தேசியத்
தலைவர்கள்
லோகமான்ய பால கங்காதர திலகர்
|
நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
நாட்டினோர் தம் கலையிலும் அவ்வவர்
தாம கத்து வியப்பப் பயின்றொரு
சாத்தி ரக்கட லென்ன விளங்குவோன்;
மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்
பூம கட்கு மனந்துடித் தேயிவள்
புன்மை போக்குவல் என்ற விரதமே. |
1 |
நெஞ்ச கத்தொர் கணத்திலும் நீங்கிலான்
நீத மேயொர் உருவெனத் தோன்றினோன்
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை
மாய்க்கு மாறு மனதிற் கொதிக்கின்றோன்
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்பொ டோதும் பெயருடை யாரியன் |
2 |
வீர மிக்க மராட்டியர் ஆதர
மேவிப் பாரத தேவிதிருநுதல்
ஆர வைத்த திலக மெனத்திகழ்
ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே. |
3 |
{[குறிப்பு]:
இப்பாடல் ஸ்ரீமான் எம்.வி. ஈசுவர ஐயர் 1908இல் வெளியிட்ட ஸ்ரீ திலகரின் ஜீவிய
சரித’த்தில் உள்ளது.} |