பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 46


(மன்னனிடம் விநோதை)

அறுசீர் விருத்தம்

மகளிரில்லத்தில் மன்னன்
மடிமீது தலையை வைத்து
நகுநகு என நகைத்தாள்.
ஏனென்று மன்னன் கேட்டான்?
"திருமணம் முடிந்த பின்னர்
தையல்பின் உன்அன் பால்ஓர்
மகன்தோன்றி. என்வயிற்றை
வண்ணான்சால் ஆக்கி வைப்பான்!

"கண்ணாடி தன்னில் என்னைக்
காணுவேன்; சிரிப்பேன்!" என்றாள்.
"பெண்ணே நீஅதைநினைந்தா
பெருநகை கொண்டா" யென்றான்.
"திண்ணமே!" என்று நங்கை
ஒருசெய்தி உரைக்கலானாள்;
"கொள்மணம் கொள்ளு முன்னே
கோள்நிலை பார்த்தல் வேண்டும்.

"சிவாநந்தர் தமைஅ ழைத்தால்
தெளிவுறச் சொல்வார என்றாள்.
சிவாநந்தர் அழ்க்கப் பட்டார்.
"திருமணம் பொருத்தம் மற்றும்
இவரெதிர் காலம் என்றன்
எதிர்காலம் பார்க்க!" என்றாள்.
அவரவர் பிறந்த நாளை
அறிவிக்கத் தெரிந்து கொண்டு

நடப்பதைச் சொல்லிப் பின்பு்
ஏடுகள் நாலைந் தாறு
படபட எனத்தி ருப்பிப்
பலகையில் எழுதிப் பார்த்து
நெடுந்தொகை விரலால் எண்ணி,
நெற்றியை வருடிப் பின்னர்
"கடுந்துன்பம் அடைவார்; ஆனால்!
கடப்பார்பின், இன்பங் கொள்வார்!

"நன்மணங் கோயி லுக்குள்
நடைபெறும். அதைத் தொடர்ந்து
முன்னுற்ற பகைவன் வீட்டில்
முறையாக ஆடல் பாடல்
இன்னும்பல் வேடிக் கைகள்
இயன்றிடும்; நாலு நாட்பின்,
கன்னியை மணந்த காளை
கட்டாயம் இறப்பான்!'' என்றான்

"ஐயையோ!" என்று தையல்
அழுதுமண் ணிற்பு ரண்டாள்
"வையத்தில் எனக்கேன் வாழ்வு
மன்னவர் இறப்பா ரானால்
உய்ந்திட வழிவே றுண்டா?
உரைக்கமாட் டீரா?" என்றாள்.
"நைவதேன் அதற்குப் பின்னே
நடப்பதைக் கேட்பாய என்றான்;

"மணந்தவன் இறந்த பின்நீ
மறுமணம் செய்து கொண்டு்,
பிணங்குதல் பிரிதல் இன்றிப்
பேரின்பப் பெருவாழ் வாற்று.
மணல்போலப் பல்லாண்டிங்கே
வாழுவாய என்று சொல்ல,
அணங் "கெனக் கிவர்தாம் வேண்டும்
ஐயோ!" வென்றழுது நின்றாள்!

"அழுவது மடமை அம்மா!
அறிவிக்கின்றேன் அதைக்கேள்;
மழைபோலும் இன்பம் நல்கும்
மன்னரைப் பின் மணப்பாய்,
பழியில்லை; முதலில் நீஓர்
பகைவனை மணப்பாய், அன்னோன்
ஒழியட்டும் நாலு நாளில்
உனக்கென்ன? என்று ரைத்தான்,

"ஒருவனை முதல் மணப்பேன்
அவனுடன் உறவு கொள்ளேன்,
சரிதானே" என்றாள் தையல்
"சரிதானென் றுரைத்தான், பார்ப்பான்.
"வருவாரா ஊரார்?" என்றாள்.
"வருவார்கள் நிறைய" என்றான்
"பெரியதோர் மகிழ்ச்சி செய்தீர்!
"போய்வாரும்!'. என்றாள் பெண்ணாள்.

போயினன் சிவாநந் தன்தான்;
போனபின் வேந்தை நோக்கித்
"தூயஎன் அன்பே! என்ன்
சொல்கின்றீர்? பகைவ னான
தீயஅச் செழியன் தன்னைத்
திருமணம் முதலிற் செய்தால்
மாயத்தான் நேரும். நாமும்
மறுமணம் புரிந்து தேனில்
ஈயொத்து வாழக் கூடும்!"

என்றனள்..".அவ்வாறேசெய்
இன்புற்று வாழ்தல் ஒன்றே
என்எண்ணம்! மேலும் அந்த
இழிவுறு செழியன் தன்னை
முன்மணம் புரிந்து கொள்ள
முடிவுசெய் தாயன்றோநீ?
என்னதான் சொல்வேன் உன்றன்
புலமையை!" என்றான் மன்னன்.









( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )

பிரிவு -- 47

(முரசு அறைதல்.)

(அறுசீர் விருத்தம்)

யானையின்மேல் முரசறைவோன் இசைக்கின்றான்
"விநோதைக்கும் செழிய னுக்கும்
ஆனசிவன் கோயிலிலே திருமணந்தான்
விடியுங்கால் ஆகு மென்றே!
போனவரும் அவ்வழியே வந்தவரும்
இதுகேட்டார்; "புதுமை" என்றார்.
ஏனிவனும் அவள்வலைக்குட் பட்டுவிட்டான்;
நாட்டுக்கும் இழிவே அன்றோ?

குடியாட்சி கோருகின்ற தொண்டரெலாம்
இதுகேட்டுக் கொதிக்க லானார்;
முடியாட்சி இருந்தபடி இருப்பதுவே
நன்றென்று முழங்கும் சில்லோர்
"பொடியாயிற்று அவரியக்கம்!" என்றார்கள்;
அறிஞரெலாம் புலம்ப லானார்!
இடியாயிற் றமைச்சருக்கும் அலுவலகத்
தாருக்கும்; 'ஏஏ' என்றார்!

"அரசன்கை உயர்ந்ததென்றும் மக்கள்கை
தாழ்ந்ததென்றும் அறைந்தார் பல்லோர்.
உரன்மிக்க செழியனுக்கு விநோதையினை
உடன்கூட்டித் தன்கட் சிக்கோர்
பெருவலியைத் தேடினான், மன்னவனும்!
அவன் பெருமை பிரிந்த தெ"ன்று
தெருவிலுளோர் ஊரிலுளோர் நகரிலுளோர்
பெரும்பாலோர் செப்பினார்கள்;

"அயல்நாட்டாள் என்னுமோர் பழியினின்று
நீங்கினாள் அதுவு மின்றிப்
புயலெழுந்து படியெழுந்து பொதுமக்கள்
எதிர்ப்பினையும் போக்கிக் கொண்டாள்;
துயிலுகின்ற மன்னவனின் துணைகொண்டு,
படைவீரர் துணையும் கொண்டாள்!
இயல்பிலுயர் வலியுடையான் செழியனையும்
கணவனென இழுத்துக் கொண்டாள்!

"நெறிதவறி நடப்பவளை நிறையில்லா
விநோதையினை நாட்டு மன்னர்
முறைதவறித் திருமணமே முடித்துக்கொள்
வார்என்று முன்நினைத்தோம்.
குறிதவற வில்லையன்றோ? கொள்கைவிட
வில்லையன்றோ? என்றார் சில்லோர்.
"மறந்துவிட்டான் தன்நிலையைச் செழியனினி
வாழான என் றுரைத்தார் சில்லோர்?

ஈப்பறக்கும் ஒலியுமில்லை! இருபதினா
யிரந்தொண்டர் பொதுமன்றத்தில்
தீப்பறக்கும் விழியோடு, சினம்பறக்கும்
நெஞ்சோடு சென்றுட் கார்ந்தார்.
நாப்பறக்கும் சொற்களிலே நெடுமாறன்
எனும்மறவன் சொல்ல லானான்;
"வாய்ப்பறஅவ் விநோதையினைச் செழியன்மணந்
திடல்சிறிதும் வாய்மை இல்லை;

"விநோதையிடம் இருந்திந்தக் குறிஞ்சியினை
மீட்பாரை விட்டு நீங்கி,
இனத்தாரை ஏமாற்றிக் குறிஞ்சிபெற்
நினைப்பாரை ஆத ரித்தான்!
தனதெனஓர் கொள்கையிலான்; தன்னலமே
பெரியதென்பான்! செழியனைப்போல்
மனத்தாரால் தீமையலால் இனத்தார்க்கு
வருநன்மை சிறிது முண்டோ?

"அருந்திறனும் பெரும்பண்பும் உடையனெனும்
புழுக்கோர் அழிவைச் சேர்ந்தான்,
இருந்திடலும் தீமைஎன நாமெலாம்
எண்ணும்வகை இழிவைக் கொண்டான்
பெருந்தவறாய்க் கோயிலிலே திருமணமும்
புரிவதென உறுதி கொண்டான்
திருந்திடவும் நாம்சொன்னால் தெளிந்திடவும்
முடியாத நிலையடைந்தான்!

"இதுசெய்வான் செழியனென்று நாமெல்லாம்
கனவினிலும் எண்ண வில்லை
பதைபதைக்கச் சேந்தனுயிர் மாய்த்தவளை
மணக்கின்றான்; பாவி யானான்
மிதிபட்டுச் சாவதற்கும் மேம்பட்டு
வாழ்வதற்கும் கார ணந்தான்
மதிஅல்ல. தலைஎழுத்தே என்பவனை
ஒருதமிழன் மதிக்க லாமா?

(வேறு) அறுசீர் விருத்தம்

என்றனர் புலம்பி னார்கள்;
இன்னும்அங் கொருவன் சொல்வான்;
"சென்றநம் சேந்த னார்தம்
புலிபொறித் திட்ட ஆழி்
தன்னையாரிடத்தி லேதான்
தந்துசென் றார்!ந மக்கே
இன்றெவர் தலைவர்? நம்மை
யாவர்தாம் காக்க வல்லார்?

"தக்கான்பால் அன்றி வேறு
தகாதான்பால் ஆழி தன்னை
வைக்கிலார் சேந்த னார்தாம்!
ஆழியை வைத்தி ருப்போன்
எக்காலம் புரட்சிக் காலம்
என்பதை அறிவானன்றோ?
அக்காலம் அதைந டத்த
ஆழியைக் காட்டு வானோ?"





( 90 )




( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )




( 135 )





( 140 )




( 145 )




( 150 )





( 155 )




( 160 )







( 165 )





( 170 )




( 175 )

பிரிவு -- 48

(செழியன் விநோதை பார்ப்பனத் திருமணம்.)


அறுசீர் விருத்தம்

கோயிலின் கூடந் தன்னில்
மணவறை அமைத்தி ருந்தார்.
ஏயும்அம் மணவ றைக்கே
எதிரினில் அரசாணைக்கால்.

தீயிடச் சுள்ளி, சால்கள்!
திருவிளக் கம்மி ஆப்பீ
தோய்தயிர் நெய்பால் மற்றும்
தூயதேன் கருப்பஞ் சாறு,

முக்கனி அரிசி மூட்டை
மும்முழக் குருத்து வாழை
மிக்கபூ சிவப்பு மஞ்சள்
வெண்ணீறு கரித்தூள் சோறு
செக்கெண்ணெய் சீயக் காய்த்தூள்
மிதியடி பனிரண் டாறு
பைக்குளிக் கறிகள் காய்கள்
பனைமடல் விசிறி தேங்காய்,

பயறுகள் குடைபொன் வெள்ளிப்
பலபொருள் முறம்து டைப்பம்!
பயின்றிடும் அன்பு வெள்ளம்
படிவதாம் மணத்தினுக்கே
வியந்தஇப் பொருள்கள் எல்லாம்
விழலென்னும் விழலின் கற்றை
முயன்றுமே பரப்பி வைத்தார்.
முழங்கின இசைகள் முற்றும்.

நெற்றிமுப் பட்டை, மார்பில்
நெடியமுப் பட்டை, தொப்பை
மற்றுமுப் பட்டை, தோளில்
மூன்றுமுப் பட்டை, உச்சி்
பிற்கழுத் தின்முப் பட்டை,
பெருமுழந் தாள்முப் பட்டை,
சிற்றின சாம்பற் பட்டைச்
சிவாநந்தன் வந்து உட்கார்ந்தான்!

ஒருபுறம் சிவசம் பந்தன்;
திருமாலுக் கடியான் ஓர்பால்!
அரிவையாம் அல்லி ஓர்பால்;
அழுமூஞ்சிச் சில்லி ஓர்பால்
வரைவிலாப் படைத்த லைவன்
வல்லான்ஐந் தாறு வீரர்
இருந்தனர். மணத்தின் மக்கள்
இனிவர இருக்கின் றார்கள்.

"துவக்கவா" என்றான் பார்ப்பான்
துவக்குக!" என்றான் சில்லி
தவளையின் கத்தல் போலக்
கத்தினான்! கடிந்து சில்லி
"கவலையேன் தமிழி ருக்கக்
கழறுக!" என்று சொன்னான்.
"இவைஎலாம் மந்திரங்கள்
தமிழினில் இல்லை!" என்றான்.

"தமிழனில் இலாத ஒன்று
தமிழருக் கேதுக கென்றான்
அமைதியை எண்ணி ஆங்கே
அவைகளை நிறுத்தம் செய்து,
"அமைவுறு பெண்மாப் பிள்ளை
இருவரை அழைப்பீர என்றான்.
தமிழனும் விநோதை தானும்
சார்ந்தனர், மணவ றைக்குள்!

"ஆப்பீஏன், அடிமுட் டாளே!
அகறறென்றான் மணமாப் பிள்ளை
"ஆப்பீயின் மந்திரத்தால்
அமைப்பேன்அப் பிள்ளை யாரின்
காப்புவேண் டாமா?" என்றான்
"காப்புமேன், கொலுசு மேன்காண்!
தோப்பினில் கொண்டு போட்டுத்
தொலை!" என்று செழியன் சொன்னான்;

மஞ்சளால் மந்திரித்தான்.
மாத்தெய்வம் ஆக்கல் என்னும்
வஞ்சத்தைச் சூழ்ச்சி தன்னை
மறுத்தனன் செழியன்! பார்ப்பான்
நெஞ்சத்தால் நெருப்பானான்போல்,
நெருப்பினை வளர்க்க லானான்.
"தம்சேர்க்கை தொடங்கு வார்முன்
தணல்ஏன்?" என்றான்மாப்பிள்ளை!

தாலியைக் கையி லேந்தித்
தமிழனின் கையில் தந்து,
"சேலிணை விழிவிநோதை
கழுத்தினில் சேர்ப்பாய்!" என்று,
நூலினை அணிந்த பார்ப்பான்
நுவலவே, செழியன் போதும்;
பாலுள்ள அன்பே போதும்
பழுதைஏன்?" என்று கேட்டான்.

"திருமணம் நடத்த வந்தேன்.
திருவடி தொழுவீர்!" என்றான்.
சரேலென முகம்சுருக்கிச்
செழியனும் சாற்று கின்றான்;
"பெருமக்கள் வாழ்த்தி னார்கள்;
பின்னும்நீ இங்கேன் வந்தாய்?

ஒருநொடி இராதே; இங்கே
இருந்திடில் உதைதான்!" என்றான்.

பார்ப்பனன் ஓடிப் போனான்
அங்குள்ள பலசரக்கும்
நீர்ப்பட்ட வண்ணம் வாரிச்
சென்றனர். வேறு பாங்கில்.
வார்ப்படப் படிவம் போன்றாள்
விநோதையின் விரலில் ஆழி
ஊர்ப்புற மக்கள் வாழ்த்த
உவப்புடன் இட்டான் நன்றே!

அவள்ஆழி செழியற் கிட்டாள்.
இன்பத்தில் தோய்வ தெண்ணிக்
குவளையங் கண்ணாளோடு
குன்றத்தோள் செழியன் சென்றான்.
அவரவர் வாழ்த்தினார்கள்.
"அன்பினால் வாழ்க!" என்றே.
அவரவர்க்கு அடைகாய் ஈந்தார்;
அவர்களும் வாழ்த்திச் சென்றார்.







( 180 )





( 185 )





( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )





( 220 )




( 225 )





( 230 )





( 235 )




( 240 )





( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )





( 270 )





( 275 )




( 280 )

பிரிவு -- 49

(சேந்தன் செத்த மாளிகையிலேயே நம் மணவிழாத்
தொடர்ச்சி நடக்க வேண்டும் என்று செழியனைத் தன் பக்கம்
திருப்பினாள் விநோதை.)

பஃறொடை வெண்பா

"எனக்கு மணவாளர், இந்தக் குறிஞ்சி
தனக்குமே தார்வேந்தர் நீர்!" என்று தையல்நல்லாள்
தாவி அணைத்துத் தனிப்பஞ் சணைசேர்த்துப்
பூவிலொரு பூப்போல் அவன்முகத்தில் தன்முகத்தை
நன்று புதைத்து நவிலுவாள் ஓர்செய்தி;
"இன்றந்தச் சேந்தன் எழில்மனையி லேநமக்கு
நல்ல மணவிழா நாட்டார் நடத்துவதால்
செல்லல் நமதுகடன், நீர்என்ன செப்புகின்றீர்?
ஆடல் நடக்கும்!" அருந்தமிழில் நல்லநல்ல
பாடல் நடக்கும்; பலர்க்கும் விருந்து
நடக்கும்!" எனப்பெண் நவின்றாள். செழியன்.
"அடுக்குமா? என்நண்பன். இந்நாட்டின் ஆவியொப்பான்
செத்தானே! என்று திடுக்கிட்ட மக்கள்உளப்
பித்தும் பெருஞ்சினமும் மாறலில்லை. அங்கிதற்குள்
நாம்போய் விழாநடத்தல் நாட்டுமக்கள் கூட்டமெனும்
பாம்பை எழுப்புவ தாகும். பலதலைவர்
சேந்தன் எரியணைந்த வீட்டின்முன் வாயிலிலே
பாய்ந்த கண்ணீரும் பழிவாங்கும் வாளுமாய்.

உன்னையும் மன்னனையும் ஒட்டஉயிர் வாங்குவதாய்ச்
சொன்னதொரு சூள்காக்கக் காத்திருத்தல் நீயறிவாய
என்றான் செழியன். இதுகேட்ட மங்கையவள்
நின்றாள், நிலைதளர்ந்தாள் நீருகுத்தாள் கண்களிலே!
அன்றுநான் அந்த அறிவிலார் தம்எதிரில்
"என்றன் மணவிழா இவ்விடத்தில் நானிகழ்த்திக்
காட்டேனேல் நானோர் கழுதைமேல் ஏறியே
நாட்டை வலம்வந்து நரிக்கென் உடல்தருவேன்?"
என்றதோர் சூளுரைத்தேன், என்துணையே உம்மைநம்பி!

என்றன்சூள் தோல்விபெறல் என்வாழ்வு தோல்வி பெறல்
அன்றோ அடலேறே! என்னை விடலாமோ?
நன்றோ? என் மேல்வைத்த அன்புதான் நஞ்சோ"
எனத்துடித்தாள்! கண்ட செழியன்," "இனிக்கும்
கனியே அழாதே! கடிது நடத தென்றான்.
விநோதை விழாவைத் தொடர்ந்திடவே, ஆட்கள்
அனைவர்க்கும் ஆணையிட்டாள் சென்று!










( 285 )




( 290 )




( 295 )





( 300 )




( 305 )





( 310 )




( 315 )

பிரிவு -- 50

(சேந்தனின் இல்லத்தில் மணவிழா நடைபெறுகிறது.
மக்கள் எதிர்க்கிறார்கள்.)

பஃறொடை பெண்பா

சேந்தனில்லம் நோக்கி மணமுரசும்; தேவைக்கு
வாய்ந்த பொருள்பலவும் வண்டிகளில் ஏற்றியே,
ஆட்கள் பலபேர் அணுகுவதைச் சேந்தனின்
வீட்டினைக் காப்போர்கள் கண்டார். விடோமென்றார்
முன்வாயில் தன்னை மிதித்தால்எம் துப்பாக்கி்
தன்வாயில் குண்டு தடுப்பரிதாம்!" என்றார்கள்.
"மன்னவனின் ஆணை!" என்று வந்தவர்கள் தாமுரைத்து
அன்னதொரு வீட்டை அணுகிவரக் கண்டவுடன்;
வேலனவன் விண்ணில் எழுப்பினான் வேட்டொன்று!
வாலடங்கி வண்டிகளை விட்டகன்றார் வந்தவர்கள்.

வேட்டொலி கேட்டபலர் சேந்தனின் வீடுவந்து
"நாட்டை அயலார்க்கு நாம்விடுதல் இல்லைஎனில்
விட்டகன்ற சேந்தனார் வீட்டைஅய லார்க்குவிடோம்
எட்டிநிற்க வேண்டாம் எதிர்வருக மன்னன்!" என்றார்.
இவ்வாறு சொல்லுகையில் இன்னும் பலரோடும்
அவ்வேலைக் காரர் அவரெதிரில் வந்து நின்று;
"மன்னவனின் ஆணை மறுக்கின் றீர், தீங்கடைவீர்
இன்னும்ஒரு நாழிகையில் இங்கு மணவிழா
நன்றுதொடங்க வருதல் நலம்!" என்றார்.
கேட்டார்கள் காவலர்கள். 'கீழ்மைச் செயலுடையீர்
மூட்டாதிர் இங்கே முழுச்சினத்தீ. போய்விடுங்கள்.
அந்த விநோதை அனுப்பினால் உம்மைஎனில்,
எந்தவகை நீங்களும் இங்குவர ஒப்பினீர்?
நீவிர் தலைவரன்றோ? நீள்நாட்டின் மக்களன்றோ?
மாவீரன் செத்தான்; வழிகின்ற கண்ணீரும்
நின்றபா டில்லை! நினைவு மறந்ததில்லை.
இன்றிந்த வீட்டில் விழாமகிழ எண்ணும்
விநோதை எங்கே? அன்னவளின் வேந்தன் எங்கே? மற்றும்
கனவுலகில் நாடாளக் காணும் செழியனெங்கே?
மேலும் அவர்கள் பெரும்படையின் வீரரெங்கே?

ஆறு துறையும் அழிந்துபடல் கண்டிருந்தும்
ஊறுபடு மக்கள் உயிர்விடுதல் கண்டிருந்தும்
நல்ல குறிஞ்சி நலங்கெடுதல் கண்டிருந்தும்
செல்வம் அனைத்தும் சிலர்சுரண்டக் கண்டிருந்தும்
வாடல் தவிர்க்காமல், வஞ்சியின்பால் கெஞ்சிக்கூத்
தாடல்என்ன? பாடலென்ன அன்புடையீர்!'' என்றந்த
வேலன் உரைக்க; விநோதையின் ஆட்களெல்லாம்
வேலர்கள் ஆகிவந்த வேலையையும் விட்டு,
-------------------------------------------------
"விழாநடத்த என்றிந்த வீட்டிலேஎந்த
உழாக்கலப்பை வந்தாலும் ஒரடியில் சாகடிப்போம்!
என்று முழங்கி, இருதோளும் தாம்தட்டி,
நின்றார்! கடமை நினைந்து.










( 320 )




( 325 )





( 330 )




( 335 )




( 340 )




( 345 )





( 350 )





( 355 )