பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 11


(அரண்மனை மகளிர் இல்லத்தில் மல்லிகை அழுது
கொண்டிருக்கிறாள். அவள் தோழி தாமரை வருகிறாள்)

மகளிர்இல் லத்தில் ஓர்பால்
மல்லிகை அழுதி ருந்தாள்,
புகன்றிடும் தரும இல்லம்
பூங்காவில் விநோதை, மன்னன்
மிகமிக மகிழ்ந்தி ருந்தார்!
வெண்ணிலா முகில்கி ழித்து
நகைக்காமல் லிகைந லிந்தாள்!
நலம்நுகர்ந் தாள்வி நோதை!

மென்காற்றுத் தணலா யிற்று
மெல்லியல் மல்லி கைக்கு!
மன்னவன் விதோதை இன்பம்
அயர்வதில் வியர்வை மாற்றிப்
பொன்னாக்கிப் புதிதாக் கிற்றுப்
பொழுதினைக் குளிர்பூங் காற்று!
மன்னிநா வறள்வாள்! மன்னவன்
மலரிதழ்த் தேன்கு டிப்பான்!

தாமரை வந்து பார்த்தாள்
தையலின் நிலைக்கு வேர்த்தாள்
''நாமினிச் செய்வ தென்ன?''
என்றனள் தோழி ''நங்காய்!
மாமன்னர் மகிழ நாம்போய்
மன்னிப்புக் கேட்ப தொன்றே
நீமைபோம் படிநாம் இன்று
செயத்தக்க'' தென்றாள் மன்னி!

''முக்காட்டை எடுத்து வந்து
முகமலர் மறையப் போர்த்து!
நிற்காதே! நிலவும் வான
நீலத்தைப் போர்த்த தைப்பார்!
தக்கது நேரம், அந்தத்
தருமஇல் லத்துள் உள்ள
அக்கார அடிசி லைநான்
அடைவனேல் வாழ்வேன்!'' என்றாள்.

போர்வையைக் கொணர்ந்தாள் தோழி;
பொழிந்தது மழையை வானம்?
''கார்வைத்த குழலாய்! உன்றன்
கண்ணீரால் நனைந்த மேனி
நேரிட்ட மழைநீ ராலும்
நனையுமே! கிணற்று நீரை
ஊரிட்ட வெள்ளங் கொண்டு
போகா''தென்றுரைத்தாள் தோழி.

''கருப்பட்டிக் கட்டி அல்ல
என்மேனி; கரைந்திடாது
உருப்பட்டி ராதே என்று
நீஎன்னை உரைத்தாய் போலும்!
ஒருப்பட்டு வாஎன்னோடே''
எனக்கூறி ஒருத்தி யாகத்
தெருப்பட்ட தனித்தேர் போலச்
சென்றனள் தனியே மன்னி.

''பிழைபொறுத் திடுவாய்!'' என்று
பின்தொடர்ந் திட்டாள் தோழி!
மழையும்நின் றது தொடர்ந்து
மன்னியும் தோழி தானும்
நுழையாத தரும இல்லம்
நுழைந்தனர்; அறையின் சன்னல்
முழுமையும் திறந் திருக்க
உடல்ஒன்று முகம்இரண்டு

கண்டனள் மல்லி கைதான்!
காணாத காட்சி கண்டு
துண்டிரண் டானாள் மேனி.
துணுக்குற்றாள் நெஞ்சம். ''நான்தான்
கண்டது கனவா? என்றன்
கருத்துரு வப்ப திப்பா?
அண்டிற்றா என்றன் வாழ்வில்
அனற்காடு? செத்தேன்!'' என்றாள்.

அரசனா என்று மீண்டும்
அரசிதான் நன்கு பார்த்தாள்.
தெரிசுடர் விளக்கின் முன்னே
செந்தாமரைமுகத்தை
ஒருமங்கை தானா என்றே
உற்றுப் பார்த்தாள்! தோழி
அருகினிலே நின்றாள் அன்றோ!
அவள்தோளில் முகம்க விழ்ந்தாள்.

''உண்டோடி வாழ்வெ னக்கே
உலகினில்!'' என்றாள் மன்னி.
வண்டோடி அரங்கு செய்யும்
மலரோடும் குழலாள் தோழி
தண்டொடிந் திட்ட செய்ய
தாமரைப் பூவைத் தோளில்
கொண்டேகி மகளிர் இல்லம்
கொண்டபஞ்சணையில் போட்டாள்!

''வரவேற்க வில்லை என்று
வருந்திய தாய்உரைத்த
உரைஏற்க வேண்டு மோ? பொய்
உரையன்றோ உரைத்த தெல்லாம்?
வரவேற்க முடியாக் காதல்
ஒருத்திமேல் வைத்த தற்குத்
திரையேற்றி மறைவி லேதம்
திருக்கூத்தை நடத்தலானார்.

''காதலால் இருவர் தம்முள்
கருத்தொரு மித்தார். பின்னர்
சாதலால் பிரிவ தன்றித்
தாம்பிரிந் திடுதல் உண்டோ?
ஈதொரு வியப்புத் தோழி!
எனைப்பிரிந் திட்ட மன்னர்
மாதொருத் தியையும் கொண்டார்;
குறிஞ்சிக்கோர் வடுவைச் சேர்த்தார்.

''முன்னைக்கு முன்அ றங்கள்;
முளைத்ததும், ஆரி யர்க்கே.
தன்னைக்கொடுத்த றங்கள்
தவிர்ந்ததும், தமிழாம் எங்கள்
அன்னைக்கிருந்த சீர்த்தி
அழித்ததும், ஆன அந்தச்
சென்னைக்குச் சென்றார்; கையிற்
சென்னையைக் கொண்டு வந்தார்.

''சிவனொரு கடவுள் என்றும்
திருமாலோர் கடவுள் என்றும்
அவர்பெண்டிர் உறவி னோர்கள்
ஆகியோர் கடவுள் என்றும்
நவிலுமோர் சென்னை தன்னில்
நம்மன்னர் கூத்தி தேடத்
தவங்கிடந்திடவா வேண்டும்?
தரகர்க்கும் குறைவே தங்கே?

''நாவலூர் தனிற்பி றந்த
நடைகெட்ட சுந்த ரன்தான்
காவலார் திருவாரூரிற்
கற்பிலாரிடைப்பி றந்த
ஆவலூர் பாவை தன்னை
ஆலயம் எனும்ஓர் காமக்
காவலிற் கண்டு மையல்
கொண்டானாம் சிவன்கண்டானாம்!

''மணஞ்செய்து கொளச்செய்தானாம்.
மாப்பிள்ளை மற்றும் ஓர்நாள்
அணங்குசங்கிலியாள் தன்னை
ஒற்றியூர் ஆலயத்தில்
வணங்கையில் கண்டிட்டானாம்
மையலும் கொண்டிட்டானாம்!
தணியாத காமத் தீயன்
தம்பிரான் தோழன் ஆங்கே,

''சங்கிலி இடம்உரைப்பான்;
'தையலாள் பரவை தன்னை
அங்கொரு நாள்மணந்தேன்
அதுமெய்தான்; எனினும் உன்பால்
தங்குவ தன்றி அந்தத்
தையலை இனிமேல் நண்ணேன்;
இங்கிதே உறுதி யாகும்
என்றானாம்? 'சரி'என்றாளாம்,

''சிறுமியைக் கெடுத்தான்: பின்னர்த்
திருவாரூப் பரவையாள்பால்
உறுமையல் உறுதி சொன்னான்;
உரைத்தஓர் உறுதி எண்ணான்.
பிறைநுதற் பரவையாளும்
பிணங்கிநீ வராதே என்றாள்.
மறைகண்ட சிவனும் அன்னாள்
மனமாற்றிச் சேர்ப்பித் தானாம்.

''ஒருத்தியை மணந்தோன் பின்னும்
ஒருத்தியை மணப்ப தென்னும்
திருத்தமோ அன்பு கொல்லும்
'தீ' அங்கே சிவமாய் வாழ்ந்தால்,
உருப்படா நாட்டில் எந்த
உருப்படி உரிமை யோடு
கருப்பெறும்? பெறும்பிள் ளைகள்
கடப்பரோ அடிமைச் சேற்றை?






( 5 )




( 10 )





( 15 )





( 20 )




( 25 )





( 30 )





( 35 )




( 40 )





( 45 )




( 50 )







( 55 )





( 60 )




( 65 )





( 70 )





( 75 )




( 80 )





( 85 )




( 90 )





( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )




( 130 )





( 135 )





( 140 )




( 145 )





( 150 )

பிரிவு -- 12

(தீமைகளும் தமிழ் இனப் பண்பாட்டுச் சீரழிவுகளும்
தொகுத்துப் பார்க்கும் அரசி மல்லிகை, தன் அண்ணனுக்கு
மடல் அனுப்புகிறாள்.)

"பலபெண்கள் ஓர்ஆண் கொள்ளும்
பழிச் செயல் தன்னை மன்னர்
சிலநாளிற் கற்ற தோடு
செயலிலும் காட்டினாரே!
அலாதன செய்யும் சென்னை
என்னும்ஆ சிரியன் வன்மை,
உலகமே வியப்பதன்றோ
ஒன்றிது; மற்றொன் றுங்கேள்;

"வையகம் வியக்கும் வண்ணம்
அகப்பொருள் வளர்ந்த நாட்டில்
ஐவரை மணந்தாள் ஓர்பெண்!
அவளைப்போல் படிவம் ஒன்று
செய்யவும் சொல்லிக் கோயில்
செய்தங்கே வைக்கச் சொல்லி,
உய்யவே வணங்கச் சொல்லி.
ஊரெலாம் ழுழக்கஞ் செய்தார்.

"நல்லொழுக் கம்காணாத
நாட்டினர் ஆரி யர்தம்
புல்லொழுக்கத்தை அங்கே
புகுத்தினார்; வேண்டாம் என்ற
சொல்லும்கே ளாமல் ஆண்டு
தோறும்அத் துரோபதைக்கு
நில்லாமல் மணவிழாவும்
கூசாமல் நிகழ்த்துகின்றார்.

"பகர்உருக்குமணி மற்றும்
பாமையாள் இருபெண் டாட்டி
நுகர்பவன் நாளடைவில்
மகளிர்கற் பழித்தான் நுகலும்பல்லாயி ரம்பேர்
அன்னோன்
மக்களைக் காப்போன் என்று
புகல்கின்றார்; படிவம் வைத்துப்
பூசனை புரிகின்றார்கள்.

"அறுபதினாயிரம்பேர்
கற்பினை அழித்தா னாம்ஓர்
தறுதலை! அவனைத் தூக்கித்
தலையில்வைத் தாடு கின்றார்!
உறுதியில் லாது வாழும்
தழிழர்கள்! ஒழுக்கத் திற்கோர்
இறுதியைச் செய்தார்; முன்னாள்
உலகுக்கே ஒழுக்கம் ஈந்தார்.

"எண்ணமும் செயலும் இவ்வாறு
இருந்திடும் நாட்டில் வாழ்வின்
கண்ணெனும் பெண்ணி னந்தான்
கடைத்தேற வழியு முண்டோ?
மண்ணினும் கேடாய் அன்றோ
மதிக்கின்றார் பெண்ணினத்தை!
எண்ணினும் மானக்கேடாம்
இன்னொன்று சொல்வேன் கேட்பாய்;

"உடையிலா இளைய மாதர்
ஓவியம் எழுதச் சொல்லிக்
கடையிலும் வீட்டினுள்ளும்
கட்டியே தொங்க விட்டுப்
படையுடன் ஆடவர்கள்
பார்த்துள்ளம்களிப்ப துண்டாம்!
மடந்தைக்கு மனம்வேண்டாமாம்!
எடுத்தாள உயிரே போதும்.

"ஒருத்தியின் ஆடை தன்னை
ஒருதீயன் ஒதுக்கு கின்ற
திருந்தாஓ வியத்துக் கெல்லாம்
தேர்கோயில் ஆம்இடங்கள்
பொருத்தம்என் பாராம் மேலும்
புதுக்கலை இதுஎன் பாராம்.
சிரிப்பாகச் சிரிக்கும் அங்கே
சேயிழையாரின் மானம்.

"நூலெலாம் பெண்ணைத் தாழ்த்தும்;
நுண்ணறி வாளர் என்போர்
காலெலாம் கைஎ லாம்பெண்
கண்ணிலே மண்ணைத் தூவும்!
பாலெலாம் பாலோ! பெண்பால்
பழிக்கடையாளம் என்பார்;
தோலெலாம் குருதி யுண்டோ
இலையோஅத் தொழும்பர் கட்கே?

"இவ்வகை யாக நாட்டில்
இழிநிலை ஏற்ப டுத்தி,
அவ்வகை நிலையைத் தங்கள்
ஆசைக்குப் பயன்படுத்தும்
தெவ்வர்கள் செயலைச் சற்றே
செப்புவேன்! அதையும் கேட்பாய்;
செவ்விதழ் மாதர்க் கெல்லாம்
விளம்பரம் செய்வாரங்கே.

"கோடம்பாக் கத்தில் ஓர்எண்
குறிப்பிட்ட மாடி வீட்டில்,
'வாடம்பர்' என்ப தாம்ஓர்
வாணிக நிலையம் உண்டு.
'பாடங்கள் நடக்கும் ஆங்கே
படத்தொழில் ஆதரிக்கக்
கூடங்கள் நிறைய வந்து
கூடுங்கள் குயிலினங்காள்!'

"எனஏட்டில் படிப்பார் பெண்கள்;
எழிலான பட்டுடுத்தி,
இனமானம் தனைய கற்றி
வாடகை வண்டி ஏறி,
தனைஒப்பித் தம்மே லாடை
ஒருபுறம் தளர்த்திச் சோற்றுக்
கனவுக்குத் துணிவு கூறிக்
கடாக்களின் இடம்செல்வார்கள்.

"முதலாளி முதலா ளிக்கு
முழந்தாளி படநு ணுக்க
மதியாளி, பணம்ப டைத்த
அறிவாளி அமர்ந்தி ருப்பார்;
புதுவாளி விழிமா தர்கள்
போயங்கே சிரித்து நிற்பார்;
முதலாளி தானே தன்னை
முன்னறி வித்துக் கொள்வான்.

"அமருங்கள் என்று சொல்வான்.
அங்குள்ள படக்கணக்கன்;
'உமக்குள்ள உயரம் காண
ஒருபக்கம் நிற்பீர்' என்பான்;
தமக்குள்ள பெருமை சொல்வான்;
தமிழ்தெரி யாமை சொல்லிச்
சுமையாக ஆங்கிலத்தைச்
சுமந்ததை விரிவாய்ச் சொல்வான்.

"முதலாளி சொன்ன வண்ணம்
முழந்தாளி சுவைநீர் ஈவான்;
முதலாளி பாடச் சொல்வான்;
முன்னிற்போர் 'ஆம்ஆம்' என்பார்;
முதலாளி ஆடச் சொல்வான்;
முட்டாளோ, 'எழுக' என்பான்.
முதலாளி விருப்பம் சொல்வான்;
மாமாக்கள் முடித்து வைப்பார்!

'பொழுதுபோம்! தூங்கிப் போகப்
புகலுவார் மாமா மார்கள்!
கழுகுகள் கருத்தறிந்தும்
கன்னியர் ஒப்புவார்கள்!
மழை நீராய்ப் பொழியும் புட்டில்;
புலாற்சோறு மலையாய்ச் சாயும்;
கழிந்திடும் உணவு! மேலே
கயவருக் கென்ன வேலை?

"மன்னவர் பொறிஇ யக்க
வண்டியில் ஒருத்தி யோடு
சென்னையின் கடற் கரைக்குச்
சொல்லுவார்; அமைச்ச ரானோர்,
'பொன்னேஎன் கண்ணே! உன்னைப்
புதுப்படந் தன்னில் நாளை
நன்னிலை தருவேன்; இன்று
நடத்துநம் படத்தை' என்பார்.

"நடைக்கட்டில் மாடிக் கூட்டில்
இத்தீமைச் செயல்கள் யாவும்
முடிக்கட்டும் என்று கீழ்ப்பால்
முளைத்திடும் இளங்க திர்தான்!
படத்தினில் இடங்கேட் டார்க்குப்
படக்கணக்கன் புகல்வான்;
'உடற்கட்டே எதுவு மில்லை;
உதவாய்நீ படத்திற் கென்றே!'

"மடத்தினுக் குடலை விற்கும்
மாதர்கள் கூட்டம் ஒன்று!
கொடுத்தவன் வாழ்வைத் தீர்க்கக்
கோயிலுக் குடலை விற்கும்
நடக்கையார் கூட்டம் ஒன்று!
கலைக்குத்தான் நம்வாழ் வென்று
படத்தொழிற் குடலை விற்கும்
பாவையர் கூட்டம் ஒன்று!

"காணுமிக் கூட்டம் மூன்றும்
களையெனக் கிளைக்கு மாங்கே!
நாணமில் லாத பல்லோர்,
நாளுமிக் களைகள் ஓங்க,
ஊணுறக் கங்க ளின்றி
உழைப்பது வியப்பே யாகும்;
பூணூலார் இவ்வாறான
படங்களைப் புகழ்ந்து வாழ்வார்!

"கள்ளவா ணிகர்கள் மக்கள்
உழைப்பினைக் கவர்ந்து நாளும்
கொள்ளைகொள் செல்வர் எல்லாம்
கொடியதோர் படத்தொ ழிற்கே
வெள்ளையாய்த் தொண்டு செய்வார்;
வெறுப்பினை நீக்க என்ன
உள்ளதென்றாய்வு செய்யார்;
திருத்தவும் உள்ளம் கொள்ளார்!

"வடக்குவிந்தியமும் தெற்கில்
வளர்கும ரியுமாய் இன்று
முடக்கப்பட் டிருப்ப தான
முதியதோர் நிலத்தினுக்கே
இடப்பட்ட பெயர்த மிழ்நா
டெழில்திராவிடநா டாகும்;
நடப்பதோ ஆரியத்தின்
நாகரி கந்தான் அங்கே!

"தமிழ்நாட்டில் தமிழுக் கன்றோ
தலைமைதந் திடுதல் வேண்டும்?
தமிழ்நாட்டில் தமிழ னன்றோ
தலைமைதாங் கிடுதல் வேண்டும்
தமிழ்நாட்டில் பிறமொழிக்கே
தலைமைதந் துயிர்வாழ் கின்றார்!
தமிழ்நாட்டில் தலைமை யாவும்`
தமிழரின் பகைவர் கையில்!

"தமிழ்நாட்டில் வடமொழிக்கே
விளம்பரம் தருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் தமிழைத் தாழ்த்தும்
தாழ்ந்தவர் உயர்ந்தோரங்கே;
தமிழ்நாட்டில் தமிழப்பண் பாடு
தலைகாட்ட வழியே இல்லை.
தமிழிரின் இலக்கி யங்கள்
தலைகீழாய்க்காணு மங்கே!

"வடசொல்லைத் தமிழ்ச்சொல் என்று
வழுத்திடும் நரிகட் கெல்லாம்
வடசொல்லும் தெரிவதில்லை;
வாழ்வதும் அதனா லல்ல!
வடசொல்லைத் தாய்ச்சொல் லென்பார்
தமிழால்தான் வாழுகின்றார்.
வடசொல்லால் வாழா நாய்கள்
தமிழ்ச்சொல்லைக் குரைப்ப துண்டோ?

"வடநாட்டில் தமிழைத் தாங்கி
வாழ்ந்தவ னில்லை. ஆனால்,
வடசொல்லைத் தமிழர் நாட்டில்
வரவேற்க, ஆதரிக்க,
மடத்தம்பி ரான்கள் உண்டு;
வயிற்றுச்சோற் றுக்கே நாளும்
துடைநடுங் கிகளே ஆன
தூயதமிழ்ப் புலவருண்டு.

"தமிழ்வள்ளல் என்று தன்னால்
தனிப்பட்டம் பெற்ற பார்ப்பான்
அமைவாக இட்ட சோற்றில்
சுவைகண்டான் அன்ன வன்தான்
தமிழச்சுவை மணியாம் அங்கே!
தமிழரின் பகைக்கூட் டத்தை
உமிழாமல் அதற்குழைக்கும்
ஒருவன்தான் தமிழராட்சி

"அமைப்பவ னாம்அந் நாட்டில்!
அறிஞர்கள் பார்ப்பா ரெல்லாம்
நமர்அல்லர் என்னா நாமக்
கல்லான்ஓர் கவிஞன் அங்கே!
சுமக்கொணா வறுமை நல்கும்
வைதிகம் தோய்ந்த வாழ்வே
தமக்கென்னும் தேசிகங்கள்
தமிழ்க்கவி மணிகள் அங்கே'!

மதிப்புள்ள தமிழப் பிள்ளை
ஆயினும், தமிழந் என்றால்
கொதிப்புள்ள பார்ப்பா ரென்ற
கூட்டத்தார் தம்கைப் பிள்ளை!
குதிப்புள்ள வடமொ ழிக்குக்
குளிர்தமிழ்ப் பிள்ளை என்னும்
புதுப்பிள்ளை யான வையா
புரிப்பிள்ளை வாழ்வாரங்கே!

"சென்னையின் தீமை எல்லாம்
நமக்கென்ன தெரியும்? நந்தம்
மன்னரே எடுத்துரைப்பார்
அவண்சென்று வரும்போ தெல்லாம்!
முன்னெலாம் அவர்க்கெவைகள்
தீமையோ பின்ன வைகள்
நன்மையாய்ப் போன துண்டோ?
நங்கையே வியப்பே அன்றோ!

"அணுவொவ் வொன்றுந்தீ மைகள்
அணுகும்அச் சென்னை தன்னை
அணுகியங் கிருந்தாராம்நம்
அணுக்கரை அத்தீ மைகள்
அணுகாவோ? நம்மை அன்னார்
அணுகாத வகைசெய்தாளை
அணுவேனும் பழியோம்! சென்னை
அணுகினார் பிழையே எல்லாம

எனக்கூறி மல்லிகைதான்
இருந்தபஞ் சணையில் துன்ப
மனத்தொடும் புரள லானாள்.
மனம்பொறாத் தோழி ஓர்பால்
சினத்தொடும் ஓடி அஞ்சல்
தீட்டியே அதனை ஏந்தித்
தனக்கொரு பணியாள் வேண்டித்
தெருநோக்கித் தனித்து நின்றாள்!

வந்துகொண் டிருந்தான் சில்லி.
"வருகநீ அண்ணா வாழ்க!
நைந்தாருக் குதவ வேண்டும்;
பொதுவறம் இதுவாம்! நாமோ
இந்தநல் அரண்மனைக்கே
உழைப்பதை இனிதாய்க் கொண்டோம்;
குந்தாதே விளாமா வட்டம்
கொண்டுபோ அஞ்சல என்றாள்.

நடுங்கினான் சில்லி; அந்த
நடுக்கத்தை மறைத்தானாகி,
"நடந்தவை என்ன தோழி
நவிலுக" என்று கேட்டான்.
"மடந்தையாள் ஒருத்தி யோடு
மன்னர் பஞ்ச ணைமேல்
கிடந்ததை மன்னி கண்டாள்,
துடிக்கின்றாள் புழுபோல என்றாள்.

"தன்னண்ணன் இடத்தி லேதான்
சாற்றுதல் வேண்டும்; நாட்டில்
பின்எவர் இந்தத் தீமை
நீக்குவார என்று பெண்ணாள்
தன்னிடம் இருந்த அஞ்சல்
சடுதியில் வாங்கிச் சென்றான்.
முன்நிற்கும் குறைபா டெல்லாம்
முடிந்ததாய் நினைத்தாள் தோழி.

( 155 )





( 160 )




( 165 )





( 170 )





( 175 )




( 180 )




( 185 )





( 190 )




( 195 )





( 200 )




( 205 )






( 210 )





( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )





( 240 )




( 245 )





( 250 )





( 255 )




( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )




( 285 )





( 290 )





( 295 )




( 300 )





( 310 )




( 315 )




( 320 )






( 325 )





( 330 )





( 335 )





( 340 )




( 345 )





( 350 )





( 355 )




( 360 )





( 365 )




( 370 )





( 375 )





( 380 )




( 385 )





( 390 )




( 395 )




( 400 )





( 405 )




( 410 )





( 415 )





( 420 )




( 425 )





( 430 )




( 435 )




( 440 )

பிரிவு -- 13

(அஞ்சலைச் சில்லி நேரே சென்று விநோதையிடமே
கொடுத்து விடுகிறாள்.)

அஞ்சலை விநோதை தன்பால்
அளித்தனன்! "மல்லி கைதான்
பஞ்சணை தன்னில் நீயும்
மன்னனும் படுத்தி ருந்த
நெஞ்சொவ்வாச் செயலைத் தானே
நேரினிற் கண்டாள என்ற
நஞ்சொத்த செய்தி தன்னை
நறுக்காகச் சொன்னான் சில்லி;

பிரித்தனள் அஞ்சல் தன்னைப்
பெருவியப் படைந்தா ளாகி
சிரித்தனள் "தன் அண் ணன்தான்
திறன்மிக்கான் எனினும், மன்னன்
இருக்கின்றான் ; இருக்கின் றேன்நான்;
என்செய்வான் என்னை?" -- என்றாள்.
"ஒருத்திநீ இல்லை. மன்னன்
ஒருவனும் அல்லன், கேட்பாய் :

"உலகமே எதிர்த் திட்டாலும்
ஒருவனாய் நின்றெ திர்க்கும்
வலியுளான் திண்ணன் என்பான்!
வந்தாய்நீ அறிய மாட்டாய்.
கலகமேன்? ஏன்சாக் காடு?
விரகொன்று காண்பாய என்றான்.
தலையினை அசைத்தாள்; "கேட்பாய்
சாற்றுவேன என்று சொல்வாள்;

"தோள்வலி எல்லாம் சின்னத்
துப்பாக்கி முன்நில்லாதே!
ஆள்வலி அமைத்த கோட்டை
அணுகுண்டுக் குப்ப றக்கும்!
நீள்வலி யுடைய மன்னன்
நீராவி ஆற்ற லுக்கு
மூள்வலித் திண்ணன் என்பான்
முதுகுதான் எந்த மூலை?"

இப்பேச்சைக் கேட்ட சில்லி
விநோதைபால் இயம்பு கின்றான்;
"துப்பாக்கி மிகவும் உண்டு;
சுடுபவர் அரசர் தாமோ?
மெய்ப்பான அணுகுண் டுண்டு;
வீசுவோர் அரசர் தாமோ?
அப்பாலும் உண்டு; மன்னர்
அவற்றைக்கை யாள்வதுண்டோ?

''ஒருவனைச் சிறைப் படுத்த
அல்லது சாக டிக்க
இருநூறு துப்பாக் கிக்கும்
இருநூறு பேர்கள் வேண்டும்
பெருங்கோட்டை ஒன்றைத் தாக்கப்
பெருமக்கள் வேண்டும்; மன்னர்
இருக்கின்றார். இருக்கின்றார்என்
றியம்புதல் சரியா அம்மா?

"தூக்குங்கள் என்றால் ஆட்கள்
துப்பாக்கி தூக்கி டாரோ?
தாக்குங்கள் என்று மன்னர்
சாற்றினால் தாக்கிடாரோ?
ஆக்குங்கள் தூளாய் என்றால்
அணுகுண்டை எறிந்திடாரோ?
போக்குங்கள் உயிரை என்றால்
போக்காரோ? என்று சொன்னாள்.

"தூக்குதல் தாக்கல் போக்கல்
தூளாக்கல் எனும்ஆற் றல்கள்
ஆர்க்குண்டு? மக்க ளுக்கே
அவைபொது வான துண்டு!
தேக்குண்ட திலைமன் னன்பால்
தேளிடம் நஞ்சு போல!
வாய்க்குண்டிங்கு அதிகாரந்தான்
என்பாய்நீ மறுக்கின் றேன்நான்.

"அரசனின் அதிகா ரந்தான்
அரை நாளில் மாளக் கூடும்;
அரசனாய் இருப்போன் நாளை
ஆண்டியாய் அலையக் கூடும்;
அரசனின் அதிகா ரத்தை
அறத்தொடும் ஒத்துப் பார்த்துச்
"சரி இரு; கீழிறங்கு
சடுதியில், என்பார் மக்கள்.

"அயலானைத் தொலைப்ப தற்கே
ஆற்றல்சேர் ஆளைத் தங்கள்
செயலாற்றும் நிலையில் சேர்த்தான்
திகழ்அம ரிக்கா ஆண்டான்;
முயன்றஅவ் வாறே தாங்கள்
முற்றுந்தம் ஆளைக் கேட்க
இயலுமோ? மக்க ளால்தாம்
இயலுமென் பதைஉணர்ந்தான்.

"ஆயுதம் செய்தோ ரெல்லாம்
அந்நாட்டின் தொழிலா ளர்கள்!
ஆயுதம் இயக்கு வோர்கள்
அந்நாட்டின் தொழிலா ளர்கள்!
மாயவே அயலார் நாட்டை
மண்ணாக்கு வீர்கள் என்பான்
தீயவன்! செயற்படுத்தத்
தெரிந்தாரும் தீயரல்லர்.

"மக்களை மக்களாலே
மாய்த்திட எண்ணு வோனை
மக்களும் விட்டு வையார்;
மனச்சான்றும் விடுவ தில்லை.
மக்களை மரங்க ளாக
மதித்தநாள் மலைஏ றிற்று;
மக்கட்குத் தொண்டு செய்தே
தனிமகன் வாழ வேண்டும்.

"திண்ணனோ அறத்தில் மேலோன்;
சீற்றமும் அறமே செய்யும்!
மன்னவன் அவனை நேரே
மாய்ப்பது முடியா தென்றேன்;
மன்னவன் ஆணை யாலோ
மற்றவர் மாய்ப்ப ரென்று
சென்னையார் எண்ணுவார்கள்;
எண்ணாது செங்கு றிஞ்சி!"

என்றனன் சில்லி மூக்கன்.
விநோதைதான் இயம்பு கின்றாள்;
'உன்னைக்கொண் டவனை மாய்க்க
ஒண்ணாதோ எனக்கு? நீதான்
என்னைக்கொண் டெல்லாம் செய்ய
எண்ணுகின் றாயே' என்றாள்.
"அன்னை நீ மகளும் நீயே
உன்ஆணைக் கடியேன என்றான்.

            அஞ்சல்

"மன்னிய விளாமா வட்ட
மன்னர் திண்ணர் தாளை
என்தலை சூடி அஞ்சல்
எழுதினேன்; தாம ரைநான்
மன்னியின் துன்ப வாழ்வை
வந்துநீர் மாற்ற வேண்டும்;
இன்னமும் சில்லி சொல்வார்;
சுருக்கமே எழுதி னேன்நான்?

"என்னுமிவ் வஞ்சல் தன்னைத்
தோழியே எழுதி னாளா?
மன்னிதான் எழுதச் சொல்ல
மற்றவள் எழுதினாளா?
ஒன்றுமே புரிய வில்லை;
உனக்கொன்று சொல்வேன், நீ போய்
அன்னசின் னண்ணன் ஊரில்
இல்லைஎன் றறை அவள்பாள்;

என்றனள் விநோதை சில்லி,
"இவ்வாறு நான்உ ரைத்தால்,
இன்றந்தத் தோழி ஏகித்
தொலைப்பேச்சுப் பொறியைக் கொண்டே
அன்னவன் ஊரில் உள்ள
சேதியை அறிந்து கொண்டால்,
என் வாழ்வு மண்ணே அன்றோ?
இதற்கென்ன செய்வேன்? என்றான்.

"ஆவண செய்வேன்; நீயும்
அதுவரை இங்கி ருப்பாய்;
நாவினால் இதையார் பாலும்
நவிலாதே" என்று கூறிப்
பாவைஅவ் விநோதை சென்றாள்
பஞ்சணை அறையை நோக்கி!
காவலன் நீராடிப்பின்
கண்ணே என்றங்கு வந்தான்!






( 445 )




( 450 )





( 455 )





( 460 )




( 465 )





( 470 )





( 475 )




( 480 )





( 485 )




( 490 )






( 495 )




( 500 )




( 505 )





( 510 )





( 515 )




( 520 )





( 525 )




( 530 )





( 535 )





( 540 )




( 545 )





( 550 )







( 555 )




( 560 )





( 565 )




( 570 )





( 575 )





( 580 )




( 585 )

பிரிவு -- 14

(திண்ணனுக்குக் குறிஞ்சித் திட்டின் நிலை தெரியாமற்
செய்ய ஏற்பாடு செய்ய விநோதை வேண்டுகின்றாள்.)

சிற்றுண்டி அருந்த வாடி
செந்தேனே" என்றழைத்தான்.
"சிற்றுண்டி பிறகாகட்டும்;
திண்ணனால் நீயும் நானும்
எற்றுண்டு மாயு முன்னர்
ஏற்றது செய்ய வேண்டும்.
ஒற்றரை அரண்மனைக்குள்
உலவிடச் செய்ய வேண்டும்.

"அரசியோ தோழியோமற்று
அறங்குளார் எவரோ யாரும்
தெருச்செல்ல முடியா வண்ணம்
செய்திட வேண்டும்; மேலும்
ஒருத்தரும் விளாமா வட்டம்
ஓடாமற் பார்க்க வேண்டும்;
உரைத்தவாறிவற்றைச் செய்ய
ஒண்ணுமோ உம்மால்? என்றாள்.

"சின்னமைத் துனனுக் கிந்தச்
செய்தியே எட்டா வண்ணம்
என்னென்ன செய்யவேண்டும்
அதையெல்லாம் இன்றே செய்வேன்!
கன்னலின் கட்டி யேநீ
கடிதினில் உண்ண வாடி!"
என்னலும், மன்னனோடு
விநோதையும் எழுந்து சென்றாள்.







( 590 )





( 595 )




( 600 )





( 605 )




( 610 )

பிரிவு -- 15

(விநோதை மன்னனிடம், சில்லி அமைச்சன் வருவது கூறுகிறான்.)

"யாழும் விரலும் எழிற்றமிழும் நின்நாவும்
வாழும் படிசெய்யும் மாமருந்து! நானவற்றை
உண்ணாத நேரம் உயிர்நீத்த நேரமடி!
கண்ணே உடன்என்னைக் காப்பாற்றவேண்டு" மென்று
மன்னவன் தன்கையால் மங்கைமுக வாயேந்த -
மின்னொடு மெல்லிடையாள் மேலாடை தான்விரித்துக்
கண்ணீர் ஒளிசிந்த காதல் நகைசிந்த,
மண்ணில் முகிற்கூந்தல் வண்டோடு பூச்சிந்த,
ஆடி நடக்குங்கால் அழகுசிந்த, நல்யாழை
மூடிட்ட பட்டோடு தாங்கியே முன்னிட்டுத்
தேர நரம்பு தெரித்து முறுக்காணி
சேரத் திருகியே சீர்செய்து, பட்டோடு
பண்ணிட்டுப் பாவொடு தேனிட்டிருக்கையிலே.
புண்ணிட்டான் நெஞ்சிற் புகுந்தானங்கேசில்லி!

"அம்மா அமைச்சர் வருகின்றார் நின்பாட்டைச்
சும்மா நிறுத்திச் சுருக்காய் மறைந்து கொள்வாய்;
ஏனென்றால் நீ அயலாள்; இந்நாட்டுக்காரியல்லள்;
ஊனம் வருமன்றோ, உண்மை தெரிந்துவிட்டால்?
அந்த அமைச்சர் அடாச்செயல்கள் செய்பவர்,
இந்தமன்ன ரேஎனினும் இம்மியும் தாங்கார்!"
எனச்சொல் வளர்த்திட்டான்; ஏந்தலுக்கு வந்த
சினத்தீ மிகுதி எனினும், செயலொன்றும்
செய்யஇது நேரமல்ல என்றெண்ணிச் "சில்லிநீ
பைய அமைச்சரைப் பார்க்க அழை" என்றுரைத்தான்.
சில்லி மெதுவாகச் சென்றான்; அறைக்குள்ளே
மெல்லியும் சென்றாள் விரைந்து.

            வேறு; (அகவல)

"அரசியைப் பிரிந்துநீ அயல்நாடு சென்றாய்;
அரசி உயிரின் அரைப்பங்கு தீர்ந்தது;
வந்தாய்; அரண்மனை வாராததால் காற்பங்கு
வெந்தது! வேந்தே வேறோரு பெண்ணுடன்
உன்னைக் கண்டால் மீதியும் ஒழியும்!
மன்னியின் முழுதுயிர் வளர்க்க வருவாய்.
பாவை தனக்கிவ் வுலகில் தேவை
சோறன்று; மிளகின்சாறன்று; தமிழ்ஒன்றே!

அத்தமிழ், மாதர்க் கருளுவ தென்னெனில்
தற்காத் துத்தற் கொண்டான் பேணித்
தகைசான்ற சொற்காத்துச்சோர் விலாள்பெண்
என்ப தாகும், இதனை அறியீரோ?
இல்லாள் கடமை இவைகளாம்; அவற்றைஅந்
நல்லாள் நடத்தவும் தவறாள் அன்றோ?
தன்னைக் காத்துக் கொண்ட தையல்
உன்னைக் காக்கும் உறுதி பூண்டாள்;
அன்றியும் தன்குடிக் கமைந்த பெருமைக்கும்
ஒன்றும் கேடு வராவகை உணர்ந்தவள்
இவைகளில் சோர்வு கொள்ளுவாளில்லை.

தவறென் றதனைச் சாற்ற லாமோ!
அறவழி மறந்தாய்; பிறவழி அடைந்தாய்!
இருதா ரம்கொளல் நம்குடிக் கேற்றதோ?
அயலாள் ஒருத்தி உன்னை அணுகி
மயலால் உன்றன் மனம்கெடுக்கின்றாள்.
அன்னவள் தொடர்பை அகற்றி அதன்பின்
அரசி யிடத்தில் அதனைச் சொல்ல
விரைவில் எழுந்துவா; விழுந்தவள் எழுவாள்;
அயலான் தன்னை அழிக்க அரசி
தூக்கிய வாளை தொப்பென்று போட்டாள்
ஏனெனில் நீ அவ் வேந்திழை மேலே
உயிர்வைத் திருப்பதை உணர்ந்தால் ஆதலால்!

உண்ண மறுத்தாள்; உறங்க மறுத்தாள்;
உயிரை வெறுத்த கார ணத்தால்
தன்னுயிர் விடுவதே உன்னைக் காப்பதாம்
அவளுயிர் பிரிந்தால் அரசநீிருந்துதல்
முடியும்; அல்லது நின்னுயிர் முடியும்!
ஏனெனில் நீசெய்த மானமி லாச்செயல்
மக்கள் அறியும் வழியொன் றேற்படும்.
சிக்கென உன்னைத் திருத்த முயல்வார்;
இன்றேல் உன்னை அன்றே அழிப்பார
என்று கூறினான். அமைச்சன் இயம்பிய
தரசன் நெஞ்சில் அச்சுறுத்தியதே!

"உண்ணவும் உறங்கவும் மறுத்தன ளாஎன்
எண்ணத் தினிலே இருந்திடும் அரசி?"
என்றான். "ஆம என் றிசைத்தான் அமைச்சன்.
விரைவில் எழுந்தான்; மிகவும் இரக்கம்
காட்டிக் கொண்டான்; கடிது சென்றான்,
அமைச்சன் முன்னே செல்ல,
இமைப்பினில் அரண்மனை தன்னை நோக்கியே.







( 615 )




( 620 )





( 625 )




( 630 )




( 635 )







( 640 )





( 645 )




( 650 )




( 655 )





( 660 )




( 665 )





( 670 )




( 675 )





( 680 )




( 685 )