பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 36


( சேந்தனைக் கொல்ல அரசனுக்குச் சொக்குப் பொடியா? )

(அறுசீர் விருத்தம்)


பஞ்சணையில் படுத்திருந்த அம்புயத்தை
விநோதையவள் "என்ன?" என்றாள்;
வஞ்சிவள், "காரணமும் தெரியவில்லை
யோஉனக்கு? மன்ன வன்பால்
மிஞ்சுமென்றன் நலக்கேட்டை விளக்கிடுவாய்
நீசென்றே!" என்று சொல்ல,
நெஞ்சத்துச் சிரிப்பையெலாம் நேரிற்காட்
டாமலிதழ் நெருக்கிச் சென்றாள்.

"நாழிகைஒன் றாகவில்லை நாம்பிரிந்தே;
அதற்குள்ளே காத லின்ப
ஆழியிலே மூழ்குதற்கு நீயழைத்தாய்
போலும்!" என்று மன்னன் சொன்னான்.
"தோழியவள் சொல்லவில்லை யோ? அழுகின்
றேன்நானே?"என்றாள் தோகை;
ஆழூழ்என்றேகூவி அழுதுகொண்டே,
"ஏனழுதாய என்றான் மன்னன் !

"இன்றுள்ள ஆட்சிதனை அழித்திடத்தான்
வேண்டுமாம்; இன்னும் நம்மைக்
கொன்றிடத்தான் வேண்டுமாம்; சேந்தனிது
கூறுகின்றான்; அன்பின் ஆர்ப்பே!
என்றுமே இங்கிருந்த மக்களைக்காத்
திடவேண்டும் எனநினைத்தேன்;
ஒன்றந்த சேந்தன்செத்திடவேண்டும்
அல்லதுநான் சாகவேண்டும்!

"நாடுமுற்றும் நான்சுற்றி மக்களுக்கு
நல்லுணவுப் படைய லிட்டேன்;
ஈடுசொல்ல முடியாத அன்பென்மேல்
வைத்தார்கள் மக்கள் எல்லாம்;
கேடுகெட்ட சேந்தனவன் சூழ்ச்சியெலாம்
சொன்னார்கள் என்னி டத்தில்;
கூடுகட்டிக் குடிபுகுமுன் கொட்டுகின்ற
கருவண்டைக் கொல்ல வேண்டும்!

"இன்னுமொன்று கூறுகின்றேன்; யாரிடமும்
சொல்லாதீர்; என்னை அந்தச்
சின்னமதிச் சேந்தனவன் என்னிடத்தில்
தன்காதல் தெரிவித் திட்டான்;
"இந்நிலத்தில் குறிஞ்சிநில மன்னவனாம்
ஒருவனையே அன்றி, மெய்யாய்
எந்நிலத்தும் எவனையுமே எவற்றாலும்
நினையாதென் உள்ளம என்றேன்!

"சேந்தனெனும் படைத்தலைவன் உங்கட்கு
வேண்டுமா? வேண்டு மாநான்?
சேந்தன்தான் வேண்டுமெனில் மகிழ்ச்சியுடன்
கூறுகின்றேன்; அன்றி இந்த
ஏந்திழைதான் வேண்டுமெனில் இப்போதே
போயந்தத் தீயன் சேந்தன்
மாய்ந்திடவே செய்திங்கு வரவேண்டும்;
அல்லதிங்கு வராதீர என்றாள்.

இளைஞர்இடறும் பெரிய பந்துபோல்
இங்கிருந்தான் அங்கே வீழ்ந்தான்.
மளமளென அரண்மனையின் அலுவலினோர்
அனைவரையும் அழைத்த மன்னன்
குளறலுற்றான். "கூப்பிடெ" ன்றான், யாரை?" என்றான்;
"சேந்தனைத்தான என்று சொன்னான்.
உளமறிந்து நல்லமைச்சன் "வழக்குளதோ,
சேந்தன் மேல என்று கேட்க,

"ஆம்அவன்மேல் உண்டவன்மேல் வழக்கவன்மேல்
தவறவன்மேல் ஆத லாலே,
நாமவன்மேல் நடவடிக்கை உடனெடுக்க
வேண்டுவது கடமை அன்றோ?
போமவனைக் கட்டிவர ஆள்அனுப்பு
வீர்உடனே அமைச்சே!" என்றான்;
"தீமையிலே எழுவதுதான் கிளர்ச்சி!" யென
அறிவழகன் அறையலுற்றான்;

"விலங்கிட்டுக் கொண்டுவரப் பலமறவர்
சென்றார்கள்; அவர்க்கு முன்னே
நலங்கெட்டுப் போகுமென்றே அம்புயமும்
சேந்தனிடம் விரைந்து சென்றே,
கலங்கட்டும் தொழிலாளர் நடுவிருந்த
சேந்தனிடம் நிலையைச் சொன்னாள்.
துலங்கட்டும் குறிஞ்சிநிலம் எனவுழைக்கும்
தொண்டரெலாம் கூட்ட மிட்டார்!

"நாட்டார்கள் நம்பக்கம்; நாவலர்கள்
நம்பக்கம்; நாட்டின் நன்மை
வேட்டாரும் நம்பக்கம்; வீரரெலாம்
நம்பக்கம்; தொழில்செய் துய்யும்
வீட்டாரும் நம்பக்கம்; 'அரசனழைப்
பைமதிக்க வேண்டா'மென்று
கூட்டான தோழரெலாம் தாய்மையுடன்
சேந்தனிடம் கூறினார்கள்.

"இன்றிருந்தார் நாளைஇரார்; என்றுமே
வாழ்வார்கள் உலகில் இல்லை.
நன்றுக்கு நாளையிறப் பதைவிடநான்
இன்றிறக்க நடுங்க லாமோ?
அன்றியும்இந் நாட்டுமக்கள் அனைவரையும்
உணர்வுபெறச் செய்ய வேண்டின்,
நின்றார்போற் செல்லுவதும் நிலைத்தபுகழ்
நிறுத்துவதும் வேண்டும என்றான்!

நல்லதுணைப் படைத்தலைவன் வல்லானும்
மற்றவரும் வந்து சேர்ந்தார்.
"பொல்லாத வேந்தனுமைப் பிடித்துவரச்
சொல்லி விட்டான். தலைவ ரே!நாம்
எல்லோரும் மன்னவனை எதிர்த்துப்போ
ராடிடுவோம்! என்சொல்கின்றீர்!
வல்லாரை எதிர்பார்க்கும் குறிஞ்சிநிலம்
உமைக்கொன்று வாழ்வ துண்டோ?

எனச்சொன்ன வல்லானின் மனத்திண்மை
வாழ்கஎனச் சேந்தன் வாழ்த்தி,
"தனக்குள்ள நல்லுணர்வு நாட்டன்பு
மற்றவரக்கும் உள்ளதென்று
நினைக்கின்றாய்; என்கட்டை அனற்ப டட்டும்;
மக்கள்மன மதில்முளைத்த
மனக்கொதிப்பே குறிஞ்சியினை விடுவிக்கும்
உறுதி" என்றான் மகிழ்ந்து சேந்தன்!

அறமென்றொன் றிருக்கையிலும் இருகையிலும்
அறிஞனுக்கு விலங்கிட் டார்கள்.
மறமென்றொன் றிகுக்கையிலும் மக்களதை
மாற்றாத வையந் தன்னில்
திறமொன்றொன் றறியாத மன்னவன்
முன்னிலையில் சேந்தன் நின்றான்.
இற! மன்னன் என்தீர்ப்பாம். இற நீதான்
இதைமறுக்க எண்ண முண்டோ!

"அரண்மனையும் உன்கொடிய புறங்கூறல்
பெற்றதன்றோ? ஆட்சி தன்னை
இருண்டபடி ஆக்கிஉனக் கிசைந்தபடி
கூத்தாட எண்ணி விட்டாய்;
திருந்தஇனி எண்ணமுண்டா? சாகத்தான்
எண்ணமா? செப்ப வேண்டும்;
புரண்டிவிடும் இந்நாடு நின்னாலே
புதுமைபெறும் என்றாய என்றான்.

"நம்நாடு தமிழ்நாடு: நாமெல்லாம்
தமிழ்மக்கள்; இன்பம் கோரி
இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே!
அம்மூச்சுத் தமிழே! அந்தப்
பொன்னான தமிழாலே தமிழ்ச்சான்றோர்
புகன்றதமிழ்ச் சட்டம் ஒன்றே
இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டும்; அதை
இகழ்வானை ஒழிக்க வேண்டும்;

''சட்டமென்பார்; உலகியற்றி யாள்என்பார்;
அடியளந்தான் என்றும் சொல்வார்.
சட்டந்தான் தொழத்தக்க தென்றுரைப்பார்;
தமிழ்ச்சட்ட உண்மை கண்டும்,
கட்டறுந்த காளையைப்போல் கண்டதெலாம்
வழிஎன்று கெட்டலைந்தால்
பட்டணத்து முதலமைச்சும் பழங்குறிஞ்சிப்
பெருவேந்தும் ஒன்றே அன்றோ?

புதுநாளின் போக்குக்குப் பழஞ்சட்ட
வரிகள்சில பொருந்தா விட்டால்
எதனாலும் ஒருநொடியும் தாழ்க்காமல்
எழில்மக்கள் எண்ணம் ஆய்ந்து
புதுக்காத மன்னவனைப் பொறுக்காது
தாய்நாடு; தொழிலாளர்கள்
கொதிக்கின்றார் கூலியின்றி மதிக்கின்றீர்
இல்லையே! கொடுமை யன்றோ?

நாட்டினிலே விளைவில்லை, மழையில்லை.
அரிசிவிலை நான்கு பங்கு!
கூட்டிவிட்டார் என்செய்வார்? கூலிஉயர்
வாக்கிடவே சட்டம் வேண்டும்.
பாட்டாளி மக்கட்கே அதுவன்றி
அரசினரும் பணம் கொடுத்தே
நாட்டிவர வேண்டும்நல் லாதரவும்;
இவைகளெலாம் கருதவில்லை.

அரசியலின் எத்துறையும் பணமின்றி
அழிகையிலே கோயி லுக்கும்
உருவவழி பாட்டுக்கும் மதங்கட்கும்
அயலார்க்கும் உள்ள பொன்னை
வரவெண்ணிப் பாராமல் செலவிட்ட
மனப்பான்மை கொடிதே அன்றோ?
வரிசைகெட்ட அயலாரை இங்கழைத்த
தேன்ஐயா? வாழ்வதற்கா?

வண்டியிலே சோறெடுத்துத் தெருவெல்லாம்
மக்களுக்கு வழங்கி னாளே.
உண்டாரே ஏழைமக்கள் ஒருநாளே
அல்லாமல் மறுநாள் உண்டா?
வண்டாரும் குழல்தான் சோறுதர
ஏன்போனாள்? மக்க ளின்பால்!
பண்டுசெய்த கொலைமறக்கப் படுகொலைகள்
பலசெய்ய அன்றோ ஐயா!

''பொறுப்புள்ள அலுவலெலாம் தனக்கான
மனிதருக்குத் தான ளித்தாள்.
வெறுப்படைந்த அறிஞர்களைத் தனக்கொத்து
வராதென்று தூக்கி லிட்டாள்!
இறப்புக்குத் தள்ளினாள் இளவரசைத்
திண்ணர்தமை ஒளிக்கும் அம்பின்
குறிக்கெதிரில் கண்மூடி நிற்குமர
சரைக்கொள்வாள்; கொல்வாள் நாட்டை.

''நீரறியீர்; நானறிவேன் இனிநடக்கப்
போவதெல்லாம்! அறிந்த வண்ணம்!
ஊரறிய நகரறிய நாடறிய
முரசறைந்தே உணர்ச்சி வெள்ளம்
நேரெழுந்து கிளர்ச்சிசெயப் புரட்சியினால்
இந்நாளின் ஆட்சி தன்னை
வேரறவே ஒழிப்பதெனும் குற்றமதை
நான்செய்தேன்; வேந்தே என்னை

''ஒழித்தீர்கள்; விழித்தார்கள் நாட்டார்கள்!
நான்மகிழ உள்ளம் கொண்டீர்.
பழித்தார்கள் உம்செயலைப் பறிப்பார்கள்
உம்முடியை. மக்க ளாட்சி
செழிப்பாகும் இதோஎன்றன் இல்லம்போய்ச்
சாகின்றேன் யாரும் காண
எழிற்சாறு கழைச்சாறு நானடையச்
செய்தீர்கள்; செல்வேன்'' என்றான்.

''விடிவதற்குள் உயிர்சாய வேண்டும் நீ;
இவ்வுறுதி விளம்பிச் செல்க.
மடிவதற்கு மகிழ்கின்றாய் வருந்துகின்றேன்;
நீநாட்டில் வாழ்வ தற்கு
முடியும் ஒரு மன்னிப்புக் கேட்டுக்கொள்
மன்னனிடம்'' என்றுரைக்க
''விடிவதற்குள் மாய்வதுதான் உறுதி'' யென்று
சென்றிட்டான் வீரச்சேந்தன்.

நல்லாரும் உடனிருந்த எல்லாரும்
அழுதார்கள் நாட்டு மன்னன்,
''செல்வீர்கள் சேந்தனுடன் சாகு மட்டும்
உடனிருப்பீர்; செல்வீர் என்றான்!
நல்லாரும் உடனிருந்த எல்லாரும்
அழுதபடி நின்றதன்றிப்
பொல்லாத வேந்தனிட்ட கட்டளையும்
புகவில்லை அவர்கள் காதில்!

(எண்சீர் விருத்தம்
)

இதைக்கேட்ட தோழரெலாம் சேந்தன் இல்லம்
ஏகினார். சேந்தனவன் இல்லம் சார்ந்த
மதில்வளைத்த தோட்டத்தில் புறாக்கட் கெல்லாம்
மகிழ்வோடு தீனிதந்து கொண் டிருந்தான்.
''ஏதுநீவிர் செய்த பிழை? ஏன்ஒறுத்தான்?
ஏன்நீவிர் ஏற்றுக்கொண்டீர்! எதிர்த்திருத்தால்
மதியற்ற மன்னவன் என்ன செய்வான்?
வாழ்வதற்கு நாமிட்ட பிச்சை அன்றோ?''

நல்லமைச்சன் அறிவழகன் நவிலு கின்றான்;
''நானறிவேன் சிலநாளில் அவனை மக்கள்
கொல்லுவார் என்பதனை! நீயி ருந்து
கொலைக்குப்பின் நிகழ்வதனைப் பார்க்கும் வாய்ப்பும்
இல்லையே எனநினைத்தே இரங்கு கின்றேன்.
இறத்தல்வரு மேனும்நல் லொழுக்கம் குன்றாச்
செல்வமே! சிரிக்கின்றாய். சாங்காலத்தும்!
செய்வதென்ன நாங்களினி்ச் சொல்வாய்'' என்றார்.

அறிவழகன் இதைச்சொல்லி முடிப்ப தற்குள்
அங்குவந்த தோழர் ஓராயி ரன்பேர்
நிறையவிழி நீர்உகுக்க; வல்லான் வந்து,
நின்றபடி அழுகின்றா! பெண்கள் பல்லோர்,
பிறைநுதலும் மீன்விழியும் முல்லைப் பல்லும்
பிளப்பார்போல் தளிர்க்கையால் முகத்தை மோதிப்
''பெறஅரிய என் தலைவா! அறிஞன் உன்போல்
பிறப்பதில்லை; பிறந்ததுவும் இல்லை'' என்றார்.

அம்புயத்தாள் அங்கொருபால் நின்றவண்ணம்
அணிமுகத்தில் துணிசேர்த்து ''வாழ்வேன் என்று
நம்பினேன்! ஐயாஇந் நாட்டை என்னை
நட்டாற்றில் கைவிட்டுப் போகின்றீரே?
சிம்புளொன்றும் போய்விட்டால் வெறிபிடித்த
சிற்றரிமா வுக்கென்ன செய்வோ மிங்கே?
அம்பெடுக்க வேண்டாம்நீர் குண்டு வீசி
அல்லலுற வேண்டாம்நீர் இருந்தால் போதும்!

''இசையாதா ஓர்நொடியில் பகையை வீழ்த்த!
இசையாதா நலங்காக்க! அடிவ யிற்றைப்
பிசைவார்கள் பசியாலே; அவர்கட் கெல்லாம்
பெருவாழ்வைத் தரஇசையும் ஐயா!'' என்றாள்,
அசையாமல் நின்றபடி அம்பு யத்தின்
அன்புகண்டார் எல்லோரும்! சேந்தன் சொல்வான்,
''பசையற்ற நெஞ்சினாள் விநோதைக் கேநீ
பாங்கியன்றோ? தமிழ்ப்பாங்கும் உண்டோ?'' என்றான்.

''பாங்கறியா விநோதையவள் பாங்கி ருந்த
பாங்கிதான் அன்னவளின் பழிச்செயல்கள்
தாங்கியே ஒத்திருந்த பாங்கி யேதான்.
தார்வேந்தன் தம்மனைக்குப் பரிந்து வாளை
ஓங்கிவந்த இளந்திரையன் நஞ்ச ருந்தி
ஒழியும்வகை செய்தகொடும் பாங்கி நான்தான்;
தீங்கற்ற திண்ணனைஅவ் வாறே கொன்ற
தீயாளின் பாங்கிருந்த பாங்கி நான்தான்!

''சில்லிமகன் தங்கவே லுக்கு நஞ்சைப்
பாலினிலே சேர்த்தளிக்க விநோதை ஏவ
இல்லத்தில் சென்றவனை அழைத்து வந்தே
இனமழித்த கோடரியாள் பாங்கி நான்தான்!
எல்லாம்செய் திட்டாளிப் பாங்கி; நீவிர்
எண்ணியவா றயலினத்தாள் அல்லேன்! இங்கே
செல்லாதென் றாலும்நான் வடக்கி அல்லேன்;
என்பாங்கு மெய்யாகத் தென்பாங்கையா!

''ஏழைப்பெண் அழகுடையேன் என்று தீயாள்
எனைஇங்கே ஏமாற்றிக் கூட்டி வந்தாள்;
வாழவைப்ப தாய்க்கூறிக் கூட்டி வந்தாள்;
மன்னவனைக் காட்டிஎனைக் கூட்டி வந்தாள்;
தாழ்வில்லா மன்னவனின் வழியில் வந்த
தமிழ்மகற்குக் கூட்டுவதாய்க் கூட்டி வந்தாள்;
தோழிஎன்றாள்; எனைஇங்கே தன்சூழ்ச் சிக்குத்
தோதாக வைத்திருந்தாள். சிலநாளின்முன்,

''இக்குறிஞ்சி நாட்டார்க்கு நானி ழைத்த
இன்னலெலாம் எண்ணினேன் தமிழத் தன்மை
'எக்காலும் பிழைசெய்தாய் இனிமே லேனும்
இன்பங்கொள்! அறஞ்செய்வாய்!' என்று சொல்ல,
அக்காலே இந்நாட்டுத் தொண்டராற்றும்
அருந்தொண்டில் மனம்வைத்தேன். எனைவி நோதை
செக்கிலிட்டும் ஆட்டிடுவாள் அவள்கை வென்றால்
செங்குறிஞ்சி தனில்வாழ்வேன் நீவிர் வென்றால்!"

மங்கையின்இம் மொழிகேட்டான் சேந்தன். மற்றும்
வந்திருந்தோர் கேட்டார்கள். விநோதை என்பாள்
இங்குவரும் வழியினிலே திண்ணன் தன்னை
இளந்திரைய னைக்கொன்ற தெண்ணி எண்ணி
அங்கிருந்தார் அனைவருமே உளந்துடித்தார்.
அறமுணர்ந்த சேந்தனவன் செப்பு கின்றான்;
பொங்குகின்றீர் பொங்குகின்றீர் கடுஞ்சினத்தால்
பொறுத்திருங்கள்! பொறுத்திருங்கள்.'' என்றேசொல்லி.

''அம்மாநீ ஒன்றுகேள். உன்றன் பேரை
அழகுதமிழ் 'அல்லி' என்று மாற்றிக் கொள்வாய்.
தம்பிழையைத் தாமுணர்ந்தார் தூய்மை யுற்றார்.
தமிழர்இன்றும் தமிழர்களே. அயலார் ஆகார்.
எம்மினமும் உன்னினமும் ஒன்றே; ஆனால்
எண்ணிப்பார் இன்றுள்ள நிலைமை தன்னைச்
செம்மையுறு தமிழ்நாட்டை அயலார் தங்கள்
தீயொழுக்கம் மறைத்தவர் செயலும் பெற்றார்!

''இந்நாடும் தமிழ்நாடே! இடையில் காணும்
இருங்கடலால் தமிழ்க்குருதி மாறிடாது!
பொன்நடுவில் சிற்றெறும்பின் சாரை செல்லும்
இருமருங்கும் பொன்னன்றி வெள்ளியாமோ?
ஒன்னலர்கள் தமிழழிக்கப் பலபல் ஆண்டாய்
ஒன்றல்ல பன்னூறு தரம்மு யன்றும்
பொன்றவில்லை இன்றுமிருக் கின்றாள் அன்னை
புனற்கடலும் புகைக்கடலும் என்ன செய்யும்?

''தகுகுறிஞ்சி நாட்டினிலே இருக்கின் றாய்நீ.
தாய்நாடாம் தமிழ்நாட்டில் இருக்கின் றாய்நீ.
புகுந்தநா டல்ல இது பிறந்த நாடே!
பொல்லாங்கு கனவினிலும் எண்ண வேண்டாம்.
நகும்படியோர் தமிழறிஞன் தமிழர்க் கின்னல்
நாடுவனேல் அவ்வறிஞன் முட்டாள் ஆவான்.
இகழ்மிக்க ஒருமுட்டாள் தமிழர்க் கின்னல்
எண்ணானேல் அம்முட்டாள் அறிஞனாவான்!

''வடநாட்டுச் சிறுக்கியந்த விநோதை! அன்னாள்
பொய்மையினை நீயுரைத்தாய் என்ன செய்தாள்!
அடல்நாட்டம் கொண்டிருந்தாள்! குறிஞ்சி நாட்டைக்
கண்டறிய நின்றிருந்தாள். மன்னன் சென்னை
நடமாட்டம் கேட்டறிந்தாள். மன்ன னைப்போய்
நாயாய்த்தான் வால்குழைத்துக் கைப்பிடித்தே
உடன்ஆட்டம் போடலுற்றாள்! குறிஞ்சித் திட்டில்
மன்னவனின் உறுதுணையைச் சாகச்செய்தாள்.

''மன்னவனின் இருதோளும் வாங்கு தல்போல்
வரிப்புலிகள் இரண்டுயிரும் வாங்கி விட்டாள்.
இந்நாட்டைத் தன்கைக்குள் அடக்குதற்கும்
இங்குள்ள ஒற்றுமையைக் கெடுப்ப தற்கும்
மன்னும்ஒரு பகுத்தறிவை மாய்ப்ப தற்கும்
பெருங்கோயில் கட்டுவித்தாள். மக்கள் வாழ்வைத்
தின்னுமதம் பரப்புவித்தாள். அவளின் நோக்கம்
திருநாட்டை அவள்நாட்டுக்கு அடிமையாக்கல்!

''தன்னினத்தைத் தன்னாட்டை உயர்த்து தற்குத்
தரைகடந்தும் கடல்கடந்தும் உறவை நீத்தும்
என்னென்ன பாடுபடு கின்றாள் அந்த
ஏந்திழையாள் படும்பாட்டில் ஆயி ரத்தில்
ஒன்றான பங்கேனும் ஒரு நாளேனும்
ஒருதமிழன் ஒருமறவன் நல்ல தான
தன்னினத்தைத் தன்னாட்டை உயர்த்துதற்குச்
சற்றெழுந்தால் தமிழர்குறை முற்றுந் தீரும்.

தோழியாம் அல்லிக்குச் சொல்லி யேதன்
தோழருக்கும் இனிதாகச் சொல்லலானான்;
''நாழிகையும் ஆயிற்று; விடை கொடுப்பீர்.
நானுமக்குக் கடைசிமுறை யாகச் சொல்வேன்
வாழவைப்பீர் குறிஞ்சியினைத் தலைவன் சொல்லை
மறக்காமல் நடந்து கொள்க! புலிபொறித்த
ஆழிஇதைக் காட்டுபவன் தலைவன் என்றே
அறிந்துகொள்க; வெல்கதமிழ்! குறிஞ்சி வாழ்க!''

எனமுடித்தான எல்லாரும் நடப்ப தென்ன
எனப்பார்க்க ஆவலுற்றார். சேந்தன் அங்கே
தனியாக அமைச்சனையும் வல்லான் என்னும்
தன்துணைப்ப டைத்தலைவன் தனையும் கூவி
''அனல்பெருக்கக் கமழ்தேய்வின் கட்டை சேர்ப்பீர்;
அதில் விழுந்தே உயிர்விடுதல் வேண்டு'' மென்றான்.
புனல்பெருகும் விழியோடும் அழுகை யோடும்
புறம்சென்றார் கட்டைகொணர் விப்பதற்கே!

''என்தோழா, என்னுறவே, தீய மன்னன்
இப்படியா தீர்ப்பளித்தான்!'' எனத் துடித்தே
அன்புடைய செழியனங்கே ஓடி வந்தான்;
அழுதபடி சேந்தனைப்போய் அணைத்து நின்றான்.
"என்னஇதில் அழத்தக்கதுண்டு தோழா!
இனிச்சாவேன்; இன்றைக்கே செத்தால் என்ன?
மனத்தெளிவு கொள்வாய்நீ. மாய்வேன் இன்று;
மக்களெலாம் உ.யிர் பெறுவீர் நாளை!'' என்றான்.

செழியனைஓர் தனியிடத்தில் அழைத்துச் சென்றான்.
''திருநாட்டில் குடியரசை நிறுவ வேண்டும்
அழகியஇப் புலிபொறித்த ஆழி தன்னை
அடையாளம் காட்டினால், தொண்டர்! உன்றன்
மொழிகேட்பார்; தலைவனென ஒப்புக் கொள்வார்.
முன்னின்று புரட்சிதனை நடத்துவிப்பாய்.
தழைகஎழிற் றாய்நாடு; தமிழே வெல்க!
தணல்அணையும் இரவுமிதோ!'' என்று சொன்னான்.

மணந்துடித்தான் செழியனவன். ''அந்தோ! அந்த
மங்கையினால் விளைந்ததிது நீஇ றந்தால்
இனந்துடிக்கும்; இளைஞரெலாம் துடிது டிப்பார்.
அதோ அந்தத் தீயாளைக் காண்பேன்'' என்று
முனம்பாயும் வேங்கையைப்போல் பாய்ந்து சென்றான்
முழுநிலவு விண்ணெல்லாம் முத்துக்குப்பை
தனியான குளிர்செய்ய நடுத்தோட் டத்தில்
தணற்காடு மூட்டுகின்றார் சேந்தன் தோழர்!









( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 100 )





( 105 )





( 110 )





( 115 )




( 120 )




( 125 )





( 130 )





( 135 )




( 140 )





( 145 )





( 150 )




( 155 )





( 160 )




( 165 )





( 170 )





( 175 )




( 180 )





( 185 )






( 190 )




( 195 )





( 200 )





( 205 )




( 210 )







( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )





( 240 )





( 245 )




( 250 )





( 255 )




( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )





( 285 )




( 290 )





( 295 )




( 300 )





( 305 )





( 310 )




( 315 )





( 320 )





( 325 )




( 330 )





( 335 )




( 340 )





( 345 )





( 350 )




( 355 )





( 360 )





( 365 )




( 370 )





( 375 )




( 380 )

பிரிவு -- 37

( விநோதையும் செழியனும் மாடியில் உலாவல்.
செழியன் வருத்தம். )


சிந்தியல் வெண்பா

சிலந்தி இழைபோலும் செம்பொன் னிழையால்
நலந்திகழ் ஆடை நலங்கா -- மலே உடுத்துப்
பட்டரைக்கை மேற்பட்ட பன்மணிகள் மின்ன, மணி
எட்டரைக்கும் மேல்மாடி ஏறினாள் -- தொட்டரைத்த
பூச்சுமணக் கக்குழலில் பூக்காடு தான்மணக்கக்

கீச்சுக் குரல்பாடிக் கிள்ளையவள் -- நீச்சுநினை
வில்லா இருகெண்டை உண்கண் எதிர்செலுத்தி
நில்லா இருகால் நிலைக்கவைத்துப் -- புல்லாய்
இடைசுருக்க நின்றாள். செழியன் இருகண்
கடைசுருங்க வந்தான்! களித்த -- நடையன்னம்
''பஞ்சணையில் மன்னன் படுத்துறக்கம் கொள்ளஒரு
நஞ்சணைந்த மாம்பழத்தை நல்கிப்பின் -- நெஞ்சணைந்த
காதல் துரத்தக் கடிதாக மேல்மாடி
மீதில்வந்து மெல்லிநான் நின்றேனிப் -- போதுநான்
இங்குன்பால் இன்பமுற எண்ணினேன், என்செய்வேன்!

அங்கவனைத் தூக்கத்தில் ஆழ்த்தினேன் -- எங்கும்
ஒருவர் மகிழ்ச்சிஎனில் மற்றொருவர் துன்பம்.
இருவர் மகிழ்ச்சியில் நேற்றுன் -- திருவிரலின்
தூயநகம் பட்டதனால் தோகைஎன் மார்பினிலே
நோயடைந்தேன் இங்க தனைநோக் குங்கால் -- ஆயஇன்பம்
நீர்கொள்ள நேரிழையாள் துன்புற்றேன்'' என்றுரைத்து
மார்பை மறவனுக்குக் காட்டிநிற்க -- நேர்ச்செழியன்
கண்டான்; கருதிவந்த செய்தியையும் தான்மறந்து
வண்டாகி மங்கை மலரிதழ்த்தேன் -- உண்டும்.

உலவியும் ஓடியும் ஆடியும் பாடி
நிலவைப் புகழ்ந்தே நெடிதே -- குலாவுகையில்
வந்து கொண்டிருந்த குளிர்காற்றில் மணமேமி --
தந்து கொண்டிருந்ததனை மெல்லியவள் -- 'இந்த மணம்
எங்கிருந்து வந்ததோ?' என்றாள், செழியனுளம்
பொங்கி, ''கொடியவளே போக்கிவிட்டாய் -- தங்கத்தை
நாட்டில் மிகுந்த நரிதொலைக்கக் கற்றவனை
ஈட்டி முதுகில் எறிந்து கொன்றாய் -- காட்டுப்

புலிக்குக் குழிதோண்டிப் பொத்தெனவே வீழ்த்தி
நலிக்குள்ளா கச்செய்தாய் நாட்டைக் -- கொலைகாரி
அந்தோ, அதோ சேந்தன் வேகின்றான்! அப்புகைதான்
சந்தனத்து நன்மணத்தைத் தாங்கிவந்த -- திந்தநிலை
எந்தவகை பொறுப்பேன்? ஏனோநான் வாழுகின்றேன்!
நைந்தேனே! நான்செய் கடமைமறந்துவிட்டேன்,
பெண்புரிந்த வஞ்சத்தால் பேதுற்றேன் -- மண்புதையக்
கண்ணொப்பாய் என்றன் கருத்தொப்பாய் -- துண்ணென்று
வேகின்றாய்'' என்று விரைவாய்ச் செழியனவன்
போகின்றான் கண்ணீர் பொழிந்து.










( 385 )





( 390 )




( 395 )





( 400 )





( 405 )




( 410 )





( 415 )




( 420 )

பிரிவு -- 38

( அரசனிடம் விநோதையின் வேலைப்பாடு. )

(அறுசீர் விருத்தம்)

மலர்ந்தது காலை! மன்னன்
மலர்ந்தனன் விழிகள்! வஞ்சி
''புலர்ந்ததே பொழுது! நீங்கள்
புதுத்தூக்கம் தூங்கலானீர்!
அலைந்ததென் காதலுள்ளம்
அருகினிற் காத்தி ருந்தேன்.
பலமணி நேரம் பார்த்தேன்.
எழவில்லை! படுத்துக் கொண்டேன்!''
என்றனள் விநோதை மன்னன்,

''என்னமோ தெரிய வில்லை.
...................................................................................
உன்அரு மாம்பழத்தை
உண்டதே அறிவேன்! பின்னர்
என்னதான் நடந்த தென்றே
அறிகிலேன்! யான் விரும்பும்
கன்னலே! என்பொ ருட்டா
இரவெல்லாம் காத்தி ருந்தாய்?''

எனக்கேட்டான் மன்னன். 'ஆமாம்!
இருட்காட்டில் பசித்த ஓர்பெண்
தினைக்கூட்டுத் தேனை எண்ணித்
திகைக்கமாட் டாளா?" என்றாள்.
"மனக்காட்டில் உனைம றந்து
மலர்விழி மூட வைக்கும்
சுனைக்காட்டுத் தழையு முண்டோ?
தோகையே!" என்றான் மன்னன்.

"உண்ணாமல் என்னை வைத்தே
உறக்கத்தில் சென்ற நீங்கள்
பண்ணாத தீமை ஒன்றைப்
பண்ணினீர்! இத்தீ மைக்குக்
கண்ணாள ரோடு நானே
கடலிலே படகிலேறி
எண்ணாத முத்தெ டுக்க
எண்ணினேன என்றாள் மங்கை!

"குலைப்பழம் வேண்டா மென்னும்
குரங்கைநீ கண்ட துண்டோ?
மலைப்பழ இதழ்ப்பெண்ணாளே!
வாகடற் கரைக்கு; காதற்
கலைப்பழக் கத்தைச் செய்வோம்.
கனற்கதிர் பழுக்கு மட்டும்!
நிலைப்பழச் செய்யும் காலை
நிகழ்ச்சியாய் அதை முடிப்போம்!

'நடுப்பகல் வீடு வந்து
நடத்துவோம் ஆடல் பாடல்!
எடுப்பான அழகு நங்காய்!
எழு! நட! போவோம்!" என்றான்.
"படைத்தலைவன்மடிந்தான்;
பலதலை வர்கள் குந்தி
அடுத்தஓர் கிளர்ச்சிக் கான
திட்டமொன்று அமைக்கின்றாராம்!

"நடுங்கிடு கின்றோ மாம்நாம்
தலைவர்கள் நவிலு கின்றனர்.
நடுக்கம்நம் மிடத்தில் இல்லை;
அவரிதை அறிய வேண்டும்
இடும்பைசேர் சேந்தன் செத்த
இடத்தில்நம் மணவி ழாவை
நடத்திடல் செய்தல் வேண்டும்.
நடுங்காமை காட்டுதற்கே!"

தொன தொன என்று பேசித்
தொலைக்கின்றாய் நேரந் தன்னை!
இனிதான செய்தி சொன்னாய்
எழுந்திரு கடலுக் கென்றால்
கனியின்மேல் கனிவைக் கின்றாய்
கடிமணம் புரிவ தென்றால்
பனிமலை தாழ்த்தல் என்று
பாவைநீ நினைக்கின் றாயா?

"நாளைஓர் நாளைத் தள்ளி,
மறுநாளே மணத்தைக் காலை
வேளையே புரிந்தால், எந்த
வீரப்பன் தடுப்பான்? எந்தக்
கோளன்தான் கிளர்ச்சி செய்யக்
கூட்டத்தை நடத்தி னான்? அவ்
வாளைத்தான் பார்க்க வேண்டும்;
அச்சத்தால் இளைக்காதேநீ!"

என்றனன் இருவர் தாமும்
கடற்கரை ஏகினார்கள்.
நின்றது படகு. வேந்தன்
நேரிழை இருவர் ஏறச்,
சென்றது படகு, மங்கை
சிரிப்பினை இதழிற் கூட்டி.
ஒன்றென்றாள் விரலை நீட்டி!
நீபாடென்று உரைத்தான் மன்னன்.

"காற்றொன்று மறிக்கும் இங்கே!
கடலொன்று முழங்கும் இங்கே!
தாற்றுக்கோல் துள்ளு காளைப்
படகொரு பக்கம் இங்கே!
நேற்றுப்பா டியதே பாட
நினைக்கின்றேன்!" என்றாள்; வானத்
தூற்றலொன் றங்கே காற்றின்
துடுக்குமங் கெழுந்த போது,

"இடிமின்னல் காற்று மாரி!
ஐயையோ!" எனவி நோதை;
மடியினில் மன்னன் ஏந்த,
மலர்முகம் கவிழ்ந்தாள். அந்தப்
படகொரு கூத்தா டிற்றே
கதகளிப் பாங்காய்! ஆட்கள்
"எடுபிடி" என்றார்! மேலும்
இடிமின்னல் காற்று மாரி!

"அடங்கிற்றா மழைதான்! மேலும்
அகம்நடுங் கிடவே மேலும்
தொடங்கிற்றா! மணப்பெண் அன்றோ!
தொட்டது கலங்கி டாதோ!
படகினில் மீகா மன்காள்,
பாரிரோ?" என்றான்; அன்னார்
'எடு பிடி' என்றார்! கண்டார்
இடிமின்னல் காற்று மாரி!

'நின்றது மழை,என், கண்ணே!
நீஅஞ்சேல்; காற்றும் 'நின்றேன்'
என்றது. இடிஇ லேசு
கொண்டது மின்னல் இல்லை!
நன்றுநீ எழுந்தி ருப்பாய்;
நடுக்கத்தை லிடுவாய் பெண்ணே!"
என்றனன்; எழுந்து கண்டாள்
இடிமின்னல் காற்று மாரி!

துன்பமே அறியேன், என்றன்
தோகைநீ கிடைத்த பின்னர்;
இன்பமே இடைவி டாமல்
எய்திடு கின்றேன்; இந்த
நன்றான நிலையைக் காண
நாங்களா பொறுத்தி ருப்போம்.
என்றன, பாழாய்ப் போன
இடிமின்னல் காற்று மாரி!"

அழுதானிவ் வாறு கூறு
அரசனும், ஆட்கள் யாரும்
"மழைதானும் மட்டு! மின்னல்
மட்டடி மட்டுக் காற்றே!
கழிமட்டும் படகின் ஆட்டம்
கண்டமட்டுமட்டெ"ன்றார்; ஏந்
திழைகண்டாள் இரண்டு பங்காம்
இடிமின்னல் காற்று மாரி!

"போயி்ன நமது வாழ்வே!
போயின இன்பம்!" என்றே
சேயிழை விநோதை தானும்
திகைத்தாளாய்த் திட்டுகின்றாள்;
"நாயொன்று கழுதை ஒன்று
நலமிலாப் பன்றி ஒன்றாம்.
ஈயொன்றாம் இங்கே இந்த
இடிமின்னல் காற்று மாரி!"

(வேறு)

மக்களுயர் மன்றத்தில் மக்கள் கூடி,
வாயார வாழ்த்தினார், மழையைக் காற்றைத்
தக்கபேரிடியைஎழில் மின்னல் தன்னை
தரையெல்லாம் வயலெல்லாம் ஏரி எல்லாம்
மிக்கபெரு வெள்ளத்தைக் கண்டு கண்டு
மேனிஎலாம் ஒளிசிறக்க மகிழ்ச்சி கொண்டார்;
"புக்கஒரு வறுமைநிலை போயிற்றெ"ன்றார்,
"பொதுவாழ்வும் உயரு" மெனப் புகன்றார் யாரும்!

அப்போது சில்லியங்கே ஓடி வந்தே,
"அரசரொடு விநோதையம்மை கடலிற் சிக்கி,
இப்போது தொல்லையில் இருக்கக் கண்டோம்.
நம்கடமை என்ன" வென்றே எரிந்து வீழ்ந்தான்.
சப்பாணி, "சரி போடா!" என்று சொன்னான்.
சந்தப்பன், "சாகட்டும்!" என்று சொன்னான்.
"எப்போது மழை நிற்கும்?" என்றான் முத்து,
"மழைநின்றால், வந்திடுவார என்றான் தொப்பை.

"பெரிதப்பா என்கேள்வி! சின்ன தல்ல!
பெரியவர்கள் பதில்சொல்ல வேண்டும என்றே
உரிமையுடன் சில்லிசொல்ல, அமைச்சன் சொல்வான்
"உனக்கெப்ப டித்தெரியும் அரசன் தொல்லை!'
"வரிசையற்ற கேள்விஇது! நான்தான் கேட்டேன்.
வானாற்றுத் தொலையொலியில என்றான் சில்லி.
"சரி அடடா வல்லானே! உதவிக்காகத்
தக்கபடி செல்க!" என அமைச்சன் சொல்ல,

"நான்செல்ல அட்டியில்லை; நடுமார் புக்குள்
நண்டொன்று புகுந்துவிளை யாடு தல்போல்,
மேன்மேலும் பெருகிற்றோர் குத்த" லென்று
விளம்பினான் நல்லபடைத் தலைவன் வல்லான்;
"தான்போக லாம்,கிழவன் ஆத லாலே,
முடியாதே!" என அமைச்சன் தானும் சொன்னான்-
"ஏன்போனார், மன்னவனும் அயலாள் தாமும்?"
எனக்கேட்டுச் சிரித்திட்டான் செழியன் ஆங்கே!

சில்லியவன் தலைமையிலே படைவீரர்கள்
செல்லட்டும்; வல்லோனே ஏற்பா டொன்று
நல்லபடி செய்தனுப்பு; மழையும் காற்றும்
நள்ளிருள்போல் வல்லிருட்டும் வருதல் கண்டோம்!
செல்லப்பா!" என்றமைச்சன் சொல்ல, வல்லான்,
மூடுவண்டி தனிலேறிச் செல்லலானான்;
சில்லிசொன்னான், "எனக்கிந்தப் பெருமை தந்தீர்!
நன்றிஐயா நன்றி" என்று சொல்லிச் சென்றான்.

சரியாக நான்குமணி மாலை யாகத்
தையலுடன் மன்னவனும் ஏறிச் சென்ற
ஒருபடகு கரையினிலே வந்து சேர,
ஒருவருமே தனக்குவராக் கார ணத்தால்
பெரும்படகின் ஆட்களே இறங்கிச் சென்றே,
அரண்மனையின் தனிஅறையைப் பெருக்கிக் கூட்டி.
இருவரையும் படுக்கவைத்தார்; அமைச்சன் வந்தான்.
"ஏன்எவரும் இங்கில்லை?" என்றான் மன்னன்.

"சம்பள மில்லாமல்அலு வல்பார்ப் பாரோ?
நம்வீட்டில் வெறும்பானை பொங்கு மோ?இவ்
வம்புசெய வேண்டாங்காண், மன்னா! இந்த
மங்கையுடன் விளையாடல் ஒன்றே உன்றன்
செம்மைநெறி என்றெண்ணி இருக்கின்றாயா?
சின்னசெயல் விடுக!" என அமைச்சன் சொன்னான்.
"எம்மைநீ கடலினின்று காப்ப தற்கே
ஏன் ஆட்கள் அனுப்பவில்லை" என்றான் மன்னன்.

"யாருக்குத் தெரியும்நீ சென்றசேதி?
எவனுக்குத் தகவல்தந்தாய் கடலினின்று?
பாருக்குள் வியப்பன்றோ உன்செயல்கள்?
பகர்ந்தனைநீ வானாற்றுக் கருவி யாலே
யாரைஅழைக் கச்சொன்னாய்? சில்லி தானா
உனக்கமைச்சன்? கூறிடுக! எனினுமந்த
ஊரைஏமாற்றுகின்ற சில்லியோடே
ஒருபடையும் அனுப்பிவைத்தேன என்றான் மூத்தோன்

நெறுநெறுவென்றேபல்லைக் கடித்தான் மன்னன்!
நேரிழையாள் மன்னவன்வாய் அடங்கும் வண்ணம்
குறுக்கினிலே புகுந்திதனைச் சொல்ல லானாள்:
.............................................................................................................
"வெறுக்கும்வகை மன்னர்நடப் பதுபிழைத்தான்;
மேலுமிது போல்நடக்க மாட்டார்; உங்கள்
குறிப்பைப்போல அரசியலை நடத்த" என்றாள்,
கூறினான் மன்னவனும், "ஆம்ஆம என்றே!

"என்குறிப்புப் போல்நடக்க இசைந்த தற்கே
இந்நாட்டின் பேராலே நன்றி சொன்னேன்;
முன்குறிப்பேன் மன்னனிடம் என்கு றிப்பை
முடித்திடுவேன் அதன்பிறகு செயல்ஒவ் வொன்றும்!
புன்னெறியை விடவேண்டும்! வையம் மேலும்
புகழவே செய்கைதனைச் செய்தல் வேண்டும்!"
மன்னவன்பால் இதுகூறி விடையும் பெற்று
மகிழ்ச்சியுடன் நடப்பான்போல் அமைச்சன் சென்றான்.

அமைச்சனவன் சென்றவுடன் விநோதை அங்கே
அரசனிடம் சொல்லுகின்றாள்; அருமை அத்தான்!
அமைச்சன்மேல் உனக்கெழுந்த சினமோ அந்த
அமைச்சனுயிர் குடிப்பதுவாம்; நான்த டுத்தேன்;
அமைச்சனைநாம் வெளிப்படையாய் வெறுத்தல் தீமை
அமைச்சனைக்கொண் டேமணத்தை முடிக்க வேண்டும்.
அமைச்சனுரை கேட்டதனால், அவனைச் சார்ந்தோர்
அகமின்ன தென்றுநாம் அறிந்து கொண்டோம்.

"திருமணத்தை முடித்திடுவோம்? அதன்பின் னேநாம்
செயத்தக்க தின்னதென்று செப்பு கின்றேன்.
ஒருபயலும் நமக்கிங்கே உதவ மாட்டான்.
நம்மையெலாம் ஒழிப்பதுதான் அவர்கள் எண்ணம்.
இருக்கட்டும் சில்லி நமைத் தேடிவந்தான்,
என்றுரைத்தான் அமைச்சனவன், எங்கே சென்றான்?
பெருங்கடலில் பெருந்தொல்லை பெற்றான் போலும்?
என்றுரைத்தாள், மங்கையவள்! சில்லி வந்தான்.

"அவ்வளவு பெருங்கடலில் எங்கும் தேடி
அலைந்தோமே! எங்கிருந்தீர் அவ்வெள் ளத்தில்
எவ்வளவு சிறுபொருளும் துழாவிப் பார்த்த
என்கையில் கிடைத்திருக்கும் நீங்கள் மட்டும்
இவ்வழியாய் வந்திருக்க வேண்டும என்றே
இடதுகையை வேறுபக்கம் வளைத்துக் காட்ட
'மௌவலூர் நேர்க்கரையை நோக்கி நாங்கள்
வந்திட்டோம் அதுபற்றி வருத்தம் இல்லை!

"அலைகடலில் எங்கள்நிலை தன்னை நீவிர்
அமைச்சனிடம் சொன்னீரா? என்ன சொன்னான்?
தலைக்கொழுப்பாய் ஏதேனும் சொன்ன துண்டோ?
சாற்றிடுவீர்!" என மங்கை சாற்றச் சில்லி
"தலைக்கொழுப்பு மட்டுமல்ல வாய்க்கொ ழுப்பும்
தன் கொழுப்பும் பிறர்கொழுப்பும் சொல்லக் கேட்பாய்!
'அலைகடலில் ஏன்போனான் மன்னன்?' என்றான்;
ஆர்என்றால் அவன்றானே செழியன் என்பான்!
"மக்கள்பொது மன்றத்தில் அமைச்சன் மற்றும்
வல்லானோ டாயிரம்பேர் இருந்த போது
இக்கதையை நான்சொன்னேன். என்னை நோக்கி
எளிதாகப் பலநாய்கள் பேசக் கண்டேன்;
செக்காடும் பொன்னன் மகன் வல்லான் என்ற
சிறந்ததுணைப் படைத்தலைவன் கேலி யாக
"மிக்கவலி மார்பினிலே ஆதலாலே
மேவாது, வரமாட்டேன என்றுரைத்தான்!

"போனவர்கள் சாகட்டும் அதனா லென்ன?
போடாநீ!" என்றுரைத்தான் அங்கோர் முட்டாள்.
'தேனடா மங்கைஅந்த மன்னனுக்கு?
சென்றவர்கள் ஒழியட்டும்; அதனா லென்ன?
நீநாய்போல் ஏன்வந்தாய் என்றான் ஓர்ஆள்!
நீர்ப்பெருக்கு விழிமறைக்க அழுதேன்; பின்பு
நானந்த அமைச்சனிடம் கடைசி யாக
'நடப்பதென்ன?' எனக்கேட்டேன்; அவனுரைத்தான்;

"உன்னுடம்பு சரியில்லை; படைவீ ரர்கள்
உயர்அறிஞர் சில்லியுடன் போக வேண்டும்;
என்ஆணை -- அவர்களிடம் சொல்லிக் காட்டி
இப்போதே அனுப்பென்றான்; அதுபோல் வந்தேன்.
என்னென்றன் கருத்தென்றால் விநோதை யம்மா
வீரத்தில் நல்லறிவில் மிகுந்த மன்னி!
அன்பில்லாச் செழியனொடு வல்லான் மற்றும்
அமைச்சன்முதல் அனைவரையும் ஒழிக்க வேண்டும்.

"இச்செயல்கள் விநோதையால் முடியும்; வேறே
இசைவான ஆட்களையும் அவ்வேலைக்கே
மெச்சும்வகை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீண்காலம் போக்குவதில் பயனே இல்லை.
பொய்ச்சிரிப்பும் பொறாமையுமே உருவாய் வந்த
பொறுக்கிகளை ஒருசிறிதும் நம்பவேண்டாம்
எச்சரிக்கை அல்ல இது; மன்னவர்பால்
என்தாழ்ந்த விண்ணப்பம்!" என்றான் சில்லி.

"அஞ்சாதே சில்லியப்பா! நடப்ப தெல்லாம்
அரசர்க்கு நன்றாகத் தெரியும்; ஒன்றும்
மிஞ்சிவிட மாட்டார்கள்; தீய வர்கள்
முறுக்குகின்ற மீசையிலே தீயே மூளும்!
நெஞ்சார நீர்மட்டும் அப்ப கைவர்
நிற்கு மிடந்தனிலேயும் நிற்க வேண்டாம்.
பஞ்சிழைக்குப் பட்டப்பொறி உடனிருந்த
பட்டுக்கும் பட்டுவிடும் அன்றோ?" என்றாள்.

புகழ்ச்சியினை மேலாக்கும் பிள்ளை தன்னைப்
புதைத்துவிட்ட விநோதைமேல் உள்ள தான
இகழ்ச்சிதனை உள்ளுக்குள் வைத்த சில்லி,
இட்டதொரு கட்டளையை முடிப்ப வன்போல்
"மகிழ்ச்சியம்மா மகிழ்ச்சியம்மா! என்று சொன்னான்
மன்னவனும் சேயிழையும் திரும ணத்தின்
நிகழ்ச்சிமுறை அழைப்புமுறை மணத்தின் பின்னர்
நிலைக்குமுறை! இவைபற்றிப் பேசி நின்றார்.







( 425 )




( 430 )






( 435 )





( 440 )




( 445 )





( 450 )





( 455 )




( 460 )





( 465 )




( 470 )





( 475 )





( 480 )




( 485 )





( 490 )





( 495 )




( 500 )





( 505 )




( 510 )





( 515 )





( 520 )




( 525 )





( 530 )





( 535 )




( 540 )





( 545 )




( 550 )





( 555 )







( 560 )




( 565 )





( 570 )





( 575 )




( 580 )





( 585 )




( 590 )





( 595 )





( 600 )




( 605 )





( 610 )





( 615 )




( 620 )





( 625 )






( 630 )




( 635 )





( 640 )




( 645 )





( 650 )





( 655 )




( 660 )





( 665 )





( 670 )




( 675 )





( 680 )




( 685 )





( 690 )





( 695 )




( 700 )





( 705 )





( 710 )




( 715 )

பிரிவு -- 39

( தரும இல்லத்தின் நிலை )

(அகவல்)

தரும இல்லம் உருமழுங்கிற்றே
தெருப்புறம் ஏழைகள் செங்கை ஏந்தித்
தலைகாட் டுவதும் இல்லை; கொலை, கவர்
பொதுமக ளிர்தரும் புதுவி ருந்துகள்
நாடொறும் நடைபெறும் வீடா யிற்றே!
நட்ட நடுவிற் பட்டப் பகல்போல்
மின்வி ளக்குகள் விளைத்தன ஒளியை!
மணிப்பொறி பன்னிரண்டு மணிஅ டித்ததே.
அணித்தாய்ச் சுற்றிலும் அமைந்த அறைகளில்
ஒன்று கவறா டுமிடம்; மற்றொன்று
கட்கு டிக்கு மிடமே; கட்டில்கள்
இட்டபொது மக்கள் நட்பிடம் ஒன்று;
கழக உறுப்பினர் காத்திருப்ப தொன்று;
நடுக்கூடம் ஆடல் பாடல்
நடக்கும், ஆயிரம்பேர் நண்ணு மிடமே!







( 720 )




( 725 )




( 730 )

பிரிவு -- 40

( ஒழுக்கக்கேட்டின் கோட்டையே தரும இல்லம். )

(அறுசீர் விருத்தம்)


தரும இல்லத்தை நோக்கித்
தமிழச்சி மடவார் தோழி
இரவினில் ஒரும ணிக்கு
நடக்கின்றாள்! இடையில் பல்லோர்
"அருந்தமிழ் மங்கையேநீ
அங்கேசெல் லாதே அம்மா!
திருநாட்டின் ஒழுக்கம் காப்பாய்!"
என்றனர். அவளுரைப்பாள்;

"நடப்பதை அறிதல் வேண்டும்
நடப்பினிற் சேர்தல் தீதே
படைவலி யுடையான் மன்னன்
பாவையாள் சில்லிக் கேதான்
இடப்பட்ட வேலை தன்னை
இயற்றுவான், என்னிடத்தில்
தடுக்காமல் தரும இல்லம்
சற்றுவா" என்று சொன்னான்.

"போகின்றேன்; தோழ ரேநீர்
இங்கிரும்; போக வேண்டாம்.
ஏகிடும் என்போன் றோரை
'ஏகாதீர்' என்று சொன்னால்,
'சாகின்றோம்!' என்பார். சாகா
திருப்பார்கள் அன்றோ?" என்று
போகின்றாள் மடவார் தோழி,
போக்கற்ற கூட்டம் நோக்கி.

தீதற்ற தமிழர் தாமும்,
சிவானந்தர் சிவசம் பந்தர்
மாதர்மேல் மைய லாகி,
மறைமுக மாகப் போனார்.
மாய்தரும் கள்ளை எண்ணி
மாலுக்கோர் அடிமை சென்றான்.
வாய்திறக்காதி ருந்தார்
வழியினில் தோழரெல்லாம்!

சுவரோடும் சில்லி தானும்
சுற்றுமுற் றும்பார்த் தானாய்க்
கவறாடும் எண்ணத் தோடு
கடிதாகச் செல்லும் போதில்,
"எவர்போவார்?" என்று கேட்டார்
வழிநின்ற இளைஞர் சில்லோர்
"எவர்கேட்பார்?" என்றான் சில்லி
இருந்தவர் இயம்பு கின்றார் :

"இங்கொரு மங்கை உள்ளாள்
ஏதேனும் பொருள் கொடுப்பார்
தங்கட்குத் தன்னை ஈவாள்
சடுதியில் வரவி ருப்பம்
உங்கட்கும் உண்டோ?" என்றார்.
"இல்லை!" என்றோடிப் போனான்.
செங்குத்தாய் நின்ற தென்னை
வீழ்ந்தாற்போற் சிரித்தார் வீழ்ந்தே!

பொய்க்காடு வஞ்சக் குன்று,
புன்செயற் பெருக்கு நெஞ்சில்
எக்கேடும் நிறைந்த பள்ளம்,
இரக்கமொன் றில்லா ஏரி!
முக்காடு போட்ட வண்ண
முகமலர் மறைத்த வண்ணம்
நிற்காமல் சென்றாள், நின்றோர்
"யார்?" என்று கேட்க லானார்.

"நானன்றோ அல்லி!" என்று
நடந்தனள் விநோதை! ஓர்ஆள்
"ஏனந்த அல்லி அங்கே
ஏகுவா ளானாள்?" என்றான்.
"ஊனந்தான் அவளு ரைத்தாள்.
உண்மையில் அல்லி அல்லள்,
ஆனமுக் காட்டை நீக்கி
அறிகின்றேன்!" என்றான் ஓர்ஆள்.

"கானத்தைக் கையால் தள்ளிக்
கடலைக் காலால் கலக்கும்
ஆனையை அறைந்து கொல்லும்
அருந்திறற் செழிய னுக்குத்
தேன் அவள்! விநோதை யாள்பால்
செல்லாதே!" என்றான் ஓர்ஆள்
"ஏனினி இங்கிருத்தல்?"
என்றனர் ஒருங்கு சென்றார்!







( 735 )




( 740 )





( 745 )





( 750 )




( 755 )





( 760 )





( 765 )




( 770 )





( 775 )




( 780 )





( 785 )





( 790 )




( 795 )





( 800 )