழலை - நாம்
பேசுவதோ மழலை?

எத்தனை ஆண்டுகள்
ரத்தம் சொறிந்தபின்
இவ்விடுதலை பெற்றோம்? - நாம்
இவ்விடுதலை பெற்றோம்?

பித்தர் இருந்தினி
நம்மை அடக்கிடும்
பீழை பொறுத்திடவோ? - இதை
ஏழை பொறுத்திடவோ?

இந்திய மண்ணில்
இருந்திடு ‘கோவா’ 
எத்தனை நாள் அடிமை? - இன்னும்
எத்தனை நாள் அடிமை?