பக்கம் எண் :

மகிழ்ச்சி வேண்டுமா?

    வேண்டுமா? மகளே வேண்டுமா?
    மகிழ்ச்சி வேண்டுமா? இன்பம் வேண்டுமா?

தூண்டா மணிவிளக்கே சொல்லுவேன் கேள் உனக்கே
துணைவனோடு நீதான் இணை பிரியாதிருக்க (வேண்டுமா?)

கறி சமைத்துச் சோறாக்கியுன்
    கணவனுக்கிடும் முன்பு-நின்
    கருத்தினிலே மகிழ்ச்சி தோன்றும்
    அது தாண்டி அன்பு!
வெறுக்காமல் உன் அத்தான் உண்டு மகிழ்ந்தபின்பு
மெல்லியேஉன் வாழ்க்கை இனிக்கும் செங்கரும்பு (வேண்டுமா?)

    கண்ணாளன் வெளியிற் சென்று
    திரும்புவதும் உண்டு-தன்
    காரியம் கை கூடாமையால்
    வருந்துவதும் உண்டு.
பண்ணொன்று பாடடி இன்பக் கற்கண்டு
பரிமாறு துயர்தீரும் அது நல்ல தொண்டு (வேண்டுமா?)







( 5 )




( 10 )





( 15 )

எழில்மிகு தமிழ்நாடு

எல்லாம் இருந்த தமிழ்நாடு
    படிப்பில்லாமல்
பொல்லாங் கடைந்தது பிற்பாடு,
சொல்லும் இயற்கை தரும் செல்வம்
    இல்லை என்னாமல்
நெல்லும் சுவை முக்கனி
நெய் பால் கரும்பு வெல்லம் (-எல்லாம் இருந்த...)

தென்றல் சிலிர்க்க வரும் சோலை
தனிற்குயிலும்
தேன்சிட்டும் பாடும் அங்கு மாலை
    மணக்கும் மலர்




( 20 )





( 25 )

ஒன்றல்ல மூலைக்கு மூலை
   தெருக்கள் தொறும்
ஒரத்தில் நிழல் தரும் சாலை
   இடையிடையே
தென்னை மாதுளைகள் வாய்ப்பு
   வாழை மரத்தில்
தேனாகத் தொங்கும் பழச்சீப்பு
   விளா இலந்தை
எந்நாளுமே கொடுக்கும் காய்ப்பு
   குலுங்கும் எலி
மிச்சை நாவல் எங்கும் தோப்பு
   உலகினிலே
எங்கும் இல்லை இப்படி
   என்பது கவிஞர் தீர்ப்பு! -எல்லாம் இருந்த...


( 30 )




( 35 )




( 40 )

விடுதலை ஆசை
(தனித்தமிழ் வண்ணம்)

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா
கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிட மீளும் அழகோனே !
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யேஎன் இளையோய் நீ!
பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ ?
பிறர்நலம் நாடி ஒழுகினை யாக
இருசெவி வீழ மகிழேனோ!
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
என எனை நீயும் அழையாயோ!
ஒரு தமி ழேந முயிரென யாரும்
உணர்வுறு மாறு புரியாயோ ?
உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு
பெறஉனதாசை பெருகாதோ!




( 45 )




( 50 )




( 55 )



( 60 )

நாட்டியல் நாட்டுவோம்!

தென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்?
நாவலந் தீவென நவிலுவார் கண்ணே!

தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்.
செவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே
எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்
நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்?

பழைய நம் தீவில் மொழி, இனம்பல உள.
மொழியினின்று கல்வி முளைத்தது
கல்வி இந்நாட்டில் கணக்காயர்களைக்
கலைஞரை, கவிஞரைத், தலைவரைப், புலவரை
விஞ்ஞானிகளை விளைத்தது-ஆயினும்
கற்றவர், கல்லாரிடத்தும் கல்வியைப்
பரப்ப முயலவில்லை பாழிருள்

விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்.
கற்றவர் சிலர், கல்லாதவர் பலர்.
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம்
என்பது கற்றவர் எண்ணம் போலும்
எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர்)
எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே!

என்ன அத்தான், நீங்கள் இப்படிக்
கற்றாரை எல்லாம் கடிந்து கொள்கின்றீர்?
கற்றாரைத் திட்டவில்லை, கல்வி
அற்றார்க்கு இரக்கம் காட்டினேன் அன்பே!
கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு.
யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில்
யாவர்க்கும் கல்வி இருக்கவேண்டும்.
கண்ணிலார் எண்ணிலார் என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல் இருப்பதா!
கல்லா வறியார்க்குக் கைப்பொருள் கல்வியே!
இல்லை என்பது கல்வி இல்லாமையே!
உடையவர் என்பவர் கல்வி உடையரே!
நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர்
உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார்
சிலர் படித்தவர் பலர் படியாதவர்
என்ற வேற்றுமை ஏன் வரவேண்டும்?
ஆட்சி வேலை அதிக மிருக்கையில்
நாட்டிற் கட்டாயக் கல்வி, நாளைக்கு
ஆகட்டும் என்பவர் மக்கள் இன்று
சாகட்டும் என்று சாற்றுகின் றவரே!
எந்நாளுமே நான் எண்ணுவது இதுதான்;
இந்த நாட்டில் யாவரும் படித்தவர்
என்னும் நன்னிலை ஏற்படுவதெந்நாள்?

நாவலந் தீவில் மதங்கள் நனிபல!
கடவுளே வந்து மதம்பல கழிறினார்
கடவுளின் தூதரும் கழறினார் மதங்கள்
கடவுளிற் கொஞ்சம் மனிதரிற் கொஞ்சமும்
கலந்த ஒருவரும் ஒருமதம் கழறினார்
கடவுளை நேரிற் கண்டவர் சொன்னார்
கேள்விப் பட்டவரும் கிளத்தினார்.
ஒருவர் "கடவுள் ஒருவர என்பார்.
ஒருவர் 'கடவுள் மூவர்' என்பார்.
ஒருவர் 'கடவுள் இல்லை' யென்றுரைப்பார்.
நாம் பெற்ற பேறு யார் பெற்றார்கள்
ஒரு மதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த்
திருவருள் புரிந்த பெரியோரும் பலர்;
மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில்
விதம்பல சேர்த்த வித்தகரும்பலர்.

நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும்
இருக்கலாம் இன்னும் பெருக்கலாம் எனினும்
மதங்கள் வேறு மக்கள் வேறு
மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்
இந்நில மக்கள் அவ்வெழிற் சட்டையின்
உட்புறத் துள்ள மனிதரைக் காண்க.
அந்த மனிதர் இந்தப் பெருநிலம்
ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம்
அறிந்து பயனிலை உணர்ந்தால் ஒற்றுமை
நிலைபெறும்; கலகம் அறவே நீங்கும்.
பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும்
நாங்கள் ஒன்றுபட்டோம் என்று நவின்றால்
மதங்களின் தலைவர் விரைந்து வந்து
பிரிந் திருங்கள் என்றா பிதற்றுவர்?
அவர்கள் அருள் உளம் கொண்டவர் அல்லரோ?

நாட்டியல் என்னும் நல்ல தங்கத்தேர்
நன்னிலை நண்ண வேண்டாமா? சொல்,
எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால்
செல்லரும் நிலைக்குச் செல்லல் இலேசு.

பல இனம் பல மொழிபற்றி ஓரு சில;-
பழம்பெரு நிலத்தில் பலமொழி பல இனம்
இருப்பதால், இஃதொரு பல்கலைக் கழகம்!
ஆனால், தேனாய்ப் பேசும் திருவே,
ஒரினத்துக் குள்ள மொழியைப்
பலஇனத் துள்ளும் பரப்ப முயல்வதால்
நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற
கோட்பாடு சரி என்று கொள்வதற் கில்லை.
அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச்
செம்மை செய்து செழுமை யாக்கி
இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும்

ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்
என்பதென் எண்ணம் கன்னல் சாறே!
இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின்
மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை
மொழிப்பற்றி னின்று பிரிப்பது முயற்கொம்பு.
அன்னை மொழியையும் படி அதனோடு நான்
சொன்ன மொழியையும் படி எனும் சொற்கள்
கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ?

ஆங்கிலன் தனக்குன் அடிமையை நோக்கி
ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன்
என்றான். நாட்டில் இலக்குமண சாமிகள்
தமிழ் மறந்து ஆங்கிலம் சார்ந்து தமிழைக்
காட்டிக் கொடுக்கவும் தலைப்பட்டார்கள்.

இந்த நிலத்தில் அடிமை இல்லை
ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா?
கைக்குறிகாரர் கணக்கிலர் வாழும்
இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல்
எவ்வாறு இயலும்? அமைதி என்னாகும்?
நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப்
பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ
பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி
பிரிய நினைத்தவர் பிழை உணர்கின்றனர்
பெருநிலத்தில் ஒரே கொடி பறந்தது!

நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்

இமையச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான்
ஒருவர்க்கு வந்தது அனைவர்க்கும் என்ற
மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்!

இமயம் மீட்கப் பட்டதிதோ பார்
சீனன் செந்நீர் கண்ணீராக
எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி!

விளைச்சற் குவியல் விண்ணை முட்டியது
தொழில் நலம் கண்டோம்-தேவை
முழுமை எய்திற்று-வாழ்க அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்தே!






( 65 )





( 70 )



( 75 )






( 80 )






( 85 )




( 90 )





( 95 )




( 100 )



( 105 )




( 110 )




( 115 )





( 120 )




( 125 )




( 130 )





( 135 )





( 140 )




( 145 )





( 150 )





( 155 )





( 160 )





( 165 )




( 170 )






( 175 )





( 180 )





( 185 )

வள்ளுவர் வழி

வாழ வழி வகுத்தார் வள்ளுவனார் தமிழ்
             மறை புகன்றார் நல்ல
             முறை நவின்றார்
             நம்மனோர்
வாழ வழி வகுத்தார் வள்ளுவனார்.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் என்றார்.
      -வாழ வழி வகுத்தார் வள்ளுவனார்

ஏழைக் கிரங்காததும் சரியா? நாட்டின்
எளிமை கண்டு கூத்தாட ஒரு நரியா?
இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான் கண்டனைத்துஇவ்வுல கென்றார் வகுத்தார் வள்ளுவனார்.






( 190 )





( 195 )

துன்ப உலகிலும் தொண்டு!

எடுப்பு

துன்ப உலகம் என்று புத்தர்பி ரானும்
சொன்னதில் பொய்யில்லை ஒருதுளி யேனும்!


துணை எடுப்பு

அன்பினால் செய்யும் மக்கள் தொண்டு
வன்பினை நீக்க வழிசெய்தல் உண்டு.

( 200)

அடிகள்

நல்லவரை மாய்க்கக் கெட்டவர் இருப்பார்
நாடாண்ட மன்னரைக் காடாளப் பிரிப்பார்
செல்வக் குழந்தைகளின் கழுத்தையும் முறிப்பார்
செந்தமிழ்த் தாய்நலம் செல்லாய் அரிப்பார்!
தமிழர்க்குத் தலைவர் தமிழையே கொல்வார்
தடுத்தாலும் தம்வரி சரி என்று சொல்வார்
உமக்காக உழைக்கின்றோம் என்றும் சொல்வார்
ஊரைஏ மாற்றுவதில் தாமே வெல்வார்!
தூங்கித் தூங்கிமக்கள் தீயரை வளர்ப்பார்
தூங்காம லேவந்த தீமையில் குளிப்பார்
ஆங்கிலம் இந்தியை அழைத்தே களிப்பார்
அவர் சொல்லை ஒப்பியே பிறகுத்த தளிப்பார்.
வாணிகம் என்பது வஞ்சகக் கிடங்கு
வளர்ந்த அலுவல் கைக்கூலி அரங்கு
நாணற்க அஞ்சற்க ஊதுக சங்கு
நமக்குண்டு நாட்டுக்குத் தொண்டிலே பங்கு!




( 205 )




( 210 )




( 215 )

-

தொழனே! உன்னிடம் சொல்வேன்!

அமிழ்தென்று சொன்னால் இனிமையைக் குறிக்கும்
அந்த இனிமை செந்தேன், கரும்பு
முப்பழம் முதலிய இயற்கையில் தொன்றும்.
ஆயினும், ஆடவர் உழுது வித்தி
விளைத்து மலைபோல் குவித்த நெல்லைத்
தூய மாதர் தமி.ழ்ப்பண் சொல்லிக்
குத்திய அரிசி பாலிற் குழையப்
புத்துருக்கு நெய்யும் வெல்லமும் புணர
ஏலமும் பருப்பும் ஞாலம் மணக்கத்
தோலுரித் திட்ட பழத்தொடும் அன்பொடும்
இலையி லிட்ட பொங்கலில் இனிமை
அலையடிக்கும்! அதனைத் தமிழர்

அமிழ்தென் றுண்பர் தமிழென்று பாடுவர்!
அதென்ன மோஎன் அகத்தில்இந் நாளில்
புதிய மகிழ்ச்சி கண்டேன்; அதுபோல்
உனக்கும் உண்டே அன்புறு தமிழனே!
என்னிடம் தீய நினைவுகள் இல்லை !
உன்னையும் அவை ஒட்ட வில்லை.
தன்னலமில்லை, உனக்கும் அஃதில்லை.
உறவினர் தமிழர் உரக்கப் பாடினார்.
மகிழ்ச்சியால் ஆடினார். நாமும் அப்படி!
என்றன் நெஞ்சை இதோ பார் தோழனே!
ஒன்றை உன்னிடம் சொல்ல எண்ணிற்று;
நீ ஒருநீளத் திரைப்படம் எழுதுவோன்.
நீயே எண்ணி நீயே எழுதுக!
உள்ள மதனை உறுதியால் தோண்டினால்
வெள்ளப் புதுக்கருத்து விரைந்து பாயும்.



( 220 )




( 225 )





( 230 )




( 235 )




( 240 )




அயலார் பாட்டின் அடியைத் தொடாதே
அயலார் பாட்டின் சிலசொல் அகற்றி
உன்பாட் டென்றே உரைக்க வேண்டாம் !
பிறரின் கருத்தைப் பெயர்த்தெழு தாதே
பிறரின் பேச்சின் சொல்தொட வேண்டாம்.
அடியைத் திருடிச் சொல்லைத் திருடிப்
படிந்த வழக்கம் அயலார் படைத்த
நூலையே திருடும் நோயும் ஆனதே!
அதனால் அயலார் தமிழ கத்தை
மதியார் அன்றோ? பொங்கல்
புதுநாள் போற்றடா! வாழ்த்தடா மகிழ்ந்தே!
( 245 )




( 250 )



( 255 )

புத்தர் புகன்றார்

பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன
என்பதால் எதையும் நம்பிவிடாதே
உண்மை என்றுநீ ஒப்பிவிடாதே!
பெருநாளாகப் பின்பற்றப்படுவது
வழக்கமாக இருந்து வருவது
என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே
உண்மை என்று நீ ஒப்பிவிடாதே!
பெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர்
இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர்
என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே!

பின்பற்றுவதால் நன்மையில்லை!
ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர்
இனிய பேச்சாளர் என்பதற்காக
எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்!
ஓருவர் சொன்னதை உடன் ஆராய்ந்துபார்
அதனை அறிவினாற் சீர் தூக்கிப்பார்
அறிவினை உணர்வினால் ஆய்க! சரிஎனில்
அதனால் உனக்கும் அனைவருக்கும்
நன்மை உண்டெனில் நம்பவேண்டும்
அதையே அயராது பின்பற்றி ஒழுக!





( 260 )




( 265 )





( 270 )




( 275 )

இவ்வுண் மைகளை ஏற்று நீ நடந்தால்
மூடப்பழக்க வழக்கம் ஒழியும்
சமையப் பொய்கள் அறிவினாற் சாகும்!

இவைகள் புத்தர் பெருமான்
உவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே!!





( 280 )

நன்று இது-தீது எது?

விலை பெரிது; சுடர் மிகுதி;
வயிர மணி நன்று-ஆனால்
விற்கறையும் கிளிக்காலும்
இருந்தால் அது தீதே!

தலைசிறந்தது; நிலையுயர்ந்தது
தமிழ்ச்சுவடி நன்றே-ஆனால்
தழுவத்தகா வடவர் கொள்கை
இருந்தால் அது தீதே!

கலையுயர்ந்தது; பயன்விளைப்பது
திரைப்படந்தான் நன்றே-ஆனால்
காலொடிந்தவன் நடித்ததென்றால்
நாலு நாள் ஒடாதே!

துலையில் ஏற்றிப் பெரியார்க்கே
எடைப் பொருள்தரல் நன்றே-ஆனால்
தொட்டால் கையில் ஈமொய்க்கும்பே
ரீச்சம்பழம் தீதே!






( 285 )





( 290 )





( 295 )

பொன்னான இயக்கத்திற்குத்
தலைமைப் பதவி நன்றே-ஆனால்
பொறுக்கித் தின்ன வந்தவனைப்
புகுத்துவதால் தீதே!

தன்மானம் காத்து வரும்
தந்தை திறம் நன்றே-ஆனால்
தறுதலைகள் சேர்க்கபட்டால்
எதிர்காலம் தீதே!

எந்நாடும் போற்றுகின்ற
தமிழ்நாடு நன்றே-ஆனால்
இருட்டறையில் தமிழ்மக்கள்
இருப்பதுவும் தீதே!

உன்னும் கோவில் ஊர்தோறும்
இருப்பதுவும் நன்றே-ஆனால்
உருவ வணக்கம் இருக்கட்டும்
உமிழும் தணல் குன்றே!



( 300 )






( 305 )




( 310 )

எது கலை?

கலை எனும் செந்தமி.ழ்ச் சொல் கலை ஆயிற்றாம்
   'கலை' தன்னைக் 'கலா' என்றார் வடவர் பின்நாள்!
கல்லை எனல் நற்றிறத்தின் பயனாம், மற்றும்
   கலை என்று சொன்னாலும் அதே பொருள்தான்.
கல்வி எனல் அறிவாகும்; அறிவே கல்வி
   கலை என்றால் கல்வியல்ல; ஒருவற்குள்ள
வெல் அறிவின் தனி ஆற்றலால் பிறக்கும்
   வியத்தகுமோர் பொதுச்செல்வம் இன்பப்பேறு!

கலைதோன்றும் வகை தன்னை விளக்கமாகக்
   கழறுகின்றேன் கருத்தாகக் கேட்க வேண்டும்
அலைதோன்றும்; ஆழ்புனலின் நெளிவிலெல்லாம்
   அசைகின்ற ஒளிதோன்றும் ஆங்கே வானில்
விலையில்லா மாணிக்கப் பரிதி தோன்றும்;
   விழிகொண்டு பருகுகின்ற கவிஞன் நெஞ்சில்
மலிமகிழ்ச்சி தோன்றும்; அம் மகிழச்சி தன்னில்
   மாபடைப்புத் திறந்தோன்றும்! கவிஞன் ஆங்கே



( 315 )




( 320 )





( 325 )


படைத்திட்டான் சிலசொல்லாற் கவிதை ஒன்று
   படித்திட்டோம் அதனை நாம்; அறை வீட்டுக்குள்
கடல்கண்டோம், கதிர்கண்டோம்; அழகு கண்டோம்.
   கசப்புலகை மறந்திட்டோம் அன்றோ? நம்மைக்
கடிதுலகை மறக்கச் செய்ததுதான் யாது?
   கடலின் பந்தனிற் சேர்த்ததெது? வையத்து
நடைமுறையின் சொல்லல்ல; சொல்லுகின்ற
   நல்லாற்றலின் விளைவு! கலை அஃதாகும்.

என் நண்பர் பகவதியாம் நடிகர் ஒர் நாள்
   எழிலுறும் நாடக அரங்கை அடைந்தார் ஆங்கே
என் நண்பர் அடையாளம் மறந்தேனில்லை
   இடர் சூழ்ந்தானை நோக்கி அறம் விளக்கும்
சொல் மழையைச் சினங்கூட்டி, மெய்ப்பாடேற்றித்
   தொடங்கினார்; விழிப்புற்ற ஏழைத்தோழன்
தனைக்கண்டேன் பகவதியை மறந்தேன்
   மறக்கவைத்ததெது? அதுதான் கலையாம் அன்றோ!

( 330 )




( 335 )





( 340 )



ஒழுக்கம் விழுப்பம்தரும்!

நன்றியறிதல் ;

     என்றுமே ஒருவர் செய்த
     நன்றியை மறக்காதே
     இந்நாட்டின் பண் பாட்டைத்
     துறக்காதே!

பொறையுடைமை

     உன்னைப் பிறர் வைதாலும்
     உன் பொறுமை கெடவேண்டாம்
     உனக்கொரு தீங்கு செய்தால்
     விடவேண்டாம்.

இன்சொல் ;

     தமிழ் மொழியைப் பழிப்பவனைத்
     தாக்காமல் விடாதே
     தனிமுறையில் கடுமொழியைத்
     தொடாதே!

இன்னா செய்யாமை ;

     தீயவர்க்கும் ஒரு தீங்கும்
     செய்யாமல் விலக்குவாய்
     தாய் நாட்டை வருத்துவோரைக்
     கலக்குவாய்

கல்வி ;

     தமிழ்க்கல்வி கற்க வேண்டும்
     அமிழ்தாக நன்றன்றோ
     அயல் மொழியை ஆதரித்தல்
     தீ தன்றோ?

( 345 )






( 350 )






( 355 )






( 360 )






( 365 )


ஒப்புரவு ;

     நமக்கென்ன என்றிராதே
     நமில் ஒருவன் நைகையில்
     நறுக்கு வாய்பகைவர் தீங்கு
     செய்கையில்.

அறிவுடைமை ;

     சாதியால் சமையங்களால்
     அறிவு தழைக்காது
     தமிழ் நூலில் மடமையே
     இருக்காது.

மெய்ந்நெறி ;

     ஆதியில் இருந்ததில்லை
     ஆரியப் பொய்ந்நெறி
     ஓதும் தமிழ் காட்டுவதே
     மெய்ந்நெறி!
( 370 )






( 375 )






( 380 )




ஏன் நரைக்கவில்லை?
[பிசிராந்தையார் விடை]

மிகப்பல ஆண்டுகள் ஆகியும் மேனியில்
நரையே இல்லையே! இந்த நன்னிலை
எப்படி எய்தினீர்? என்று கேட்டோர்க்குப்
பிசிராந்தையார் இசைப் பாராயினார்;
மாட்சிமைப்பட்ட குணங்கள் வாய்ந்த என்
மனைவி அறிவு நிரம்ப வாய்ந்தவள்!
அன்புறு புதல்வரும் அத்தகை யோரே !

( 385 )




( 390 )

என்னுடை ஏவலாளர் தாமும்
யான் எண்ணியது-அவர் எண்ணும் இயல்பினர்!
இறைவனோ முறை செய்து காக்கும் மேலோன்!
என்னூரின் கண் இருக்கும் குடிகள்
பணியத் தகுமிடம் பணிபவர் நன்றே!
அமையத் தகுகுணம் அனைத்தும் அமைந்தவர்.
கல்வி நிறைந்தவர் கற்றதன் பயனாய்
நாவைச் சுவைக்கே அடிமை ஆக்கார்;
உடம்பு பயன் மடந்தைக்கே என்னார்
கண்ணில், காட்சி வெறி கொண்டு திரியார்;
மூக்கு நறுமணம் தோய்த்துக் கவிழார்;
காதை இசையினில் அளவொடு கவிப்பவர்;
எனவே,
ஆன்றவிந் தடங்கிய கொள்கையுடைய
சான்றோர் மிகப் பலர்! ஆதலால்
ஏன் எனக்கு நரைக்கும்? இயம்புவீரே!
             ( இது புறம் 'யாண்டு பலவாக' என்ற
              தொடக்கச் செய்யுளின் உரைவிளக்கம். )



( 400 )




( 405 )




( 410 )


கடன்பட உடன் படேல்

உடற் பயிற்சி விடுதியில் ஒள்ளியோன்
எடையில் மிகுந்த இரும்புக் குண்டை
ஒருகையால் தூக்கி உயர்த்திக் காட்டினான்
ஐந்து பாரம் ஆன ஒர் தூணை
ஏந்தி இருகையால் உயர்த்தி இறக்கினான்
முடுக்கி விட்ட முழுவலி இயங்கியை
இடக்கை பற்ற இழுத்து நிறுத்தினான்!

இவ்வகை ஆற்றல் காட்டி இருக்கையில்
அவ்விடம் அவனை நண்பன் அணுகி, "நீ
பட்ட கடனுக்காகப் பச்சை
வட்டிக் கணக்குப் பார்த்த வண்ணமாய்த்
திண்ணையில் அமர்ந்துளான என்று செப்பினான்.

இதனைக்க கேட்ட ஒள்ளியோன் ஏங்கி
எதிரில் உள்ளதன் இல்லம் கிளம்பினான்.
ஒள்ளியோன் வாங்கிவைத்த ஒரு மணங்கு
பஞ்சு மூட்டையைத் தூக்கவும் அஞ்சி
ஆளிடம் அனுப்பச் சொல்லிப் போனான்.

( 415 )




( 420 )





( 425 )





( 430 )

உள்ளம் கடன் வாங்குகையில் உவப்புறும்
கொடுத்தவன் வட்டியொடு கேட்கையில் கொலைபடும்.
ஆதலின் அருமைத் தமிழரே கேட்பீர்,
கடன்படும் நிலைகளுக்கு உடன்பட வேண்டாம்.

"ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை" எனப் புகன்ற
தேவர் நன்னெறி புகலெனத்
தாவுக! தமிழகம் மீளுதற்பொருட்டே!



( 435 )