பக்கம் எண் :

64மலரும் உள்ளம்

காந்தி சொல்

காந்திசொல் கேட்டிடுவாய் - அவர்
   காட்டும் வழிநடப்பாய்.
சாந்தமாய் வாழ்ந்திடுவாய் - என்றும்
   தருமமே காத்திடுவாய்.

மெய்ம்மையே பேசிடுவாய் - அதனால்
   மேன்மை அடைந்திடுவாய்.
கைராட்டை சுற்றிடுவாய் - நல்ல
   கதரை உடுத்திடுவாய்.

நாட்டிற் குழைத்திடுவாய் - என்றும்
   நன்மையே செய்திடுவாய்.
ஏட்டிலே கண்டஉண்மை - தன்னை
   ஏற்று நடந்திடுவாய்.

ஏழைக் கிரங்கிடுவாய் - அவர்
   இன்னல்கள் போக்கிடுவாய்.
வாழையைப் போலவேநீ - எல்லா
   வகையிலும் உதவிடுவாய்.