பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 31


( சில்லியிடம் குடன் கடனாகப் பணம் கேட்கின்றான்.
இந்தப் பேச்சில் திடுக்கிடும் உண்மைகளை அறிகின்றான்
சில்லி. )


(அறுசீர்வீருத்தம்)

'குடன்' என்பான் சில்லி யின்பால்
வந்தனன். "கொல்லை யின்மேல்
'கடன்நூறு பொன்னே வேண்டும்;
கட்டாயம் தருவாய் என்றுன்
னிடம்வந்தேன். வட்டி யோடே
முதலையும் எடுத்து வந்தே
உடன்தந்து விடுவேன்! இந்த
உதவிசெய்!" என்று சொன்னான்.

"அங்குப்போ இங்குப் போஎன்
றரசினர் சொல்வார். அந்த
மங்கைக்குத் தொண்டு செய்வேன்.
மட்டான வருவாய் உண்டு.
எங்கப்பா என்னிடத்தில்
நூறுபொன் இருக்கும்? நீசொல்.
பொங்குமா வெறும்பா னைதான்
போ!'? என்று சொன்னான் சில்லி,

திருமகள் அரசன் போற்றும்
செழுமகள் விநோதை தான்உன்
மருமகள்! வாய்தி றந்து
கேட்டதைக் கேட்ட வண்ணம்
தருமகள்! உன்றன் பிள்ளை
தங்கவேல் உயிர் தான் என்னும்
பெருமகள்! இருக்க நீபொய்
பேசாதே!?' என்றான் வந்தோன்.

"அப்படி ஒன்று மில்லை;
அரசியின் பேரை வைத்தே
இப்படிச் சொல்வார் நாட்டில்
இருப்பாரேல், அவரும் சாவார்
தப்பொன்றும் செயாவிட் டாலும்
தங்கவேல் உயிரும் போகும்;
எப்படிச் சொன்னாய், மங்கை
என்மகன் தொடர்புண் டென்றே"

என்னலும் "கூத்துப் பார்த்த
இரிசன்பால் இதனை மெய்யாய்
நன்னனே சொன்னான என்று
குடம்என்போன் நவிலச் சில்லி.
"என்னடா, பெரிய தொல்லை!
எழுந்துபோ, பிறகு வா நீ!
இன்னது கேட்க வேண்டும்!"
எனச்சொல்லி எழுந்து போனான்.

தெருவினிற் கடைசி வீட்டின்
தென்புறச் சுவரில் ஓர் ஆள்
ஒருபெருந் தாளை ஒட்டப்
போகையில் காவ லாளன்
தெரிந்துகொண் டதனை வாங்கிப்
படித்தனன்; திகைக்க லானான்
"அரண்மனைச் செய்தி தன்னை
அம்பலம் ஆக்க லாமோ?"

என்றந்த ஆளைக் கட்டி,
இழுத்துப்போய்ச் சிறையில் தள்ளி,
மின்தந்த இடையாள் ஆன
விநோதைபால் தாளைத் தந்தான்.
பொன்தந்தே, "எவரி டத்தும்
புகலாதே? சிறைப்பட் டோனை
இன்றைக்கே விடுத லைசெய்!"
எனச்சொல்லி அனுப்பிப் பின்னே

அம்புயம் தனை அழைத்தாள்.
"அழைத்துவா தங்க வேலை.
இம்மெனு முன்னே!" என்றாள்.
அம்புயம் ஏக லானாள்.
செம்பிலே நஞ்சும் பாலும்
சேர்த்துத்தன் அறையில் வைத்தாள்
வம்பனை எதிர்பார்த் தாளாய்
வாயிலில் நின்றிருந்தாள்!

(வேறு) அகவல்

தங்கவேல் வீடு சாத்தி இருந்தது.
தட்டினாள் தங்கவேல் சாற்று கின்றான்;
"வெளியிற் செல்ல வேண்டாம் என்றே
என்றன் தந்தைஉள்ளடைத்தான்.
வெளியில் சென்றால் வீணர்கள் என்னைக்
கொன்று போடுவர் என்று தந்தை
விளம்பினான் ஒன்றும் விளங்கவில்லை.
அவளிடம் வரஎனக் காசை உண்டு.
வரும்வகை தெரிய வில்லை; வஞ்சியே.
வாய்ப்பொன்று கூறு, வருவேன்!" என்றான்.
"கொல்லைச் சுவரில் மெல்ல ஏறிக்
குதிக்க முடியுமா?" என்றாள்.
குதித்தோடினான்அக் கோதை அருகே!











( 5 )




( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )







( 65 )




( 70 )




( 75 )

பிரிவு -- 32

( சில்லி மகனைத் தேடி. விநோதையைக் கேட்டான்.
கொல்லையிற்பார் என்றாள். கொல்லையில் மகனின் பிணத்தைக்
கண்டு திடுக்கிட்டாள். )


(எண்சீர் விருத்தம்)

கதவுதிறந் துட்சென்று பார்த்தான் சில்லி
காணவில்லை தங்கவேல் கைநொ டித்தே
எதுநடந்த தோஎன்றான். விநோதை இல்லம்
ஏகினான் "என்மகளே! தங்க வேலன்
குதித்தோடி னான்இங்கே வந்த துண்டோ?
கூறம்மா!" எனக்கேட்டான்! "கொழுத்த வாயன்
எதுபெறுவான்? கூச்சல் வேண்டாம்; அதுபெற்றான்.
கொல்லையிலே சென்றுபார்! என்றாள் வஞ்சி.'

கொல்லையிலே தங்கவேல் கிடக்கக் கண்டான்.
கொதித்தோடி அவனுடம்பைப் புரட்டிப் பார்த்தான்.
தொல்லையொடு மூக்கில்கை வைத்துப் பார்த்தான்.
துடைமார்பு கையெல்லாம் தொட்டுப் பார்த்தான்.
"சொல்லியதைக் கேட்டாயா அப்பா! உன்னைத்
தொலைத்தாளே! என்பேரைச் சொல்லப் பிள்ளை
இல்லையடா!'! எனப்புரண்டான்; எழுந்துட் கார்ந்தான்
பிணத்தின்மேல் கையூன்றிச் சூளுரைப்பான்;

"பிறர்தடுக்க முடியாத வகையில் அந்நந்
தணற்குநிகர் கொடியாளை விநோதை தன்னைச்
சாகும்வகை நான்புரிவேன். அதனால் என்னை
மணக்கவரும் தூக்கினையும் மகிழ்வாய் ஏற்பேன்,
வானறிக; இஃதுறுதி!'' எனஎ ழுந்து,
துணைக்குரியார் எவருமின்றிக் குழியும் வெட்டி,
உடல்வீழ்த்தி மண்ணிட்டுத் தூர்த்து நின்றே,
"கணமும்மற வேல்நெஞ்சே! அவளைக் கொன்று
கடைத்தெருவில் பிணம்நாறச் செய்வேன்!" என்றான்.









( 80 )




( 85 )





( 90 )





( 95 )




( 100 )

பிரிவு -- 33

( தம்பிரான் அம்புயம் மன ஒற்றுமை. )

தருமஇல் லத்தின் சோலை
தனிஒரு மாலைப் போதில்,
இருமினான் மறைவில் குந்தி
இருமினான் மீண்டும். ஓர்பெண்
திரும்பினாள் கண்டாள் அங்கே
திருமடத் தம்பிரானும்
வரும்படி விரலசைத்தான்.
வந்தனள் அம்புயந்தான்!

"ஈண்டுநாம் வந்தோம்; சோறுண்
டிருக்கின்றோம்; உறங்கு கின்றோம்.
தூண்டும்நம் உணர்வு காதற்
சுவைகண்டு மகிழ்ந்த தில்லை.
ஏண்டிஎன் மயிலே! இன்ப
வாழ்க்கையோ வேண்டாம் என்பாய்?
தாண்டிவா! தழுவு! தாவு!
சாய்; கொடு, முத்தம்?" என்றான்.

"மன்னவர் வழிவந் தோர்க்கு
மணஞ்செய்து வைப்ப தாகச்
சொன்னஅவ் விநோதை பேச்சைத்
துறந்துநான் உனைமணந்தால்
என்னதான் செய்யாள் என்னை?!'
என்றனள் அம்புயந்தான்!
தன்மான உணர்வு தோன்றத்
தம்பிரான் உரைக்கலானான்!

"குறிஞ்சிநா டாகும் பாலில்
சென்னையாம் கொடிய நஞ்சை
மறந்தும்நாம் கலக்க வேண்டாம்.
மனச்சான்று நம்மைக் கொல்லும்
மறந்தும்நாம் கலப்ப தற்கு
முயன்றாலும் வாய்மை மிக்க
குறிஞ்சிஒப் பாது, பெண்ணே!
ஒப்பாது குறிஞ்சி நம்மை!

"தீயும்ஒப் பாத செய்கை
செய்பவள் சுமந்து பெற்ற
தாயும்ஒப் பாத காமச்
சழக்கி, அன்னாள்பேர் சொல்ல
வாயுமொப் பாத வஞ்சி
யுடன்வந்தோம்; தெருவில் ஓடும்
நாயுமொப் பாது நம்மை!
குறிஞ்சியா ஒப்பும். பெண்ணே!

"தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழ்உண்டா? தமிழ்ஒ ழுக்கம்
அமைவுறச் சிறிது முண்டா?
அன்றைய மறத்த னந்தான்
கமழ்ந்திடல் உண்டா? கல்வி
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளிவிலேனும்
ஒற்றுமை உண்டா, பெண்ணே?

"தனித்தமிழ் இயல்புக் கான
சலுகைதான் உண்டா நாட்டில்?
இனத்தாரின் மேன்மை தன்னை
எண்ணத்தான் உரிமை உண்டா?
உனக்கென்ன வாழ்வென் பாரை
உதைக்கத்தான் உணர்ச்சி உண்டா?
தனக்கொன்று பிறக்கொன்றென்பான்
தனைவீழ்த்த எழுதல் உண்டா?"

"தாய்மொழி நாய்மொழிக்குத்
தாழ்வென்பான் ஒழிந்த துண்டா?
வாய்மொழி வடமொ ழிக்கு
மட்டென்பான் மாய்ந்த துண்டா?
பாய்மொழி வாழ்மொ ழிக்கு
மருந்தென்பான் மாய்ந்த துண்டா?
தூய்மொழி யாளே: இன்னும்
சொல்லுவேன் உற்றுக் கேட்பாய்:

"ஏதுண்டு நம்மிடத்தில்?
இனியும்நான் உருப்படாமல்
மோதுண்டு நம்மில் நாமே
மொத்துண்டு பூணூல் காரன்
தீதுண்டாம் ஆட்சி யின்கீழ்ச்
சி்க்குண்டு, பாடை ஏறும்
போதுண்டாம் நிலைதான் உண்டு!
புயலுண்ட குழலாய்! கேட்பாய்;

"வந்தநாள் தொடங்கி இந்நாள்
வரைக்கும்நாம் கழிந்த தான
அந்தநாள் எண்ணி எண்ணி
அழாதநாள் உண்டா? மெய்யாய்
அந்தநாள் தொடங்கி யேநாம்
இற்றைநாள் வரைக்கும் இங்கே
எந்தநாளும்பெறாத
இன்பநாள் காண வேண்டும்:

"அறஞ்செய்வோம்; மறம்வி டுப்போம்
அடைந்திட்ட இடமேன் மைக்குப்
புறம்பான செயலைச் செய்வோம்,
புற்றுப்பாம் போடு சேர்ந்து,
முறம்பட்டுத் துடைப்பம் பட்டு,
நாட்டாரால் முதுகின் தோலின்
நிறம்கெட்டுப் போக மாட்டோம்
நிரம்பட்டும் நமது வாழ்க்கை.

"சொன்னபின் உணரு கின்றாய்,
துயர்கின்றாய், கண்ணீர் கொண்டாய்!
என்னென்ன செய்தாய் நீயும்?
இளந்திரை யனுக்கு நஞ்சை
உன்கையால் இட்டுக் கொன்றாய்.
தங்கவேல் உயிரை மாய்க்க
முன்ஓடி அழைத்து வந்தாய்.
மூளிக்கே தாளம் போட்டாய்!"

தம்பிரான் இவைபுகன்றான்.
கதைஎலாம் நடுநடுங்க
அம்புயம் சொல்லு கின்றாள்
"அறம்செய்வேன்; மறமே செய்யேன்!
வெம்புலி அவள்க ருத்தை
வியந்திடேன், இனிமே லிங்கே!
தம்பிரான் நீயும் என்றும்
தறுதலைத் தனத்தை நீக்கி,

"குழவிக்கல் வண்ணம் நீக்கி;
வாயிலே சாம்பல் கொட்டும்
வழக்கத்தை அறவே நீக்கி
வரிப்பாயின் கோரை போல
வன்தலை பறட்டை நீக்கத்
தனிஒரு குச்சு நாய்போல்
விழுமயிர்த் தாடி நீக்கி,
வெறுங்கோயில் புகழ்தல் நீக்கி,

"சென்னையில் ஊரை ஏய்க்கும்
செயலினை இங்கே நீக்கி,
என்னையா வரும்வ ணங்க
வேண்டுமென் பதையும் நீக்கிக்
கன்மனத் தாள வந்தார்
காலடி நக்கல் நீக்கிப்
பொன்னையே கொட்டி மாதர்
கற்பினைப் போக்கல் நீக்கி,

"விநோதைகள் உடன் அழைத்தால்
விரைந்தோடி வருதல் நீங்கி,
'கனாக்கண்டேன் சிவனார் வந்தார்'
என்னும்பொய்க் கதைகள் நீக்கி,
மனத்தினில் எந்த நாளும்
மடத்தினை அறவே நீக்கி,
உனக்குள்ள மதத்தை நீக்கி,
உள்ளவேற்று மைகள் நீக்கி,

"அதன்பின்பு மணக்க வாராய்.
அழகனே!!' என்றாள் மங்கை;
இதுகேட்டுத் தம்பி ரான்தன்
எண்ணமும் உரைக்க லானான்:
',எதுநீக்க வேண்டும் இன்றே
அதுநீக்க ஒப்புக் கொண்டேன்.
மதிநீக்கும் செயலை எல்லாம்
வஞ்சியே செய்ய மாட்டேன்,

"தாடியை நீக்கச் சொன்னாய்,
பறட்டையைத் தவிர்க்கச் சொன்னாய்,
ஏடிநீ பார்ப்பாய்!" என்றே
பறட்டையைத் தாடியைமேல்
மூடியை எடுப்ப தைப்போல்
எடுத்தவள் முன்னே வைத்தான்.
ஈடற்ற அழகு கண்டாள்.
தழுவினாள் இருகை யாலும்!




( 105 )




( 110 )





( 115 )





( 120 )




( 125 )





( 130 )





( 135 )




( 140 )





( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )





( 170 )





( 175 )




( 180 )





( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )





( 210 )





( 215 )




( 220 )





( 225 )




( 230 )





( 235 )





( 240 )




( 245 )

பிரிவு -- 34

சேந்தனை ஒழிக்கச் செழியன் துணையா? அவன் ஒப்ப
வில்லை:


(அகவல்)

தருமஇல் லத்தில் தனியறை தன்னில்
செழுமல ரணையில் செழியனை விநோதை
நன்றுவர வேற்று நவிலு கின்றாள்;
"சேந்தன் நமக்குத் தீமை செய்கின்றான்,
மாந்தரில் அவனோர் மடையன். ஏனெனில்,
நண்பனை விநோதை நாடு கின்றாள்.
விநோதை யைநண்பன் விரும்பு கின்றான்
என்று மகிழ்தல் இயற்கை யாகும்.
அன்றிப் பொறாமை அடைவது நன்றா?

என்னை இகழ்வதும் அன்பரை இகழ்வதும்
என்ன மடத்தனம் என்பது? கேட்பீர்!

இந்த நாட்டில் கலகம் ஏற்படுத்தி
முந்த அரசனின் உயிரை முடித்துத்
தானே அரசனாய்த் தலையில் முடியுடன்
திரிவ தென்பதே சேந்தன் எண்ணம்.
அவனை ஒழிக்க ஆதரவு தருக!"
என்றாள். செழியன் எழுந்தான் எரிமலை
நிற்கும் வண்ணம் நின்றான் எரியைக்
கக்கும் வண்ணம் கழறுகின்றான்;

"மண்புரண் டெதிர்ப்பினும் மாய்க்கும் சேந்தன்
பண்பு பாருக் கணிகலம் அன்றோ!
மறைவில் என்னைநீ மகிழ்வதைச் சேந்தன்
அறிகிலான்; பொறாமை அவனுக்கு விலக்கு!
அகத்தில் அறக்குடி புகாத உன்றன்
முகத்தில் விழிப்பது முறைஅன் றென்று"
போனான், களிறு போல!
மானாள் கற்படிவம் ஆனாள் மயங்கியே!









( 250 )




( 255 )






( 260 )




( 265 )





( 270 )


பிரிவு -- 35

( விநோதை சில்லியிடம் சேந்தனை ஒழி எனல். )

      (பஃறொடை வெண்பா)

"கேட்டாயோ சில்லி கிழக்குமேற் கானகதை.
கோட்டான் செழியன் கொடுஞ்சொற்கள் கொட்டி,
முகத்தில் விழியேன் எனவும் மொழிந்து,
புகைச்சல் விழிகள் புறம்பார்க்கச் சென்றான
எனவுரைத்தாள். சில்லி, "நடந்ததென்ன?" என்றான்.
அனைத்தும் சுருங்க அறிவித்தாள் மங்கையவள்
"சேந்தன் செருக்கெல்லாம் செப்பினேன்; சேந்தனுயிர்
தீர்ந்தால் நமக்கும் குறிஞ்சிக்கும் சீர்என்று
தக்க படியுரைத்தேன்; தாங்கா தவனாகித்
திக்கென்று பற்றியதோர் தீயானான்!" என்றுரைக்கச்
சில்லி சிரித்து "திருமகளே! சேந்தனிலை
எல்லாம் அரசனிடம் சொல்; அவனைக்
கொலைத்தீர்ப்பால் கொன்றிடலாம். கொன்றால் எவர்க்கும்
நல" மென்றான்; நங்கை நடந்தாள்.





( 275 )




( 280 )




( 285 )