பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 6


(அரண்மனையில் அரசி மல்லிகையின் தோழியாகிய
தாமரை, அரசன் நேரே அரண்மனைக்கு வருவான் என்று
எண்ணி எதிர்பார்த்திருக்கிறாள்.)

                      (அறுசீர் விருத்தம்)

பறந்துகொண்டிருந்தாள் தோழி
மன்னவன் வரவு பார்த்தே
இறந்தாள் போல் இருப்பாளான
அரசிமல்லிகையி டம்போய்ப்,
"பிறந்தாற்போல இதோவந் திட்டார்
செத்தாராகியபி ரானார்!
வறண்டநெஞ்சால்அத்தானை
வரவேற்று மகிழ்க!" என்பாள்.

தெருப்புறம் விரைவாள் வேந்தர்
தென்னண்டைத் தெருக்க டக்க
ஒருநொடி போதும் அன்னை
உடைபூண வேண்டும் என்று
விருப்புடன் மகளிர் இல்லம்
ஓடுவாள்; விரைவில் மீள்வாள்;
மரத்திரு கிளைக்கு மாறும்
மணிச்சிட்டே ஆனாள் தோழி.

"வரட்டும்அவ் வஞ்ச நெஞ்சர்!
வரவேற்கு மோஎன் தோள்கள்?
ஒருபேச்சுப் பேசு மோஇவ்
வொண்டொடி செவ்வாம் பல்வாய்?
சிரிக்கட்டும், கெஞ்சி டட்டும்!
செந்தமிழ்க் காதற் பாட்டை
வருத்தட்டும்! எனைப்பன் னாட்கள் மறந்தாரை நானா ஏற்பேன்?"

எனமன்னி கூந்தல் நீவி
எதிரிற்கண் ணாடி பார்த்துக்
கனியிதழ் கடையில் மின்னும்
குறுநகை தனைம றைத்துப்
புனையணி உடைதி ருத்திப்
புதுநிலா முகில்விட்டாற்போல்
தனிவந்து தன்கண் ணாளன்
தாண்டும்முற் கட்டில் நின்றாள்.

முற்கட்டில் நின்ற மன்னி
முகம்வாடி அங்கு வந்த
"விற்புரு வம்சேர் கண்கள்
மின்னிடை கன்னற் பேச்சுப்
பொற்புறு தோழி, உன்றன்
பூரிப்புக் குறைந்த தென்ன?
பிற்போக்கு நேர்ந்த துண்டோ?
ஆகையால் பேசிடாயோ?

"மன்னவர் வருகின் றாரா?
வரவில்லை யோடி?" என்றாள்.
"அன்னையே மன்னர் தாமும்
அயலாரும் வந்த வண்டி
நன்னீரில் குருகு போல
நம்மனைப் பாங்கில் வந்து
வன்குரற் கழுதை யாகி
வடபுறம் மறைந்த" தென்றாள்.

தோழிதா மரைஇவ் வாறு
சொன்னது கேட்ட மன்னி,
"பாழாயிற் றவரைப் பார்க்கப்
பறந்தஎன் ஆசை! என்னை
வாழத்தான் வைத்தா ரா?என்
மதிப்பைத்தான் காத்திட்டாரா?
ஆழிசூழ் உலகில் எங்கே
அடுக்குமிக் கொடுமைக் கூத்தே?

"அரண்மனை தனைத் தாண்டிற்றா
அவர் வண்டி? உள்ளே மன்னர்
இருந்தாரா? பார்த்தா யாநீ?
என்னை ஈ தென்ன?" என்றே,
அரசிதன் மகளிர் இல்லம்
அடைந்தனள்! குறிஞ்சி நாட்டார்
அரசர் ஏன் தரும இல்லம்
அடைந்தாரென் றுள்ளம் நைந்தார்.







( 5 )




( 10 )





( 15 )




( 20 )





( 25 )





( 30 )




( 35 )





( 40 )




( 40 )




( 50 )






( 55 )




( 60 )





( 65 )

பிரிவு -- 7

(அரசனும் அரசனுடன் வந்த அயலாரும் தரும இல்லத்தில்
இன்ன செய்கிறார்கள் என்பது.)

தருமஇல் லத்தைச் சார்ந்த
தனியொரு மலர்வனத்துள்
திரையனும் கூட வந்த
சிறுவனும் மேடை ஒன்றில்
இரண்டுடல் ஒன்றாய்த் தோன்ற
இணைப்புறக் குந்தி மாலைப்
பருவத்தில் தோய்ந்தாராகிப்
பருவுடல் காணார் ஆனார்.

"நாவலந் தீவின் தென்பால்
நன்றான சென்னை விட்டு
யாவரும் காணா வண்ணம்
இரவினில் படகில் ஏறி
நாவாயை நடுக்கடற்கண்
நாம்பெற்றே அதைச்செ லுத்திக்
கூவெனச் குயில்கள் கூவும்
குறிஞ்சி்த்திட்டடைந்தோம் இன்றே!

"மூன்றுநாட் கப்பலோட்டம்
மூட்டிய உடலின் நோயை
வான்தொடும் பச்சைப் பந்தர்
மலர்வனம் தீர்த்த" தென்று
தேன் சுவை மொழியான் அந்தச்
செம்மலும் உரைத்தான்! மன்னன்.
"மான்விழி யாளே" என்று
வாய்ப்பேச்சுத் தொடங்கலுற்றான்.

"பெண்ணென்றே என்னை நீங்கள்
பேச்சிலும் குறிக்க வேண்டாம்.
நண்ணும்ஆண் உடையை நீக்கி
நானொரு பெண்ணே என்னும்
உண்மையை வெளிப்ப டுத்த
ஒண்ணுமோ? துறைமுகத்தில்
கண்ணெதிர் கண்டேன் நாட்டார்
காட்டிய உள்ளப் பாங்கை.

"அயலார் வருகை ஓர் 'தீ'
அதிலும்ஓர் பெண்ணை மன்னர்
மயலாகிக் கொணர்ந்தார் என்ற
மறைவுமே தெரிந்தால். அத்தீ
புயலோடு கலந்த தாகிப்
புரட்சியைச் செய்தல் திண்ணம்.
வெயில் கண்டேன் அமைச்சன் சொல்லில்!
வேல்காணேன் வேந்தர் கையில்.

"ஏசினான் அமைச்சன் எம்மை
எதிரினில் இருந்தீர் நீவிர்!
கூசினீர் இல்லை, தேளின்
கொடுக்கினை நசுக்க வில்லை;
ஆசைக்கு முடிசு மந்தீர்,
ஆட்சியை அவன்பால் தந்தீர்;
வீசிடும் வாள்சு மந்தீர்,
வெட்டுவோன் அமைச்சன் போலும்!"

என்றனள் விநோதை! மன்னன்
எழுந்தனன் தன்தோள் தட்டிக்
"குன்றாத சுவைக்கரும்பே
குறுக்கிட்டு நம்மின்பத்தை
என்றேனும் தடுப்பாராயின்.
அன்றேநான் அவரை மாய்ப்பேன்
அழகியே இன்னும் கேட்பாய்.

"நாவலந் தீவி லேதென்
நாட்டிலே சென்னை என்னும்
மேவிய நகரிலேஅவ்
விரிகடற் கரையி லேஇ
ராவிலே பகலைச் செய்யும்
இன்முழு நிலவி லேபூங்
காவிலே மயிலே போல்என்
கண்ணிலே அழகைச் செய்தாய்.

"உனைக்கூட்டி வந்த நற்சி
வானந்தர் சிவசம் பந்தர்
எனைக்காட்டித் தொலைவில் நின்றார்,
நீவந்தென் எதிரில் நின்றாய்
'தினைக்காட்டுக் கிளியே' என்றேன்,
தோளிலே வந்து சாய்ந்தாய்;
பனைக்காட்டில் இணைந்த அன்றில்
பறவைகள் ஆனோம் நாமே!

"இன்றைக்குப் பெற்ற இன்பம்
என்றைக்கும் பெறுதல் வேண்டும்
நன்றொத்து வாழ வேண்டும்
'நாம்'" என்றாய் வினோதா; நானோ,
'என்சொத்து நின்சொத்' தென்றேன்;
'என்னுயிர் நின்ன' தென்றேன்;
'என்னுடல் நின்ன' தென்றேன்;
என்னுளம் உனக்கே தந்தேன்!

"உனக்கொரு தீமை நேர்ந்தால்
உயிர்தந்து காப்பேன்! மண்ணில்
எனக்குநான் வாழ வில்லை
இங்குனக் கேவாழ் கின்றேன்;
நினைக்காதே எனக்கெதிர்ப்பு.
நினைப்பவர் எவரு மில்லை;
பனிகண்டால் நடுங்கும் அந்தப்
படுகிழம் சொல்எண்ணாதே!

"என்னாசை தான்இந் நாட்டின்
எல்லாரின் ஆசை யாகும்."
தின்னத்தெ விட்டா இன்பத்
தேன்அளாம் தினையின் மாவே!
உன்னைத்தான் நான்வியந்தேன்;
ஊரினர் இதைஅறிந்தால்,
என்எண்ணம் ஆதரிப்பார்;
எந்நாளும் தொழுவார் உன்னை!

"அமைச்சன்சொல் அறிவி லான்சொல்;
ஆயினும் விடேன்அன் னோனை!
நமக்கன்றோ குறிஞ்சி நாடு!
நமக்கன்றோ குறிஞ்சிச் செல்வம்!
சுமைக்கும்அக் கழுதை கட்கும்
தொடர்பில்லை; அதுபோல் நாட்டார்
தமக்கும்இந் நாட்டின் செல்வம்
தனக்குமோர் தொடர்பு மில்லை.

"என்விருப் பந்தான் சட்டம்;
என்அடி மைகள் மக்கள்!
பொன்னேநான் இதனை எல்லாம்
எதற்காகப் புகன்றே னென்றால்,
உன்னைநீ ஆணுடைக்குள்
புகுத்தினாய்; ஒளியைச் சேற்றில்
மன்னிடைச் செய்தாய்! அஞ்சேல்.
மாசிலா நிலவாய் நேர்நில்.'

"தலைக் கட்டை நீக்கு! கூந்தல்
சரிக்கட்டு! மீசை தன்னை
விலக்கிட்டு மேல்கீழ்ச் சட்டை
மறைப்பிட்டதைவெருட்டு!
நலக்கிட்ட உட்பட்டாடை
திருத்திட்டுக் காதல் சேர்த்துக்
கலக்கிட்ட இதழின் சாற்றை
பசிக்கிட்டு களிப்பிற் கூட்டு."

சொன்னான்இவ் வாறு மன்னன்
தோகைதான் நாணிக் கோணிப்
புல்லிதழ் விலக ஆங்கே
பொன்னிதழ் காட்டி டும்செவ்
வல்லிஆ கின்றாள்! ஆக
வந்தனன் அதேநே ரத்தில்
சில்லிமூக் கப்பன் என்பான்
திடுக்கிட்டாள் மங்கை கண்டே!

"நாணப்ப டாதே பெண்ணே!
நம்மரண் மனைப் பணிக்கு
வாணாளை ஈந்தோன் இந்த
மனிதன் பேர் சில்லி மூக்கன்
வீண்ஐயம் இவனி டத்தில்
உனக்கொன்றும் வேண்டாம்; நெஞ்சம்
கோணுதல் இல்லான். உன்றன்
கொள்கைக்கு மாறு செய்யான்!"

திரையன்இவ் வாறு கூறிச்
சில்லியை நோக்கி, "நீபோய்த்
தெருவினர் உள்வ ராமல்
திறம்படக் காவல் காப்பாய்;
வராதேநீ இனியும் இங்கே"
என்றனன் சில்லி சொல்வான்;
"வருவேனோ வராத செல்வம்
வந்துசேர்ந் திட்ட தன்றோ?"

"அரசியே உன்போல் நல்ல
அழகொன்று வேண்டு மென்று
கருதியே தவங்கி டந்தார்:
கடைசியிற் பெற்றார் உன்னைத்
தரத்தினில் மிகவுயர்ந்த
சரக்குநீ! இதற்கு முன்னே
அரசர்க்கு மனைஒருத்தி;
அவள்அழ கிலாதாள்!; என்றான்.

ஆடையைத் திருத்தும் கைகள்
அதிர்ந்தன; வாய்இ தழ்கள்
முடிய நிலைஉ டைத்தே
'ஆ!' என்றோர் முத்து டைக்க-
நீடிய சினத்தால் வேந்தன்,
"நிறுத்துடா!" என்றான சில்லி.,
"தேடரும் செல்வமாக
அரசர்க்கோர் மகன்தான்' என்றான்.

சில்லிதான் இந்தப் பேச்சை
முடிக்குமுன் திகைத்த வேந்தன்;
"இல்லைஅப் பையன என்றான்.
"ஆமாம் தன் மாமன் வீட்டில்
வில்லேந்து கல்வி ... " என்று
விளம்பினன் சில்லி!. மன்னன்,
"கல்விகற்றிருந்த பையன்
கண்மூடி ... " என்று சொன்னான்!

கண்மூடித் திறக்கு முன்னே
கடிதேகி, "அருமை மாமன்
தண்நீழல் விளாமாவட்டம்
தான்சென்றே ஆசை யோடும்
எண்ணிலாக் கலைப யின்றே
இருக்கின்றான்; இந்தச் செய்தி
திண்ணமே" என்றான் சில்லி!
திருடனாய் விழித்தான் மன்னன்.

"மிகநன்றி சில்லி யப்பா
போ" என்று விநோதை சொல்ல.
"மகளேநான் வருகின் றேன்போய்
வருகின்றேன்!" என்று சென்றான்
"மகிழ்ந்திட எனக்கே இன்னும்
மணமாக வில்லை என்றீர்!
உகுமலர்க் குறிஞ்சி சென்றே
உனைமணந் திடுவேன் என்றீர்.

உன்வயிற் றிற்பி றக்கும்
பிள்ளைக்கே உரிய தாம்இப்
பொன்வயற் குறிஞ்சி', என்று
புளுகினீர்! இனிநான் வாழேன்;
என்கழுத் தறுத்துக் கொள்ள
ஓர்கத்தி இருந்தால் தாரீர்.
பின்புநான் இறந்ததைஎன்
பெற்றோருக்கறிவிப் பீர்கள்!

இன்னலில் மாட்டிக்கொண்டேன்.
வாழ்வதில் இனிமை இல்லை"
என்றுதன் முகத்தை மூடி
'ஏ' என்று கூச்சள்லிட்டான்.
புன்தொழில் விநோதை தன்னைப்
புரவலன் நெருங்கிப் பற்றி.
"அன்பேஎன் பிழைபொறுப்பாய்
அனைத்தும்நின் உடைமை'' என்றான்

அரசன் மேலும் கூறுவான் ..

"பெண்டாட்டி இருந்தால் என்ன?
பிள்ளைதான் இருந்தால் என்ன?
திண்டாடத் தானே வேண்டும்?
திருவிளக் கேநீ என்னால்
கொண்டாடப் படுவ தேமெய்!
குறைவுக் கொன்று மில்லை;
அண்டையில் வா!அ தோபார்
ஆண்சிட்டின் ஆடல் பாடல்!"

என்றனன் திரையன்; கண்டாள்.
"இதுதானா ஆடல் பாடல்?
குன்றாத காதலால்ஆண்
கொஞ்சுதல் குலாவுதல் அன்றோ?"
என்றனள் விநோதை! மன்னன்
இன்முகம் நோக்கி நின்றான்!
அன்னவன் தோளிற் சாய்வாள்
அரசனை நோக்கிச் சொல்வாள்!

( 70 )





( 75 )





( 80 )




( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )





( 120 )





( 125 )





( 130 )






( 135 )




( 140 )





( 145 )





( 150 )




( 155 )





( 160 )




( 165 )





( 170 )





( 175 )




( 180 )





( 185 )




( 190 )




( 195 )





( 200 )




( 205 )





( 210 )





( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )





( 240 )




( 245 )





( 250 )





( 255 )




( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )





( 285 )

                     எண்சீர்விருத்தம்

''கல்லிலிருந்து மெய்வருத்தும் கடியதிண்ணை
கடந்திடுவோம் அத்தான்!'' என்றுரைத்தாள் நங்கை
''மல்லிகையின் புதர்நடுஓர் மலர்ப்ப டுக்கை
அதோஅதுதான் வேண்டுமா! மங்கை யேபார்!
புல்வளர்ப்புத் திரைநடுவில் குளிர்ச்சி மிக்க
புதியதா மரைஇலைகள் பரப்பி வைத்த
நல்லவிடுதி தேவையா? மாங்கிளைகள்
நாற்புறமும் புடைசூழப் புட்சி றைகள்

''பரப்பியதோர் படுக்கைஅதோ தேவை தானா?
பாய்புலியின் தோலுரித்துப் பதப் படுத்தி
நிரப்பாக நாற்புறமும் மான்தோல் தட்டி
நிறுவியதோர் தனிஅறையும் பாராய் பெண்ணே!
கரடித்தோல் ஆட்டுத்தோல் படுக்கை யும்பார்!
கைகாரர் பின்னிவிட்ட வலையூஞ்சல்கள்
மரப்பந்தர் இடைத்தொங்கும்; அவற்றின் நாப்பண்
மரவுரியும் மெத்தென்று போட்டி ருக்கும்.

''எதுதேவை எனக்கேட்டான் மன்னன்!'' மங்கை
''என்நாட்டில் கற்சுவரின் கட்ட டங்கள்
மதிப்படைவ தல்லாமல் இலைப்படுக்கை
மலர்ப்படுக்கை முதலியவை கொள்வ தில்லை;
புதுப்போக்கைக் காணுகின்றேன் இங்கே'' என்றாள்
''பூங்காவை அடுப்பெரிப்பார் அந்த நாட்டில்
உதைத்தெழுந்து வானளாவும் காடு கண்டால்
ஒன்றாக்கிக் கரிசுடுவார் அந்த நாட்டில்!

''வெயிலடித்து நிழல்பொழியும் தழைம ரங்கள்
வீண்என்று சொல்லிடுவார் அந்த நாட்டில்!
குயில்கூவும் வயற்புறங்கள் அங்கே இல்லை
குள்ளநரி ஊளையிடும் அந்த நாட்டில்!
மயிலாடும் சோலையின்கீழ்த் தெருக்கள் இல்லை!
வடுப்பன்றி அடிக்கீழே தெருக்கள் காணும்;
அயலின்றி இருநெருப்புச் சட்டி தீய்க்கும்
அப்பங்கள் அங்குள்ள கட்டடங்கள்!

மேலும்கீ ழும்கொதிக்கும்! வீட்டுக் குள்ளும்
மின்இயக்க விசிறிகளும் அனலைத் தள்ளும்!
ஆலுமர சும்விளவும் மாவும் இல்லை;
ஆற்றோரம் காற்றில்லை; அனைத்தும் பாலை,
ஏலுமோ உன்னாட்டில் இயற்கை தந்த
இவ்வகையாம் விடுதிகளின் அழகு கொள்ளல்?
வேலைப்பா டமைந்த கட்டடங்கள்
மிகவும்உள அந்நாட்டில் அவைகள் எல்லாம்.

''தேவைக்காம் அளவினவாய் அமைந் திருக்கும்,
சேர்குடும்பப் பொருளெல்லாம் மழைப டாமல்
வாழ்வதற்கே வீடல்லால் நிலப்ப ரப்பை
வளைக்க அல்ல வீடுகட்டல் குறிஞ்சி நாட்டில்!
காவலனார் கொலுவிருக்கை ஆலின் கீழே
கடற்கரையில் பூங்காவில் இன்ப வாழ்க்கை!''
................................................................................................................
................................................................................................................
இதுகேட்ட விநோதைதான் அதோஅஃ தென்றாள்;
ஏறினார் இருவரும் விடுதி தன்னில்
புதுப்பாடல் தொடங்கிற்று வண்டின் கூட்டம்!
பொருந்த அதிர்ந் தனமுழவு குயிலின் கூட்டம்,
உதிர்த்ததுவே மலர்ப்பொடியை மென்மைக் காற்றும்
தோகைமயில் ஆடக்கண் டுவகை யாகிக்
கொதித்ததுபெண் மயில்! காதல் தீக்குத்தக்
குதித்தனஇன் பக்குளத்தில் ஆணும் பெண்ணும்!






( 290 )





( 295 )




( 300 )





( 305 )




( 310 )





( 315 )





( 320 )




( 325 )





( 330 )






( 335 )




( 340 )

பிரிவு -- 8

(மறுநாட் காலை தரும இல்லத்து நீராடு விடுதியில்
விநோதை குளிக்கிறாள். மன்னன் அவளுக்கு முதுகு குழப்புகிறான்.
அதன்பின் விநோதை போ என்று கூற மன்னன் ஓரு
புறம் போகின்றான்.)

குளித்துக் கொண்டிருக்கிறாள் மறுநாட் காலை!
குழப்பி கொண்டிருக்கிறான் மன்னன் அன்னாள்
ஓளிப்பான பொன்முதுகை விடைகொ டுத்தாள்
"ஒருபுறத்தில் விலகிடுக'' எனும்சொல் கேட்டுப்
புளிப்பாகி ஒருமாவின் அடியிற் குந்திப்
புறப்பட்டு வரும்கிளிக்குக் காத்திருந்தான்.
வெளிப்பட்ட தாமரையாள் என்னும் தோழி
விரைந்துவந்து மன்னனிடம் கூறு கின்றாள்;

'அயல்நாடு சென்றதுவும் அறமோ ஐயா?
ஐம்பதுநாள் பிரிந்ததுவும் அறமோ ஐயா?
அயலாரோ டிங்குவந்த தறமோ ஐயா?
அரண்மனைக்கு வாராததறமோ ஐயா?
துயிலாமல் உண்ணாமல் உம்மை எண்ணித்
துயர்நெருப்பில் துடிப்பாளை மறந்தீ ராகி
அயலவர்பால் தருமஇல்லம் தன்னில் தங்கி
அகத்தன்பை உகுத்ததுவும் அறமோ ஐயா?

''மனவிருப்பம் போல்நடத்தல் அறமோ ஐயா?
மனைவிருப்பம் அறியாத தறமே ஐயா?
இனவிருப்பம் மதியாமை அறமோ ஐயா?
இடவிருப்பம் இல்லையோ அவளுக் கின்பம்?
புனல்விருப்பம் உள்ளதொரு பூங்கொ டிக்கே
புதுநெருப்பை வேரிலிடல் விருப்ப மானால்,
தனிவிருப்பம் வேறொருத்தி இடத்தில் தானோ?
சற்றிதனைத் கேட்டுவரச் சொன்னாள் மன்னி."

''உடலினின்றும் உயிர்பிரிந்தால் அவ்வுடற்கோ
உணர்வில்லை; ஆதலினால் துன்பம் இல்லை.
தொடல்இன்றிக் கைபிரிந்தால் துன்பம் தாளாத்
தோகையினை நீர் பிரிந்தால், அந்தத் தோகை
விடல்தகுமோ? விட்டாலும் உணர்வுநீங்கா
மெல்லுடலும் நல்லுயிரும் துன்புறாவோ?
கடல்நடுவில் கையோய்ந்து போன காதற்
கரும்புதனைக் கரையேற்ற வாரீர்!'' என்றாள்.

அடுத்து அரசன் சொல்லுவது;-

"காதலுக்கோர் கரைகாணத் துடித்த மன்னி,
கடற்கரைக்கு வரவேற்க வரவே யில்லை;
சாதலுற்றால் எனக்கென்ன? சாதலின்றித்
தளர்வுற்றால் எனக்கென்ன. பிரிந்து நெஞ்சம்
மோதலுற்றால் எனக்கென்ன. நெடும்பூச் சாண்டி
மொழிதலுற்றால் எனக்கென்ன? வரவே மாட்டேன்!
போதோழி போதோழி அவளிடத்தில்
புகலுவாய் என்சொல்லை'' என்றான் மன்னன்.

தோழி உரைப்பது;-

போகின்றேன்! உடனழைத்துப் போக வந்தேன்
போகின்றேன்! வரேனென்றார் என்று ரைக்கப்
போகின்றேன்! போகாத உயிரைப் போக்கப்
போகின்றேன்! அவள் இறந்தால் நான்சா கத்தான்
போகின்றேன்! ஓர் ஐயம்! அதையும் கேட்டுப்
போகின்றேன்! கேட்கவா!'' என்றாள் தோழி.
போகின்றேன் போகின்றேன்!! என்று ரைத்தாய்
போகவில்லை அதையும்நீ புகல்வாய் என்றான்.

அடுத்துத் தோழி கூறுதல்;-

''அரசாங்க ஆட்சிஅங்கே அரசி அங்கே
அரசியினால் வரும்பெருமை அருமை அங்கே
வரிசைஅங்கே வாழ்வங்கே விருப்பத் திற்கு
வாய்ப்பான உணவங்கே மங்கை அன்பின்
முரசமங்கே உண்டன்றோ? ஏது மில்லா
முதியோர்க்குச் சோறுதரும் இல்லம்
சரிஎன்று சப்பணம்போட் டுட்கார்ந் தீரே
காரணந்தான் சாற்றுவிரோ? என்று கேட்டாள்!

அடுத்து அரசன் சொல்லுவது;-

''உலகத்தின் தோற்றம்நிலை இறுதி ஆன
ஒருமூன்றின் தனிமுதலை உணர்தல் வேண்டும்;
சிலபெரியோர் என்னுடன் வந்திருக்கின் றார்கள்
செல்வமெலாம் சிறப்பெல்லாம் பெற்றேன் மற்றும்
உலர்ந்தமலர் உதிர்ந்தனைய உடம்பு பெற்றேன்.
என்னபயன்? உண்மையினை உணர்தல் வேண்டும்
நவமில்லை மாதர்தரும் இன்பம் தோழி!
நடஎன்றான்!" நல்லதென நடந்தாள் தோழி!

தனித்தவளாய் அரண்மனையின் மகளிர் இல்லம்
அடைந்திட்ட தாமரையை மல்லி கைதான்
''எனைத்தழுவும் பதைபதைப்பால் அந்த மன்னர்
இனிவருவ தாய்ச்சொல்லி உனை அனுப்ப,
நனிமகிழ்ச்சி யோடுநீ வந்தாய் போலும்!
நடக்குமா உன்நினைப்பும் அவர்நினைப்பும்?
சுனைப்புனலும் நானல்லேன் நாவறண்டு
துள்ளுமான் எண்ணமெலாம் செல்லா திங்கே.

''அயல்நாட்டில் இத்தனைநாள் என்ன செய்தார்?
அயலாரை ஏனிழுத்து வந்தார்? வந்து,
புயல்தவழும் மாளிகைக்கும் அயலிற் சென்ற
புதுப்போக்கில் அவர்காட்டும் கதைப்போக் கென்ன?
கயல்விழிகொள் தாமரையே இவற்றை எல்லாம்
காவலரைக் கேட்டாயா? என்ன சொன்னார்?
நயம்படநீ உரைக்குமட்டும் திருந்த மாட்டார்
நறுக்காக நான்குசொற்கள் நவில வேண்டும்.''

என்றுபல இயல்பினாள் மல்லி கைதான்,
'இல்லை! இல்லை, வரமாட்டேன் என்றார் மன்னன்,
மன்னவரைக் கடற்கரைக்குச் சென்று நாமே
வரவேற்க இல்லையன்றோ?'! என்றாள் தோழி.
தென்றலுக்கு நடுங்குகின்ற மரைஇதழ்போல்
திருமேனி நடுக்கமுற்ற மன்னி, ''ஐயோ
சென்றுவர வேற்காத சிறுபிழைக்கா
செங்காந்த ளைவெறுக்கும் தங்க வண்டு?

''அமைவான நல்லுருவை அன்பு வாழ்வை
அடியோடு நீக்கிற்றா நான்பு ரிந்த
உமியளவு சிறுகுற்றம்? கடற்க ரைக்கே
ஒவ்வொருநா ளும்சென்றேன்; ஐம்பதாம்நாள்
இமைநலிவால் போகவில்லை; கார ணத்தை
எனைக்கேட்டால் சொல்லேனா? அங்கிருந்து
சுமத்துகின்றார் பெருங்குற்றம் என்மேல்! என்ன,
செய்வதிந்தத் தொல்லைக்கே? என்று கூறி,

சாய்வாள்போய்ப் பஞ்சணையில்! எழுவாள் பின்னும்
தலைதாழ்த்தி இதற்கென்ன செய்வேன் என்று
பாய்வாள்பின் தஞ்சாவூர்ப் பாவை யானாள்.
'வாய்வாளா திரு!நாளை இரவு நாமே
மன்னனிடம் நேரேபோய் மன்னிப்பொன்று
ஓய்வாகக் கேட்கலாம்'' என்றாள் தோழி!
ஒண்டொடியும் ''சரி'' என்றாள், கண்ணீர் விட்டாள்.

மீண்டும்மன்னி பரபரப்போ டெழுந்தி ருந்து.
''மெல்லியே இதுகேட்பாய் என்நெஞ் சத்தைத்
தூண்டும்ஓர் எண்ணம்தான்! விளமா வட்டம்
சென்றுநீ தோகைஎன்றன் நிலையைச் சொன்னால்,
ஈண்டுவந்தென் உடன்பிறந்தார் என்துன் பத்தை
இல்லாமற் செய்வாரே'' என்றாள்! தோழி,
''வேண்டாம்என் அரசியே, வேண்டாம் வேண்டாம்!.
விரைந்தோடி வந்திடுவார் திண்ணனாரும்!

''வெளியினின்று வந்தவரைக் கொலையே செய்வார்;
வேந்தரையும் தூக்கி அடித்திடுவார் மண்ணில்!
கிளிப்பேச்சுக் காரியே உன்றன் பிள்ளை
அங்குள்ளான் இங்கிதனைக் கேட்பா னாகில்
துளிப்பொறுக்க மாட்டானே! உன்றன் காதல்
துறைதூர்ந்து போகாதோ! மரக்கி ளைமேல்
தளிர்ஒன்றில் புழுக்கண்டால் வேரை வெட்டும்
தன்மைஅன்றோ உன் எண்ணம்.'' என்று சொன்னாள்.

''மன்னவரால் எனக்கென்ன நேர்ந்திட் டாலும்
மற்றவர்தாம் பெருந்தீமை இழைத்திட் டாலும்
அன்புடையாய் விளாவட்டம் ஆளு கின்ற
அண்ணனிடம் சொல்லவே கூடா தன்றோ?
அன்னவர்ஓர் பெருஞ்சினத்தர்; முரடர்; அங்கே
அவருடன்வாழ் என்பிள்ளை அவருக் கப்பன்;
மன்னிப்புக் கேட்டிடுவோம் மன்னர் இங்கு
வந்திடுவார் வந்திடுவார் பொறுப்போம்'' என்றாள்!






( 345 )




( 350 )





( 355 )




( 360 )






( 365 )





( 370 )




( 375 )







( 380 )







( 385 )




( 390 )








( 395 )




( 400 )







( 405 )





( 410 )




( 415 )





( 420 )





( 425 )




( 430 )





( 435 )




( 440 )





( 445 )





( 450 )




( 455 )




( 460 )





( 465 )




( 470 )

பிரிவு -- 9

(குறிஞ்சித் திட்டைத் தம் அடியில் ஆழ்த்த வேண்டும்
அதற்கு மதங்களைக் குறிஞ்சித் திரட்டில் பரப்ப வேண்டும்.
பரப்புமுன் மன்னனை மதத்தில் மூழ்கச் செய்ய வேண்டும்.
ஆதலின், விநோதை சிவாநந்தர் முதலியோர், மத விளக்கம்
செய்கிறார்கள். ஆயினும் தமக்குள் கருத்து வேற்றுமை உண்டாகிறது.)

                (அகவல்)

தருமஇல் லத்தின் பெருங்கூ டத்தில்
திரைய மன்னன், விநோதை, சில்லி
ஒருபு றத்தில் உட்கார்ந் திருந்தனர்.
சிவாஅ நந்தர் சிவசம் பந்தர்
இருவர் எதிர்ப்புறம் வீற்றிருந்தனர்;
மடத்தம்பி ரானும் மாலுக் கடிமையும்

இடத்தில் ஒன்றும் வலத்தில் ஒன்றுமாய்
மாறு பட்ட மாடென அமர்ந்தனர்.
சிவாஅ நந்தர் மாணவரான
சிவசம் பந்தர் செப்பு கின்றார்;
''ஸ்ரீகை லாச பரம்பரை ஜன''
என்று துவக்கினார். இருந்த மன்னனுக்கு
ஏதும் புரிய வில்லை. அதன்மேல்,
''ஸ்மர்சனா நந்தமு சேயவல மீரு''
என்றதும் திரையன் இடைம றித்துத்
''தமிழில் பேசுதல் தக்க'' தென்றான்;
"வெள்ளைத் தமிழிது" என்றாள் விநோதை;
'தமிழ்தான்'' எனது தம்பிரான் சொன்னான்.
மாலுக் கடிமை வலக்கை அசைத்தே.
''இல்லை இல்லை இல்லை இந்தியும்
தெலுங்கும் வடசொலும் தேடி அள்ளிக்
கல்கிக் கூட்டம் கலக்கிய சேறிது!

தம்பி ரான்கள் சருக்கிய வழிஇது!
சுதேச மித்திரன் தொடரும் நடைஇது!
கலைமகள் தேளின் கடுக்கும் கொடுக்கிது!
தினமணிப் பாம்பு திரட்டிய நஞ்சிது!
யானோ தென்கலை இலக்கியம் காட்டும்
வழியே சென்று பழியாப் பெரும்பொருள்
அடைய எண்ணும் அருமைத் தமிழன்''
என்றுதன் தூய்மையை எடுத்துரைத்தான்!
மென்றான் பல்லைப் பல்லால் தம்பிரான்!

''தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான்
சைவப் பார்ப்பான் எப்பார்ப் பாரும்
தமிழர் தலைதட வப்பார்ப் பாரே!''
தம்பிரான் இப்படிச் சாற்றிய வுடனே
சிவாஅ நந்தன் செப்பு கின்றான்;
''பார்ப்பனர் தம்மை இழிவு படுத்திடப்
பார்ப்பான் தன்னைப் பழிவாங்கிடுவேன்.
பார்ப்பனர் நான்முகன் படைப்பில் உயர்ந்தவர்

முதலில் நான்முகன் முகத்தில் வந்தவர்;
அவன்தோளி னின்றே ஆளுவோன் வந்தான்;
வசையுடன் இடுப்பில் வணிகன் வந்தான்;
காலிற் பிறந்த கழிவிடை அல்லவோ
தறுதலை யான தம்பிரான் நீயே?"
என்றனன், தம்பிரான் இயம்புகின்றான்;
''முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பார் உட்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எலாம்போக் கிலியே!
குறிஞ்சித் திட்டும் நாவலங் கூறும்
உள்ளிட்ட குமரி நாட்டினில் உற்றேன்.

எச்சிலைக் கண்ட இடத்து நக்கும்
நாய்போல் எங்ஙனோ இருந்து பிழைக்க
இங்கு வந்த இழிஞன் நீதான்!''
என்றனன் முடிக்குமுன்! ஏந்தல்
''நாழிகை ஆனது நங்கை விநோதையே
வா'' என்று மையல் மிகுதியால் கூறினான்.
''இன்று பிரசங்கம் இல்லை'' என்று
விநோதை சொன்னாள்; வேந்தன் "விநோதையே
பிரசங்கம் என்ற' பேச்சின் பொருள்தான்
விளங்கவில்லை" என்று விளம்பினான்.
ஏதும் சொல்ல இயலா திருந்தாள்!
''பிரசங்கம் என்றால் உபந்யாசம்!'' என்று
சிவாஅ நந்தன் என்பான் செப்பவே,
அதுவும் புரியா தரசன் விழித்தான்.
சிவசம் பந்தன் செப்புகின்றான்;

''உபந்யாசம் என்றால் உயர்ந்தோர் சொல்வது;
சொற்பொழி வென்பது தாழ்ந்தசொல்'' என்றான்
எட்டித் தலையில் உதைத்தான் ஏந்தல்!
''சேவடி வாழ்க!'' என்றான் சில்லி!
"தமிழ்வாழ்க! என்று சாற்றினான் தம்பிரான்!
விநோதையும் வேந்தனும் ஒன்றை ஒன்று
பற்றிச் செல்லும் பட்டுப் பூச்சிகள்
போல எழுந்து சென்றனர்.
மாலைப் பொழுது வரவேற்றது அவரையே!




( 475 )







( 480 )





( 485 )




( 490 )




( 495 )





( 500 )




( 505 )





( 510 )




( 515 )





( 520 )





( 525 )





( 530 )




( 535 )




( 540 )





( 545 )




( 550 )

பிரிவு -- 10

(தொழிலாளர்கள் தம் குறைகளை அரசனிடம் தெரிவிக்கின்றார்கள்.
சேந்தன் என்னும் படைத்தலைவன் அமைதி படுத்துகிறான்)

             (அறுசீர் விருந்தம்)

பஞ்சைநூலாக்கும் ஆலைப்
பழந்தொழிலாளர் எல்லாம்
கெஞ்சினார்; கூலி ஏறக்
கேட்டனர்; முதலா ளர்கள்,
மிஞ்சினார் ; ''ஒப்போம்'' என்றார்.
வேலையை நிறுத்தம் செய்து,
''கஞ்சிக்கு வழிசெய்'' கென்று
கழிறிடக் கோயில் வந்தார்.

கோயிலில் கோவும் இல்லை;
கோரிக்கை என்ன?'' என்று
வாயிலில் இருந்தோன் கேட்க
வந்தவர், ''மன்னர் எங்கே
போயினர்?'' என்றி கேட்டார்
''புகலுவீர் என்பால்'' என்று
வாயிலோன் சொன்னான்; வந்தோர்
வாய்விட்டுச் சிரிக்கலானார்.

''மன்னவன் நீயோ?'' என்று
மற்றங்கே ஒருவன் கேட்டான்.
''உன்னைப்போல் கூலிக் காரர்
உரைப்பதை நான் கேட்டுத்தான்
மன்னர்பால் உரைக்க வேண்டும்;
மற்றேதும் விளம்ப வேண்டாம்!
சொன்னாற்சொல், இல்லை யேல்போ!
என்றான்அவ் வாயில் காப்போன்!

''ஐயா யிரம்பேர் நாங்கள்!
ஒருவன்நீ ஆத லாலே
செய்வதை எண்ணிச் செய்க;
செப்பலில் எளிமை வேண்டும்.
துய்யது மீறினால்நீ
துன்பத்தை அடைவாய்!'' என்று
ஐயாயி ரம்பேர் தம்மில்
ஒருகுள்ளன் அறிக்கை செய்தான்;

அரசனார் சொன்ன தைத்தான்
அறிவித்தேன்? நான்துன் புற்றால்.
அரசனார் துன்பு றுத்தப்
பட்டார்என் றாகும் அன்றோ?
ஒருவனை ஒருகூட்டத்தார்
எதிர்ப்பதில் உயர்வே இல்லை
அரசரோ இங்கே இல்லை
இருப்பவர் அமைச்சர்!" என்றான்.

''அமைச்சரைப் பார்க்க வேண்டும்;
அனுமதி கேட்பாய்!'' என்ன,
இமைப்பினில் வாயி லோன்பொய், இவண்வந்து. ''போவீர்!'' என்றான்
''எமக்குற்ற குறைகள் கேட்பீர்''
எனத்தொழிலாளர் சொல்ல,
அமைச்சனார், ''சொல்க?'' என்றார்;
அறைகின்றார் தொழிலாளர்கள்;

'மழையில்லை விளைவு மில்லை;
வாய்ப்பான உணவின் பண்டம்
பழமைக்குப் பத்துப் பங்கு
விலையேறப் பார்க்கின்றீர்கள்;

பிழையில்லை எங்கள் மேலே.
கூலியைப் பெருக்கச் சொன்னோம்;
விழவில்லை அவர்கள் காதில்,
வேலையை நிறுத்தம் செய்தோம்!
''ஆவன செய்ய வேண்டும்
அரசர்பால் எடுத்துச் சொல்லி!
தாவும்எம் குழந்தைக் கெல்லாம்
தாயிடம் பாலும் இல்லை!
ஓவெனக் கதறும் தாயார்
உயிர்க்காக்கச் சோறும் இல்லை;
சாவுண்டு மலிவாய்! நெஞ்சில்
சலிப்புண்டு வாழ்வில்'' என்றார்.

செழும்படைத் தலைவனான
சேந்தனும் அங்கு வந்தான்,
அழும்படி தொழிலாளர்கள்
அறிவிப்பைக் கேட்டிருந்தான்.
புழுங்கினான் நெஞ்சம், ''போவீர்,
நாளை இப் பொழுது வாரீர்!
ஒழுங்குசெய் திடுவோம்!'' என்றான்.
தொழிலாளர் ஒதுங்கிச் சென்றார்.






( 555 )




( 560 )





( 565 )





( 570 )





( 575 )





( 580 )




( 585 )





( 590 )





( 595 )




( 600 )






( 605 )





( 610 )




( 615 )





( 620 )




( 625 )