பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 16


(ஆலைத் தொழிலாளர் அரண்மனையைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அக்கூட்டத்தைத் தாண்டிக் கொண்டு அரசி
மல்லிகையிடம் செல்கிறாள்.)

ஆலைத் தொழிலாளர் அன்னார்க் குடன்வருந்தி
வேலைநிறுத் தம்செய்த வேறு தொழிலாளர்
ஆனபெருங் கூட்டம் அரண்மனையைச் சூழ்ந்திருக்க
வான உடுக்களிடை வட்டநிலாப் போல்சேந்தன்.
"மன்னர் வருவார்; வழிசெய்வார்; நீங்களெலாம்
இன்னலின்றிக் காத்திருங்கள என்று தெளிவுரைத்து
நின்றிருந்தான்! நேர்வந்த மன்னனும் தன்மக்கள்
கூட்டத்தைத் தாண்டி அரண்மனைக் கூடத்தின்
நீட்டம் கடந்து நிலாமுற்ற முங்கடந்து
தக்க மகளிரில்லம் சார்ந்த அறையொன்றில்
மிக்க துயரும் மெலிந்த உடலும்நிறை
கண்ணீரும் கம்பலையும் ஆகஒரு பஞ்சணையில்
பெண்ணிற் பெருந்தகையாள் பேரரசி தான்கிடக்கச்
சென்று நின்றான் வேந்தன் "திரும்பி எனைப்பாராய்
மன்றின் விளக்கே மல்லிகையே? என்றுதன்
அங்கையினால் அன்பின் அரசி முகம்திருப்பத்
திங்கள் முகத்தாள் செழுந்தீயைக் கக்கலுற்றாள்;

பெண்ணினத்தின் குன்றாய் பெருமைதனை நீ தோன்றி
மண்ணாக்கி விட்டாய்; மரம்கணவன் வேர்மனைவி!
வேரை மரம்வெறுத்தால் வீழ்ந்திடுமன் றோகுடும்பம்!
பண்டுமுதல் இந்தநாள் மட்டும் பழங்குறிஞ்சி
கண்டதுண்டா ஆடவ னிரண்டுபெண்டு கொண்டதனை?
என்ன நினைத்தாய்? அறநெறியை ஏன்மறந்தாய்?
மன்னவன்ஏ தும்செயலாம் என்றால் குறிஞ்சிக்கும்
சென்னைஎன்று சொல்லுமந்தத் தீயவரின் நாட்டுக்கும்
என்னதான் வேற்றுமை என்கின்றாய்? எண்ணிப்பார்.

மன்னிநான் இங்கிருக்க மற்றொருத்தி யோடுநீ
பின்னிய தோளில் பிழைசுமந்தாய். அங்கவளைக்
கட்டிய தோளில் கறை சுமந்தாய் காமத்தால்.
எட்டிய தோளினிலே ஏச்சுச் சுமந்தாய்
அயலாளை நாட்டை அழிப்பாளைத் தீய
மயலால் அணைத்தஉன் மார்பிற் பழிசுமந்தாய்.
இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டிந்த நாள்மட்டும்
ஒவ்வாச் செயல்செய்யா உன்றன் பழங்குடியின்
கீர்த்திக்கும் செந்தமிழ் அன்னைக்கும் நாட்டுக்கும்
வாய்த்தாய் பெருவாழ்வை வாட்டும் மதம்போலே
தோய்த்தாய் சுவைப்பாலில் நச்சுக் கொடியைத்
துறைதோறும் உள்ள தொழிலாளர் எல்லாம்
இறைவன்எங் கேஎங்கே என்றேங்கும்போது

   திருவரங்கச் சேரியிலே சென்னைத் தமிழன்
   இரவைக் கழிப்பதுபோல ஏனோ மறைந்துறைந்தாய்?

கட்டத் துணியளித்தார். கல்லுழுது நெல்லளித்தார்.
வெட்டிக்கா டெல்லாமே வீடாக்கித் தந்தார்!
எருக்கு முளைக்கும் இடர்ப்பாம்பின் பல்போல்
பருக்கைக்கல் வாய்த்தும் படுபள்ளம் வாய்த்தும்முள்
முட்டுநிலம் நேராக்கி முல்லை பரப்பியதோர்
பட்டு மெத்தை போன்றநிழற் பாதை யளித்தார்.
தரைமீது பட்டணங்கள் தந்தார்; கடலின்
திரைமீது பட்டணங்கள் செல்லும்படி அமைத்தார்
வானத் தெருக்களிலே மாமுகிலின் சோலையிலே
போனேன் இதோ என்னும் புள்ளூர்தி செய்தளித்தார்

அப்போதைக் கப்போதில் ஆசையுற்ற எப்பொருளும்
தப்பாது செய்தளித்தார் தங்கள்செல் வாக்கைஎல்லாம்
இந்நாட்டை நீயாள ஈந்தார் தலைமீது
பொன்முடியைச் சேர்த்துப் புகழ்ந்தார்; அவர்களைநீ
மாந்தர் எனவும்
மாந்தர் எனவும் மதிக்கவில்லை; உன்னையவர்
வேந்தர் எனவும் மதிப்பாரோ? வேல்எடுத்துக்
கொந்தும் வறுமை கொளுத்தும் பசிக்கொடுமை
இந்தநே ரத்திலுமா கூத்தியிடம்இன்பம்!
நாய்திருந்துங் குள்ள நரிதிருந்துங் காஞ்சிரங்

காய்ந்திருந்தும் எட்டிக் கனிதிருந்தும் சென்னையினை
ஆளுவதாய்ச் சொல்லி இனந்தாங்கும் அன்பிலாத்
தேளும் திருந்துமினி நீதிருந்தப் போவதில்லை!
தீங்கு செய்தாய் செய்கின்றாய் செய்வாய்! இதோ நொடியில்
ஈங்குன்னைக் கொல்ல முடியும்என்னால் என்றாலும்
கோதை நலத்துக்குக் கொன்றாள் என் றிவ்வுலகம்
ஓதும் அதனால் உலகம்அழிக் கட்டுமுனை?
என்றாள் இடையில் இருந்த பெருங்கத்தி
ஒன்றால் உயிர்பிரிந்தாள் நற்பண்பின் ஓவியத்தான்.
நெஞ்சம் திடுக்கிட்டான் நேரிலுள்ள எல்லாமும்
அஞ்சப் புரிந்தன! ஆஎன்றான் ஓ என்றான்!
தன்பிழைகள் எல்லாம் தனித்தனியே ஆளாகி
உன்னைவிட மாட்டோம் ஒழிந்துபோ என்பதுபோல்
தன்நேரில் தோற்றும், தனிமன்னன் தாள்நெருங்கி

என்னசெயல் செய்தேன் தான்! என்னசெயல் செய்தேன்நான்!
மன்னவர்க் குள்ளபெருமாண்பு குறைந்தேனே!
பண்டைப் பெருமைஎலாம் பாழாகச் செய்தேனே!
அண்டை அயலார்கள் தூற்றுவரே! அன்புடைய
என்மனைவி இந்தநிலை எய்தப் புரிந்தநான்
இன்னும் உயிரோ டிருத்தல் சரியாமோ??
என்றான் எடுத்தான் உடைவாள் உயர்த்துகையிலே,
நின்றாள் அங்கோடி வந்து நீள்வாளைத் தான்பிடித்தே
?எண்ணித் துணிந்திடுக!? என்றாள், விநோதையவள்

கண்களின் முன்னேயும் கண்டு பழகிய ஓர்
பொன்னிலே புத்தொளியை அப்போதும் கண்டேஅப்
புன்னைகையில் நெஞ்சத்தைப் போக்கி உடைவாளை
அன்னவளே கொள்ள அவள்தோளில் தோளிட்டே,
?மன்னி பொறாமை மடித்த தவளை? என்று.
சொல்லி இனித்தொல்லை ஒழிந்ததென்று துள்ளியே
மெல்லி விநோதையுடன் சென்றான் விடுவிடென்று!

?நல்லாரால் அன்றோ நடக்கின்ற திவ்வுலகம்!
எல்லாரும் ஏத்தும் அரசி இறந்தாளே?!
என்றங் கிருந்தவர்கள் எல்லாரும் கைகட்டி
ஒன்றும்பே சாமலே கண்ணீர் உகுத்திருந்தார்;
ஏங்கின நெஞ்சம்; எரிமலைபோல் மூச்சுக்கள்
வாங்கின; மார்பு வணங்கின அத்தலைகள்!
நாளை நடப்பதென்ன என்றந்த மெய்த்துன்ப
வேளை மிகவும் நடுங்கிற்று






( 5 )




( 10 )




( 15 )




( 20 )





( 25 )





( 30 )




( 35 )




( 40 )






( 45 )




( 50 )





( 55 )




( 60 )





( 65 )




( 70 )




( 75 )





( 80 )




( 85 )





( 90 )





( 95 )




( 100 )

பிரிவு -- 17

(மன்னனும் விநோதையும் போகின்றார்கள். மன்னியின்
உயிர் போனதைக் காணுகின்றாள் தோழி தாமரை; அவள்
கூந்தல் அவிழ்கின்றது. கண்ணிர் பெருகின்றது. அவள்
வெளியிட ஓடுகின்றாள் -- இதை விரித்துரைக்கின்றது இப்
பிரிவு.)

             எண்சீர் விருத்தம்

?போகின்றாள் பழிகாரி! போகின் றாளே
பொன்னான என்னரசி பதைப தைத்துச்
சாகின்றாள் என்பதையும் எண்ணி டாமல்,
தாய்நாடு துடிப்பதையும் எண்ணி டாமல்,
வேகின்றார் இனமக்கள் எனஎண் ணாமல்,
வேந்தனார் உள்ளத்தைப் பிரித்தெ டுத்துச்
சாகின்றார் சாகட்டும் எனஅ தோபார்
போகின்றாள் பழிகாரி! அவள்கை கோத்துப்
போகின்றார் வேந்தனார் நன்றோ? நன்றோ?

?நாட்டாரின் உள்ளமெலாம் சீற்றம் வைத்து
நடக்கின்றாள்! அவள்கொண்ட இறுமாப் புக்கு
நீட்டாண்மைக் காரராம் இந்த வேந்தர்
நெடுந்துணையும் ஆனாரே! அறம்போ யிற்றே!
போட்டாளே இந்நாட்டின் இன்பவாழ் விற்குப்
புதுநச்சுக் குண்டுதனை! வேந்தர் தாமும்
ஆட்பட்டார்! அரசிக்கு வைத்த அன்பை
அப்படியே கூத்திக்கே ஆக்கினாரே!

?நெறியதனை இடைமறித்தாள்! அழித்தாள் நாட்டை!
நேரரசின் உளம்ஒடித்துத் தின்றாள் என்று
பொறையுளத்து மன்னியார் பொறுமை நீத்தார்;
பொன்னான தன்வாழ்வை நீத்தார் அந்தோ
திறலில்லேன் அரசனார் கையினின்று
தீயாளைப் புறம்போட்டுக் கொன்றே னில்லை!
இறக்கவில்லை இருக்கின்றேன்! இழிவு கொண்டாள்
இறப்புக்கு வழிதேடிச் சாவேனாக!?

             அகவல்

கையோடு கையும் காதற் பாட்டுமாய்
ஐயனும் அவளும் ஆடிச் சென்றனர்.
கால்தள் ளாடக் கைகள் ஓயச்
சீறு கின்ற சிற்றிதழ் துடிக்கத்
தாமரை அங்குத் தமரை யெல்லாம்
அழைத்தா ளாகி, அழுதா ளாகி,
அங்குளார் அஞ்சி நடுங்குதல் அறிந்து,
வாழைநார் போலத் தரையில்
வீழுவாள் விம்முவாள் உயிர்பிரிகிலளே.




( 105 )







( 110 )




( 115 )





( 120 )





( 125 )




( 130 )







( 135 )




( 140 )

பிரிவு -- 18

(விளா மாவட்டத்திலுள்ள திண்ணனுக்கும், இளந்திரை
யனுக்கும் மல்லிகை இறந்த செய்தி எட்டுகிறது. அவர்கள்
வருகின்றார்கள். வருகையில் இரண்டு பெண்களின் அழுகுரல்
கேட்கிறது. அவர்களைத் துன்பத்தினின்று மீட்க முயன்றதில்,
திண்ணனும் இளந்திரையனும் கொல்லப்படுகின்றனர்,)

          அறுசீர் விருத்தம்

சென்றது விளாமாவட்டத்
திண்ணனாருக்கும் மன்னி
சென்றஅச் சேதி மற்றும்
சிலவிடங் கட்கும் ஆங்ஙன்!
குன்றினை முகில்ம றைத்துக்
கொண்டாற்போல் குறிஞ்சி நாட்டை
வன்துயர் மறைந்த தங்கே!
மகிழ்ந்தது தரும இல்லம்!

?அரியஎன் தங்கையே! என்
றழுகுரல் ஒன்றும், ?என்னைப்
பிரிந்தாயே அம்மா? என்ற
பெருங்குரல் ஒன்றும் தாங்கி,
விரைந்தது நகரை நோக்கி
வெண்ணிறப் பொறி இயக்கம்!
வருகையில் மாந்தோப்பொன்றில்
வாய்த்ததோர் துன்பக் காட்சி!

இளமையும் அழகும் வாய்ந்த
இருபெண்கள் குழல்விரித்துக்
குளப்பெரு வாய்க்கால் போலக்
குளிர்விழி நீர்பெருக்கி
வெளியுல கைவெறுத்து
வெள்ளுடை புனைந்தாராகி
வளர்ந்ததீ யிற்குளிக்க
வலம்வந்து கொண்டிருந்தார்!
விழப்போன இளையாள் தன்னை
விலக்கினான் அரசன் மைந்தன்!
விழப்போன மூத்தாள் தன்னை
விலக்கினான் திண்ணன் என்பான்!
?ஒழிப்பானேன் உங்கள் ஆவி?
உற்றதை உரைப்பீர்? என்ன,
விழப்போன இரண்டு பேரும்,
?விடுங்கள்எங் களை? என்றார்கள்.

?உண்மையில் லாத இந்த
உலகினில் வாழ மாட்டோம்;
பெண்மைக்கே மதிப்பில் லாத
பித்துல கத்தை எங்கள்
கண்ணாலும் காண மாட்டோம்;
கைகளை விடுங்கள்!? என்று
திண்மையால் விலக்கு தற்குச்
செயல்திறம் காட்டினார்கள்

திண்ணனோ கெஞ்ச லானான்!
?சேயிழை யாளே! சாக
ஒண்ணுமோ? உலக மெச்சும்
ஓவியம் மறைய லாமோ?
கண்ணான தமிழ்ம றைந்தால்,
கருகாதோ தமிழர் வாழ்வே?
பண்ணான வாய்திறந்து
நடந்தது பகர்க!? என்றான்,

மூத்தவள் மொழிய லானாள்!
?முதியபாண் டியன்என் தந்தை
நீத்தான்இவ் வுலக வாழ்வை!
நீள்புகழ்க் குறிஞ்சி நாட்டைக்
காத்திடும் திரைய மன்னர்
கடிதினில் அங்கு வந்தார்
?வாய்த்தமைத்துனற்கு நானே
மணமுடித் திடுவேன்? என்றார்.

?இவள்என்றன் அண்ணன் பெண்ணாள்;
இவளைத்தம் மகனுக் கென்றே
உவப்புடன் அழைத்து வந்தார்
ஊர்வந்தோம்; ஊரார் எல்லாம்

'இவர்கள்ஏன் இங்கு வந்தார்?'
என்றனர்! எதிர்க்க லானார்!
அவனுள்ளான் ஓரமைச்சன்
எதிர்ப்புக்குத் தலைவன் அன்னான்.

'தொழிலாளர் எல்லாம் எம்மைத்
தொலைத்திட ஓடிவந்தார்.
வழிதேட நாங்கள் அந்த
மன்னர்பால் சொன்னோம்; மன்னர்
அழலானார்; அமைச்ச னுக்கே
அஞ்சினார். 'எம்மணாளர்
எழிலான முகமும் பார்க்க
இல்லையே காட்டும்' என்றோம்.

'அவர்களால் உம்மைக் காத்தல்
ஆகாது; மன்னி வீட்டின்
சுவர்க்கோழி போல ஒட்டிக்
கொள்ளுக என்று சொன்னார்.
அவர்சொன்னவாறு செய்தோம்.
வந்தனர் பகைவர் அங்கும்;
கவலையால்மன்னி யாரும்
எங்களைக் கைவிட்டார்கள்.

'எங்கேனும் கண்கா ணாத
இடத்தினில் மறைந்தி ருப்பீர்;
உங்களைச் சிறிது நாளில்
உங்களின் மணவாளர்பால்
மங்காமல் கூட்டி வைத்து,
மகிழுவேன் என்றார் மன்னர்
இங்குவந் திருந்தோம், மன்னி
இறந்தது கேள்வி யுற்றோம்.

'வீழ்வதா இந்தத் தீயில்?
அல்லதித் தீய நாட்டில்
வாழ்வதா? உம்மை நாங்கள்
வரம்ஒன்று தரக்கேட் கின்றோம்.
வாழ்வைஇன் புறுத்தும் எங்கள்
மணாளரில்லாஇந் நாட்டில்
விழச்செய் திடுக! இத்தீ
சந்தனச் சோலை'' என்றாள்.

''நான்தான்உம் மணாளன்'' என்று
நவின்றனன் திண்ணன் என்பான்!
வான்போலும் உயர்வு மிக்கான்
மன்னவன் மகனும், ''நான்தான்

தேன்போலும் மொழியாய்! உன்றன்
திகழ்மண வாளன்! இன்னும்
ஏன் அழு கின்றாய்?'' என்றான்.
இளையாள்பால் அரச மைந்தன்.
''குறிஞ்சிநாட் டுக்கு மன்னி
என்தங்கை என்ற பேச்சு
மறைந்தது; எனக்கிருந்த
மரியாதை அவள்இறக்கப்
பறந்தது; மணந்தேன் உன்னைப்
பார்க்கவு மில்லை, அன்னாள்
இறந்தது குறிஞ்சி யின்சீர்
இறப்பதற் காகும்'' என்று.

திண்ணன் தான் நடக்க, மூத்த
சேயிழை தொடர்ந்தாள்! அங்கோர்
வண்ணப்பூங் கிளைகள் தாழ்ந்த
மாவின்கீழ் உட்கார்ந்தார்கள்.
''பண்ணாத துடுக்கெல்லாம்நான்
பண்ணுவேன், திரைய மன்னன்
அண்ணாந்து பாரான்; என்னை
ஏன் என்று கேளான் அன்றோ?

''தங்கையால் தனக்கு வாய்ந்த
சலுகைகள் கொஞ்ச மல்ல;
இங்கென்னை மறந்தாள் தங்கை!''
என்றுதன் கண்துடைத்தே.
அங்கந்த மூத்தாள் தோளில்
அணிதிகழ் தன்தோள் சேர்ப்பான்.
''தங்கையின் மனத்தின் வண்ணம்
தார்வேந்தன் செய்தி ருந்தால்,

''நானன்றோ குறிஞ்சி மன்னன்
நங்கைக்கு நாணிப் பூவின்
தேனன்றோ?'' என்று கூறிச்
சேயிழை கூந்தல் நீவி.
மீனன்றோ விழிஉ னக்கே!
மின்னன்றோ இடை யுனக்கே!
கோன் என்றால் நானே! நீயோர்
கோமகள் அன்றோ!'' என்று.

கன்னப்பூக் கிள்ளிக் கிள்ளி
கைவிரற் சுவைத்தேன் உண்பான்.
''என் அத்தான்!'' என்றாள்; ஆவி
உடல்பொருள் இன்றோடெல்லாம்

உன்னைத்தான் சேரும் என்றிம்
மாம்பழம் உனக்க ளித்தேன்;
என்னைத்தான் காதலித்தாய்
என்றிதை உண்ண வேண்டும.

எனக்கூறி மாம்ப ழத்தை
ஈந்தனள்; திண்ணன் உண்டான்!
அனைத்துவேர் அற்று வீழும்
அரசென வீழ்ந்தான் மண்ணில்!
தினைத்துணை உயர்வு மின்றித்
தீர்ந்தது திண்ணன் வாழ்வு!
மனத்தினில் மகிழ்ச்சியோடு
மற்றவள் வருகை பார்த்தாள்.

"அன்னவள் மன்னன் மைந்தன்
தீர்ந்தனன்!" எனப்பதைத்தே,
"உன்னவன் செய்தி என்ன?
உரை" என்று கேட்டு வந்தாள்.
"அன்னவன் தானும் செத்தான்;
முழுவெற்றி அடைந்தோம்!" என்று
இன்னலே உருவாய் வந்த
விநோதைதான் இயம்பினாளே.

மங்கையர் பொறியி யக்க
வண்டியை இரண்டு டம்பை
அங்குள்ள குளத்திலிட்டே.
அறஞ்செய்தார் போல்ம கிழ்ந்தே.
திங்கள்வெள்ளாடை நீக்கிச்
செழியபொன்னாடை பூண்டு.
தங்கள் ஒர் வண்டி ஏறித்
தகதக என்று சென்றார்.





( 145 )







( 150 )





( 155 )




( 160 )





( 165 )




( 170 )




( 175 )





( 180 )




( 185 )





( 190 )





( 195 )




( 200 )





( 205 )






( 210 )




( 215 )





( 220 )




( 225 )





( 230 )





( 235 )




( 240 )





( 245 )





( 250 )




( 255 )





( 260 )




( 265 )





( 270 )





( 275 )




( 280 )





( 285 )






( 290 )




( 295 )





( 200 )




( 205 )





( 210 )

பிரிவு -- 19

(இலவந்தோப்பில் செழியன் முதலியோர் போகின்றனர்.)

நிலவின் ஒளியில், இலவந்தோப்பில்
அறிவ ழகனெனும் அமைச்சனும், படையின்
தலைவ னான சேந்தனும், தக்க
செழியன் என்னும் சேந்தனின் நண்பனும்
வல்லான் துணைப்படைத் தலைவனும் வந்தே,
அரசியல் நிலையை ஆய்வாரானார் ;
அமைச்சன், "அன்புறு தோழரே! அரசரின்
தமிழத் தன்மை சரிந்தது. நாடு
மொழிகலை ஒழுக்கம் நாகரிகம்
ஆகிய வற்றில் அக்கறை ஒழிந்தது,
ஒன்றுக்கு மன்னர் உயிர்வாழ் கின்றார்;
அவ்வொன்று விநோதை அடியிற் கிடத்தல்.

அரசி யாரை அணுக வில்லை;
அரசர் செய்கை பெருவியப்பன்றோ?
அரசியார் சாகக் காரணர் அரசர்!
குறிஞ்சி கண்ட தில்லைஇக் கொடுமை!
அரசியார் தற்கொலை அடைந்தார்; அரசரும்
தற்கொலைக் காகத் தாங்கிய வாளும்
தையல் விநோதையால் தடைபட்ட தென்றால்
மன்னனுக் கென்றோர் மனமே இல்லை.
அவள்மனம் அரசர் மனமாயிற்று.
மன்னியார் மாண்டதைத் திண்ண னுக்கும்
இளந்திரை யனுக்கும் சொன்னோம். இருவரும்
தொலையொலிக் கருவியால் வருவதாய்ச் சொல்லினர்
இங்குவரவில்லை, அங்கும் இல்லை!
வழியில் அவர்களை மாய்த்தவர் யாவர்?

அன்று விநோதையும் அம்புயந் தானும்
பொறி இயக்க வண்டியிற் பொருந்தி
நகர்ப்புறம் நோக்கிச் சென்ற தாய்நம்
துப்பறி கின்றவர் சொல்லக் கேட்டோம்.
வழிம டக்கி அவர்களை மாய்க்கும்
ஆற்றலோ அந்த மங்கையர்க் குண்டு?
திண்ணன் என்னுமச் சின்ன அண்ணனும்
இளந்திரை யன்எனும் ஏந்தல் மகனும்
உயிருடன் இருப்பதாய் உரைத்தார் இல்லை.
அறத்தின் தலைவி அரசி இல்லை;
திண்ணன் இல்லை; சீற்ற வேங்கையை
எற்றிய இளவர சிளந்திரையனில்லை.
நாமிருக் கின்றோம என்று நவின்றான்.

சேந்தனின் நண்பன் செழியன் சொல்வான்;
"நாமிருக் கின்றோம தோழரே! நாட்டினர்
தாமிருக் கின்றார்; தாக்குவோம் பகையை!
நெஞ்சம் என்னும் நன்செய் நிலத்தில்
நடவுக்கு மதமெனும் நாணல் சேர்த்த
விநோதையைத் தாக்குவோம்! விநோதை யாளின்
கூட்டம் கூட்டோடும் ஒழியத் தாக்குவோம்!
கருப்பையால் வராததும் விருப்பொன் றிராததும்
உருக்கொ ளாததும் ஆகிய ஒருபொருள்.
தெருத்தொறுங் குந்தி இருக்குமென் றுரைக்கும்
உருப்படாக் கோயில் உருப்படக் கண்டால்
தாக்குவோம்! தாய்க்குத் தனிப்புகழ் ஆக்குவோம்
வந்துள நோய்க்கு மருந்து கொடுப்போம்!
அந்நோய் மீண்டும் அணுகாதிருக்க
ஓர்நல் மருந்து குடியரசொன்றே!"
என்று கூறிய அளவில்
சென்றனன் பேச்சு மன்றில் சேந்தனே.

      சேந்தன் மன்றில் பேசுகின்றான்

              எண்சீர் விருத்தம்

'வல்லானின் உணர்ச்சி வெள்ளம் வரம்பு மீறி
வாய்க்காலை யுடைத்துக்கொண்டோடக் கண்டோம்!
செல்லுமா வல்லானின் எண்ண மெல்லாம்?
திடீரென்று பகைவர்களைத் தாக்கு தற்கே
எல்லாரும் ஒப்புவரா? படைவீரர்கள்
இன்றைநிலை அறிவாரோ? மன்னனைப் போய்க்
கொல்லுகஎன் றால்கொல்ல ஒப்புவாரோ?
கொடுமைகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.

''தோழர்களே! மன்னவனும் விநோதை தானும்
தூய்மையிலா மற்றவரும் குறிஞ்சித் திட்டு
வாழாத வகைபுரிந்து வருகின் றார்கள்;
மாற்றியமைத் திடவேண்டும் ஆட்சி தன்னை;
ஏழைமுதல் எவருமுணர்ந் திடுதல் வேண்டும்;
பெரும்பாலோர் நம்கருத்தை ஏற்க வேண்டும்;
சூழ்நிலையை எண்ணாத மறவன் கையில்
துப்பாக்கிக் குண்டெல்லாம் சுண்டைக் காயே!

''எழிலான இளந்திரையன் திண்ணன் என்ற
இருவருமே வரும்வழியில் விநோதை தானும்
அழகுடையை அம்புயமும் நடித்துத் தங்கள்
அழகாலே வஞ்சித்துக் கொன்றி ருந்தால்
கழிவியப்புக் கொள்ள அதில் என்ன உண்டு?
கையாலா காதவர்க்கு வஞ்சம் ஒன்றே
வழிகாட்டும்! வஞ்சகரை வீரர் என்று
நம்அமைச்சர் சாற்றினார் சரியே அல்ல.

''நம்மனோர் மிகவிழிப்போ டிருக்கவேண்டும்;
நாம்இதிலே ஒருசெய்தி அறிய வேண்டும்.
அம்மாதர் பலவஞ்சம் புரிதல் கூடும்
அவ்வகையால் விழிப்புடன்நாம் இருக்க வேண்டும்.
இம்மண்ணில் ஆடவர்க்குப் பெண்என் றாலே
எஃகுமனம் மெழுகாகும்! அதிலும் அப்பெண்
செம்மையுற இளமைஎழில் பெற்றிருந்தால்
திருக்குறிப்புத் தொண்டர்தாம் சேயிழைக்கே!

''ஆதலினால் விநோதையிடம் அணுகு வோர்கள்
அடகுவைத்து விடவேண்டாம் தம்நெஞ் சத்தை
யாதுசெய்ய வேண்டுமினித் திட்டம் ஒன்றே
ஏற்படுத்திக் கொளவேண்டும்; திட்டம் இன்றி
மோதுவது காரிருளில் கண்ணில்லாதான்
மோதுவதாய் முடியும் நகையாடும் வையம்;
தோதாக ஆலையிலே வேலை செய்யும்
தொழிலாளர் தமைமுதலில் தொடுதல் வேண்டும்.

''பயிர்த்தொழிலா ளிகள்செய்தி பொத்தற்கூடைப்
பயறாகும்; நிலைமையிலே சிறிது யர்ந்து,
வயல்வரப்பில் குடைபிடித்து நின்று கொண்டு
வசைபாட்டுப் பாடிடுவார் தொழிற்கூட்டத்தை
வெயில்தனிலே துடிக்கின்ற குறிஞ்சித் திட்டை
விடுதலைசெய் வோம். உடைமை பொதுவாய்ச் செய்வோம்!
அயலார்கள் நம்திட்டம் தன்னிற் சேர்த்தே
அவர்களையும் இந்நாட்டுக் கொடியில் சேர்ப்போம்!

தனிமனிதன் ஆட்சியினி வேண்டாம்!'' என்று
படைத்தலைவன் சேந்தன்தான் சாற்றி நின்றான்

''இனிதென்றார். தீமையிரா தென்றார்,'' அங்கே
இருந்தவர்கள் எல்லோரும்! "விநோதை கூட்டம்
நினைவதென்ன, நிகழ்த்துபவை என்ன? என்று
நேரிற்சென் றறிவதற்குத் தோழர் சில்லோர்
தனித்தனியே திரிந்துவர வேண்டும்! என்றார்;
தமிழ்வாழ்த்தி நிறுவனத்தை வாழ்த்திச் சென்றார்.



( 215 )




( 220 )




( 225 )





( 230 )




( 235 )




( 240 )





( 245 )




( 250 )





( 255 )




( 260 )




( 265 )




( 270 )









( 275 )





( 280 )




( 285 )





( 290 )





( 225 )




( 300 )





( 305 )




( 310 )





( 315 )





( 320 )





( 325 )

பிரிவு -- 20

 

(தரும இல்லத்தில் வேந்தனும் விநோதையும்)

           அறுசீர் விருத்தம்

தருமஇல் லத்தில் ஓர் நாள்
தார்வேந்தன் விநோதை யோடு
பெருமகிழ் வோடி ருந்தான்;
வயிற்றினைப் பிசைந்த வாறே
ஒருகூட்டத் தார்பு குந்தார்;
''கூலியை உயர்த்த வேண்டும்;
விரைவாக ஆலைக்காரர்க்
கறிவிப்பு விடுப்பீர்!'' என்றார்.

''குறைபாட்டை முதலா ளிக்குக்
கூறுவேன்; அவள்எண்ணத்தை
மறையாமல் உமக்குச் சொல்வேன்.
மற்றுநான் உம்கருத்தை
நிறைவேற்ற முடிவ தில்லை.
நீங்களோ என்னைப் பற்றி
முறையற்ற வகையில் பேச
முயல்கின்றீர்! என்றான் மன்னன்.

பதைக்கின்றோம்! வயிற்றுக் கின்றிப்
பதைக்கின்றோம்! உம்மைக் காண
உதைக்கின்றார். அரண்ம னைக்குள்
ஒற்றைஆள் நுழையச் சென்றால்!
கதைக்கின் றான் ஆலைக்காரன்.
காட்டடா இரக்கம் என்றால்!
இதற்கெல்லாம் காரணம் யார்?
ஏந்தலே! நீவிரன்றோ!

ஏற்றடா கூலி! என்று
மன்னவர் இயம்பும் ஓர்சொல்
சோற்றுக்கு வழியும் செய்யும்;
சோர்வினைப் போக்கும், யாரும்
கூற்றுக்கே இரையாகார்கள்;
குழந்தைகள் அழுகை வீழும்;
வீற்றிருக் கின்றீர் அங்கே
விளைவினைச் சொல்வதெங்கே?

''எருமைபோல் குடிசைச் சேற்றில்
புரளவும் அட்டி இல்லை;
ஒருமையாய் நாங்கள் எல்லாம்
உறங்கவும் அட்டி இல்லை.
எரியினை மிதித்த வர்கள்
எதிர்நோக்கிக் குதித்த தைப்போல்
தருமஇல்லம்குதித்தோம்,
தணற்பசி எரித்ததாலே!

''உமை நாங்கள் திட்டவில்லை;
உயிர்போகும் நிலையை நாங்கள்
எமக்குள்ளே பேசிக் கொண்டோம்;
எவர்களோ அதனை மாற்றி
நமக்குள்ளே பகையை மூட்ட
நவின்றனர் போலும்! நீரும்
உமக்கொவ்வாச் செயல்செய்கின்றீர்
உரைப்பதை நம்புகின்றீர்!''

என்றிவ்வா றுரைக்கும் போதே
ஏந்திழை விநோதை, அங்கே
வன்றிறல் படைத் தலைவன்
சேந்தனை வரும்படிக்குப்
பொன்றாது தொலைவில் பேசும்
பொறிவழி யாய் அழைத்தாள்.
நன்றுற வந்தான் சேந்தன்!
நடுக்குற்றார் அரசும், மாதும்!

''சேந்தனே. தொழிலாளர்கள்
திடுக்கிடச் செய்கின்றார்கள்!
தீர்ந்ததென் பெருமை இந்தத்
தீயரால்! என்றன் ஆட்சி
தேய்ந்திடச் செய்வ தற்கும்
திடிரென்று தாக்கு தற்கும்
போந்தனர் தரும இல்லம்,
வருவதைப் புகன்றாரில்லை.

''வந்தனை நல்ல வேளை;
வராவிடில் செத்தி ருப்போம்!
இந்தத்தீ யோரை யெல்லாம்
இழுத்துப்போய்ச் சிறையில் போடு;
முந்தின நாளில் இன்னார்
முயல்போல இருந்தார் இன்று
கொந்திடும் புலியாகின்றார்!
காரணம் புரிய வில்லை!

''இழுத்துப்போ என்றன் ஆணை!''
என்றனன் திரைய மன்னன்
கழுத்தினில் கைகொடுத்துக்
''கடிதினில் போவீர்!'' என்று
முழுப்படைத் தலைவன் கூற
முற்சென்றார் தொழிலாளர்கள்;
தழைத்தது நாட்டில் எங்கும்
தனிச்சிறை நிறைந்த செய்தி!

அங்கவர் சென்ற பின்னர்,
விநோதையை அரசன் கேட்பான்.
''இங்குளார் எனக்கடங்கார்;
எவருக்கும் நானடக்கம்!
எங்கணும் நடவாச் செய்தி
இங்குகாண் கின்றேன் என்னில்
நங்கையே உன்கண் நேரில்
நடந்ததற் கென்ன சொல்வாய்?

''சேந்தனை அழைக்கச் சொன்னீர்,
தெரியாமல் அழைத்தேன்! வந்தான்;
நேர்ந்ததை உரைத்தீர், அன்னோன்
நெட்டித்தள்ளிச்சென்றான்,அம்
மாந்தரும் அடங்கிச் சென்றார்.
மற்றிதைத் தொடர்ந்தே தேனும்
வாய்த்திட்டால் தொல்லை ஒன்றும்
வராவகை செய்தல் வேண்டும்.

"திருக்கோயிற் பணிமுற்றிற்றுத்
தெருவெலாம் முரச றைந்தே
வரச்சொல்லி ஆணை இட்டேன்;
வருவார்கள் கோயி லுக்கே.
அரசரங் கெழுந்த ருள்க!
அமைச்சரும் வருதல் வேண்டும்.
பெரும்படைத் தலைவன் சேந்தன்
பிறருமங் கிருத்தல் வேண்டும்."

என்றனள் விநோதை! மன்னன்
"எனக்கெனச் செயல்ஒன் றில்லை.
உன்எண்ணம் என்றன் எண்ணம்.
உயிர்நீதான் நான் உடம்பே,
இன்றல்ல நாளை அல்ல
என்றைக்கும் குறையா இன்பத்
தென்றலே, வாடி! உன்றன்
திருமேனி பூசென் மேலே!"

எனஇவர் இங்கி ருக்க,
யானைமேல் முரச றைந்தே,
"அனைத்துயிர் ஆக்கிக் காத்தே
அழித்திடும் பெருந்தெய் வந்தான்,
தனித்திட்ட நம்மனோர்பால்
தளிர்த்திட்ட அருளி னாலே.
தினைக்கொல்லை தனிலமைத்த
திருக்கோயில் வந்த துண்டு!

"திருப்பெயர் ஒன்றும் இல்லான்,
சிவன்என்னும் பேர்பு னைந்தான்!
இருப்பிடம் ஒன்றும் இல்லான்!
இக்கோயில் இடமாக் கொண்டான்.
விருப்பென்ப தொன்று மில்லான்
நமைக்காக்கும் விருப்பம் கொண்டான்,
உருப்பாடொன்றில்லான்; நாட்டார்
உருப்பட உருவங் கொண்டான்.

"திருக்கோயில் வருக யாரும்!
திறப்புநல் விழாஇன் றேதான்.
இருக்குமங் காடல் பாடல்;
இன்பநல் ஓவி யங்கள்!
விரித்திடும் மலர்மணத்தை
விரைந்திடும் நறும்பூசைதான்;
அருந்தமிழ்ப் புலவர் ஆங்கே
சொற்பெருக்காற்று வாரே!

"ஆடவர் வருக, மாதர்
அனைவரும் வருக! வந்து
தேடரும் அருளை அங்கே
சிவன்தரப் பெறுவீ ராக!
பாடெவர் படுவார் அப்பன்
பழவடி சேரா விட்டால்!
ஈடெவர் அவன் அன்பர்க்கே.
எல்லாரும் வருக!" என்றான்.

தெருவெல்லாம் முழக்கம் கேட்டோர்
சிரித்தனர் பலபேர்! சில்லோர்,
"இருக்குமோ இருக்கும் காணா
திருக்குமோர் கடவுள்! நம்மேல்
இருக்குமோர் அருளால், நம்பால்
இருக்குநோய் தீர்க்கக் கட்டி
மாந்தரும் அடங்கிச் சென்றார்.
மற்றிதைத் தொடர்ந்தே தேனும்
வாய்த்திட்டால் தொல்லை ஒன்றும்
வராவகை செய்தல் வேண்டும்.

"திருக்கோயிற் பணிமுற்றிற்றுத்
தெருவெலாம் முரசறைந்தே
வரச்சொல்லி ஆணை இட்டேன்;
வருவார்கள் கோயிலுக்கே.
அரசரங் கெழுந்த ருள்க!
அமைச்சரும் வருதல் வேண்டும்.
பெரும்படைத் தலைவன் சேந்தன்
பிறருமங் கிருத்தல் வேண்டும்."

என்றனள் விநோதை! மன்னன்
"எனக்கெனச் செயல்ஒன் றில்லை.
உன்எண்ணம் என்றன் எண்ணம்.
உயிர்நீதான் நான் உடம்பே,
இன்றல்ல நாளை அல்ல
என்றைக்கும் குறையா இன்பத்
தென்றலே, வாடி! உன்றன்
திருமேனி பூசென் மேலே!"

எனஇவர் இங்கி ருக்க,
யானைமேல் முரசறைந்தே,
"அனைத்துயிர் ஆக்கிக் காத்தே
அழித்திடும் பெருந்தெய் வந்தான்,
தனித்திட்ட நம்மனோர்பால்
தளிர்த்திட்ட அருளி னாலே.
தினைக்கொல்லை தனிலமைத்த
திருக்கோயில் வந்த துண்டு!

"திருப்பெயர் ஒன்றும் இல்லான்,
சிவன்என்னும் பேர்பு னைந்தான்!
இருப்பிடம் ஒன்றும் இல்லான்!
இக்கோயில் இடமாக் கொண்டான்.
விருப்பென்ப தொன்று மில்லான்
நமைக்காக்கும் விருப்பம் கொண்டான்,
உருப்பாடொன் றில்லான்; நாட்டார்
உருப்பட உருவங் கொண்டான்.

"திருக்கோயில் வருக யாரும்!
திறப்புநல் விழாஇன் றேதான்.
இருக்குமங்கு ஆடல் பாடல்;
இன்பநல் ஓவி யங்கள்!
விரித்திடும் மலர்மணத்தை
விரைந்திடும் நறும்பூசைதான்;
அருந்தமிழ்ப் புலவர் ஆங்கே
சொற்பெருக்காற்று வாரே!

"ஆடவர் வருக, மாதர்
அனைவரும் வருக! வந்து
தேடரும் அருளை அங்கே
சிவன்தரப் பெறுவீராக!
பாடெவர் படுவார் அப்பன்
பழவடி சேரா விட்டால்!
ஈடெவர் அவன் அன்பர்க்கே.
எல்லாரும் வருக!" என்றான்.

தெருவெல்லாம் முழக்கம் கேட்டேர்
சிரித்தனர் பலபேர்! சில்லோர்,
"இருக்குமோ இருக்கும் காணா
திருக்குமோர் கடவுள்! நம்மேல்
இருக்குமோர் அருளால், நம்பால்
இருக்குநோய் தீர்க்கக் கட்டி
இருக்குமோர் கோயில் வந்தே
இருந்தாலும் இருக்கும்!" என்றார்.

அரண்மனை வாயில் தன்னில்
அழுது கொண்டிருந்த தோழி
முரசொலி கேட்டாள்; வாயின்
முழக்கமும் கேட்டாள்; "நாட்டில்
அரசென ஒன்றி ருந்தால்
அறத்தினைக் கொல்லுவாரோ?
உருவிலாப் பொருளு மிங்கே
உருவுடன் வருவதுண்டோ?

"பேரிலாப் பொருளு மிங்கே
பேருடன் வந்த தென்ன?
ஊரிலாப் பொருள்தான் இங்கே
உற்றதும் வியப்பே அன்றோ?
வேரிலே விருப்பம் மற்ற
வெறுப்புமில் மரத்தில் அந்த
ஈரிலை தளிர்ப்ப துண்டோ?
இலாமையில் உண்மை உண்டோ?

''குறிஞ்சித்திட்டினாலே குந்திக்
குறைதீர்க்க எண்ணுமானால்,
குறுகாத 'செம்மை' தன்சீர்
குன்றிடும் அன்றோ? முன்னாள்
அறம்சொன்ன வள்ளுவர்தாம்
கோயிலை அறிவித் தாரா?
வெறுஞ் சொல்லால் வலைவிரித்து
மக்களை விழுங்கப் பார்ப்பார்.

''அறிவொன்றே தெய்வம் என்றே,
அறிந்திடும் குறிஞ்சித் திட்டில்,
அறியாமை ஒன்றே தெய்வம்
ஆக்குவார் செயல்ஈ தாகும்!
அறமொன்றே ஆற்றல் என்றே
அறிந்திடும் குறிஞ்சித் திட்டில்,
அறமன்றே ஆற்றில் என்பார்
அடாச் செயல் இஃதே யாகும்!

"மன்னியின் உயிர்கு டித்த
மானமில் லாத சில்லோர்
இன்னும்இந் நாட்டை மாய்க்க
எண்ணிய எண்ணம் தன்னில்
முன்முனை கோயி லாக
முளைத்தது! மூடச் செய்கை
தன்னம்பிக் கைஇலாமை,
கலகங்கள் மேல்தழைக்கும்!

''மதம்என்ற கருங்கற் பாங்கில்
மல்லிகை பூப்ப தில்லை!
மதியினில் மயக்கம் என்ற
நஞ்சொன்றே மலரும்! நாட்டில்
புதியதோர் பொல்லாங் கென்னும்
எரிமலை புகையும்! மக்கள்
இதுநலம் இதுதீ தென்னும்
எண்ணமும் இழந்து போவார்!

''என்செய்வேன்? நாட்டைக் காக்க
எவருளார்? தமிழ்ச்சான் றோரும்
மன்னவன் கொடுமைக் கஞ்சி
வடத்கிருந் துயிர்நீத்தாரோ?
புன்செயல் தீர்ந்த தில்லை,
புலவர்கள் விழிக்க வில்லை,
நன்செயில் நடவு மில்லை,
நாய்வாலும் நிமிர்வ தில்லை!

"என்கடன் என்ன? நெஞ்சே!
பணிசெய்து கிடப்ப தொன்றே
தனிக்கடன்; இந்த நாட்டைத்
தலைகீழாக் கித்தன் வாய்ப்பை
நன்கடைந் திடநி னைக்கும்
நடைகெட்ட நாய்விநோதை
தன்கொடுஞ் செயலறுக்கத்
தமிழரே எழுவீர்!" என்றாள்.








( 330 )





( 335 )




( 340 )





( 345 )




( 350 )





( 355 )





( 360 )




( 365 )





( 370 )





( 375 )




( 380 )





( 385 )




( 390 )





( 395 )





( 400 )




( 405 )





( 410 )





( 415 )




( 420 )





( 425 )




( 430 )





( 435 )





( 440 )




( 445 )





( 450 )





( 455 )




( 460 )





( 465 )




( 470 )





( 475 )





( 480 )




( 485 )





( 490 )





( 495 )




( 500 )





( 505 )




( 510 )





( 515 )





( 520 )




( 525 )





( 530 )





( 535 )




( 540 )





( 545 )




( 550 )





( 555 )




( 560 )





( 565 )





( 570 )




( 575 )





( 580 )





( 585 )




( 590 )





( 595 )




( 600 )