பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

பதிகம்

இயல் 1

மலைநாட்டு நெடுவேள்குன் றத்தின் வேங்கை
மரநிழலில் கண்ணகிதன் வந்து நின்று
கலகலெனக் கண்ணீரால் அருவி செய்து
குறவர்களின் மனமதுவும் கரையச் செய்தாள்!
'கொலைசெய்யப் பட்டான்என் கணவன் கண்டீர்
குற்றமொன்றும் செய்தறியான்; குன்றத் தோரே!
இலைஉலகில் பருவுடல்தான் எனினும் அன்னோன்
என்னுள்ளதத்து உள்ளிருத்தல் காணுவீரோ'!

'முலைதோன்றி முற்றாமுன் தொட்டுச் சென்றான்
முறையில்லா ளிடம்கிடந்தான், இறுதி யாய்என்
தலைவாயி லிற்கண்டேன் தாவ லானேன்;
தன்வறுமை கூறினான், என்செய் வேன்நான்!
கலைச்செல்வி மாதவியின் முத்தம் வாங்கக்
கைப்பொருள்கேட் டான்போலும் என்றே எண்ணி
நலம்பெய்த என்சிலம்பு தரஇசைந்தேன்'
'நாமிருவர் இன்புற்று வாழ்வோம்' என்றான்.

மதுரையிலே வாணிகமே புரிவோம்; நீயும்
வாராயோ என அழைக்க விரைந்து சென்றேன்
இதன்பின்னர் என்காதல் நோய்மருந்தை
இருதுண்டாய்க் கண்டவள் நான்; வாழேன் என்றாள்!
எதிரேறும் இளங்கொடி தான் கொழுகொம் பற்றே
விழந்ததையும் இறந்ததையும் கண்டு ணர்ந்தே
அதிர்ந்தஉளத் தோராகிக் கண்ணீர் மல்க
அறஞ்செய்து புறஞ்சென்றார் குன்றவாணர்.





( 5 )





( 10 )




( 15 )





( 20 )



இயல் 2

குன்றத்துக் குறவரெலாம் கைகள் கூப்பிக்
கோமான்நின் திறல்வாழ்க! செங்கோல் வாழ்க!
என்றைக்கும் தமிழ்வாழ்க என்று வாழ்த்த
'எல்லீரும் நலஞ்சார வாழ்கின்றீரோ ?
இன்றுங்கள் முகத்திலொரு புதுமை என்ன
என்றசெங் குட்டுவன்பால் குன்ற வாணர்
'ஒன்றுண்டே ஒன்றுண்டே உலகுக்கெல்லாம்
உணர்வளிப்ப தொன்றுண்டென்' றுரைக்க லானார்,

ஆடலுற்ற பெண்கட்குத் தோற்றுப் போன
அழகான பச்சைமயில் எதிரிற் கண்ட
காடுபெற்று தீயில்விழும் வேள்குன் றத்தில்
கண்ணகிதான் கோவலனை உள்ளத் தேந்தி
வீடுபெற்ற தைமன்னன் திருமுன் வைத்தோம்
மெய்ம்மைஇது வென்றுரைக்க உயர்க ருத்தில்
ஈடுபட்டு உள்ளத்தானாகிமன்னன்
இன்னுமுள வரலாற்றை அறியச் சென்றான்

அவ்வாறு குட்டவன்சென்றிடஇளங்கோ
அடிகளிடத் தும்சொல்லக் குன்ற வாணர்
செவ்வையுறு குணவாயிற் கோட்டம் நோக்கிச்
சீரூரில் உள்ளவர்கள் அனைவ ரோடும்
பெய்வளையின் கோவலனின் செய்தி ஏந்திப்
பேருளத்திற் பெறுஞ்செய்தி ஆவல் ஏந்தி
எவ்வாறு மலையருவி செலும்? அவ்வாறே
ஈரமலைச் சாரல்கடந்தேகினார்கள்

( 25 )




( 30 )





( 35 )




( 40 )




( 45 )

இயல் 3

குன்றத்துக் குறவரெலாம் வழிந டந்து
குணவாயிற் கோட்டத்தைச் சேர்ந்து - இளங்கோ
என்றுரைக்கும் அடிகளிடம் நெடுவேள் குன்றில்
இரண்டுள்ளம் ஒன்றிலொன்று இணைந்த வண்ணம்
சென்றனவே! கோவலனை ஏந்தும் நெஞ்சச்
சேயிழையாள் கண்ணகியைப் பெற்ற தான
நான்றான வீட்டுலகம் இன்று பெற்ற
நற்புகழை முன்பெற்றதில்லை என்றார்.

அந்நேரம் செங்குட்டு வன்பாற் சென்றே
அடிகளிடம் வந்திருந்த சாத்த னாரும்
முன்நிகழ்ந்த கண்ணகியின் செய்தி யெல்லாம்
முறையாகக் கேள்வியுற்ற படியே சொல்ல
இந்நிகழ்வைக் காப்பியமாய் இயற்ற வோநான்?
எனக்கோட்டார் அடிகளார்! "நன்று நன்று
முந்நாடு பற்றியதாம் அதுமுடிக்கும்
முழுத்தகுதி நுமக்கென்றார சாத்தனாரும்

புலப்பெரியார் சாத்தனார் இருந்து கேட்டார்
புரைதீர்த்த அடிகளார் உரைத்தார்! அந்தச்
சிலப்பதிகா ரப்பருநூல் எனை அழைத்துத்
தனித்தமிழில் சிலபாட்டால் அடிகள் உள்ளம்
கலப்பற்ற பசுப்பாலே யாக மக்கள்
கவிந்துண்ணத் தருகஎனச் சொன்ன தாலே
சொலப்புகுந்தேன் என் தமிழர் இருந்து கேட்பார்
தூயதமிழ்ச் சுவைசுண்டு வாழ்வார் நன்றே!    


( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )

புகார் காண்டம்

இயல் 4

வரம்பற்ற செல்வத்தான் வாய்மை மிக்கான்
மாசாத்து வான்உரைப்பான் "பெரியீர்! என்றன்
திருமகனாம் கோவலற்கு மாநாய் கர்தம்
செல்வியாம் கண்ணகியைக் கொடுப்ப தற்குப்
பெருமனது கொள்கின்றார் மகன்ம ணந்தால்
பெருமைஎன் கின்றேன்நான் ஆத லாலே
திருமணத்தை முடித்துவைப்பீர என்று சொல்லச்
சேந்தனார் எழுந்திருந்து செப்பலுற்றார்.

செந்தமிழ்நான் மறைமுறையும் செத்த தேயோ?
செம்மலுளம் மங்கயைளம் ஒன்று பட்டால்
அந்நிலைதான் மணமென்பார் அதனை விட்டே
அப்பன்மார் ஒப்புவதால் ஆவ தென்ன?
தந்தைதரப் படும்பொருளா மங்கை நல்லாள்?
தகுவதன்றே தகுவதன்றே என்று சொன்னார்
வந்திருந்த ஆரியனும் நடுநடுங்கி
வாய்திறந்து தமிழ்குலைக்கத் தொடங்கலானான்

சாகுமுன்வி வாஹத்தை நடத்திக் கண்ணால்
தரிசிக்க வேணுமென்று நாய்கர் சொன்னார்
ஆகாகா எண்றேன்நான் ஆரியர்கள்
அப்பன்மார் உடம்பட்டாள் விவாஹம் செய்வாள்.
ஆகாது த்ரமிளர்க்கே இவ்வி வாஹம்!
ஆணதிணாள் எணை அளைத்தார் நாணும் வந்தேன்!
போகாயோ என்றுரைத்தாள் போகிண் றேணே
புன்னாக்க வேண்டாம்என் உடம்பை என்றான்



( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )

இயல் 5

கண்ணகிஎன் றொருபெண்ணை மணப்பாய் என்றேன்,
கட்டளையை என்மகனும் ஒப்பி னான்இவ்
வண்ணாந்தான் திருமணத்தை முடித்து வைப்போன்
ஆரியனே ஆதலினால் அவனை வைத்தேன்,
கண்ணிருக்கும் போதேநான் காண வேண்டும்
காளையுடன் பாவையினை மணவ றைக்குள்
எண்ணநிறைவேற்றிவைப்பீரெனக்கும் பிட்டான்!
மாசாத்து வான்சொல்லை ஏற்றார் ஊரார்!

ஆயினுமச் சேந்தனார் எழுந்தி ருந்தார்
அத்தனையும் ஆரியமாய் இருக்கவேண்டாம்
தீயவிளை வுண்டாகும் ஆத லாலே
செந்தமிழால் அவையத்தால் வாழ்ந்த லன்றி
நாயைப்போல் குரைப்பதனால் நம்பால் வேண்டாம்!
நரியைப்போல் ஊளையிடல் நம்பால் வேண்டாம்!
நீயென்ன சொல்லுகின்றாய் என்று கேட்க
நின்றிருந்த ஆரியனும் நிகழ்த்தலானான்.

மந்த்ரங்கள் ஆரியத்தால் செய்ய வேண்டும்
மட்டுமுள்ள சடங்குகளும் அப்ப டித்தான்
பிந்திஅந்த வதூவரரை ஒன்று சேர்க்கப்
பெரியதொரு சடங்குண்டே! மந்த்ர முண்டே
அந்தஎலாம் செய்யத்தான் வேண்டும் ஆனால்
பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும்
எந்தமட்டும் குடுக்கனுமோ குடுக்கவேனும்
என்றுரைத்தான் எல்லாரும் சிரிப்பில் ஆழ்ந்தார்




( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )

இயல் 6

சோடித்த யானையின்மேற் பொன்னம் பாரி
தூக்கிஅதில் மாநாய்கன் பாக்கி யத்தை
ஈடில்மா சாத்துவான் இளங்க ளிற்றை
இழையாலும் பட்டாலும் பூக்க ளாலும்
மூடியுடல் மூடாத இருமுகங்கள்
முத்துநிலா பொற்சுடரே எனவிளங்க
நாடிநகர் வலம்புரிந்தார் பல்லியங்கள்
நாற்றிசையும் அமிழ்தென்று பாய்ச்சு வித்தார்

ஆடிக்கொண் டேசென்றார் அழகு மாதர்
அசைந்துகொண் டிருந்ததுவே மக்கள் வெள்ளம்!
பாடிக்கொண் டேசென்றார் பழந்த மிழ்ப்பண்!
பறந்தனவே புலிக்கொடிகள் வான ளாவிப்
பீடுடைய ஓரறிஞன் இங்குக் காணும்
பெருங்கற்புக் கண்ணகிதான் கோவலன்தான்
நாடுடையீர்! இந்நாளே மணங்காண்பார்கள்
நன்மணத்தை வாழ்த்திடவே வருவீரென்பான்!

மணிக்குவியல் மீதிலொரு மலர்முகத்தில்
வந்துவந்து வழுக்கிவிழும் இரண்டு கண்கள்
அணித்திருந்து பார்த்தவர்கள் 'அன்புளங்கள்
அணைந்துவரும் நிலைஇதுவாம்' எனவி யப்பார்!
பணித்திடினும் பணிவல்லார் இயற்ற ஒண்ணாப்
பாவைஒன்றும் வீரம்ஒன்றும் பெண்மாப் பிள்ளை!
மணக்கின்றார் வாழியவே என்பார் கண்டோர்;
மணமக்கள் நகர்சுற்றி இல்லம் சேர்ந்தார்.





( 125 )





( 130 )




( 135 )





( 140 )


இயல் 7

மணம் நடக்கும் மணிவீடும் பல்லியத்தால்
மணமுரசால் பூமழையால் வான்வ ரைக்கும்
இணைந்த பெரும் பந்தரினால் முத்துத் தொங்கல்
இனியநறும் பூத்தொங்கல் கமுகு வாழை
அணைந்ததனால் நகர்நடுவில் அழகின் காடே
அணைவாரின் கண்கவர்ந்தே மனம்கவர்ந்தே
இணையற்ற தாயிற்று! நாட்டு மக்கள்,
ஏந்திழைமா ரோடுவரத் தொடங்கினார்கள்!

மாசாத்து வானோடு மனையும் மற்றும்
மாநாய்க னோடுதன் மனையும் ஆகத்
தேசுற்ற மணவீட்டின் வாயில் முன்னே
தெருநோக்கி வருவாரின் வரவு நோக்கிப்
பூசற்கு நறுந்தேய்வும் பூணத் தாரும்
போடற்கு நறுஞ்சுருளும் வணங்கக் கையும்
பேசற்குச் செந்தமிழும் முற்படுத்திப்
பின்பாரார்; நின்றிருந்தார் அன்பார்ந்தாராய்!

தெருமறையத் தெளித்திருந்த பசுங்கோரைப்புல்
சேவடியும் பூவடியும் மேல்வருங்கால்
சரசரெனும்! பூவடிகள் சிலம்பு பாடும்!
தத்தும்பொற் குத்துவிளக் காம்இ ளைஞர்
விரைந்தோட மார்பணிகள் கணக ணென்னும்!
வெறுவெளியில் பெருகுபுனல் மணிவெள் ளம்போல்
அரிவையுடன் அழகன்என நாட்டு மக்கள்
அனைவருமே மணவீட்டை அடைகின்றார்கள்.

( 145 )




( 150 )





( 155 )




( 160 )





( 165 )

இயல் 8

அன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன்
ஆடுமயில் அறிவழகன் அன்னம் நல்லான்
தென்னழகு தமிழப்பன் முத்து முல்லை
தேன்மொழியாள் மறவர்மணி திங்கள் செல்வன்
பொன்னோடை பொன்னப்பன் கிள்ளை சேரன்
புத்தமுது தமிழரசு தங்கம் சோழன்
இன்பத்தேன் இளவழகன் ஒளவை வேந்தன்
இருங்கோவேள் வயவேங்கை எல்லி நல்லி,

திருவிளக்கு மதியழகன் நிலவு செங்கோல்
தேனருவி அருளப்பன் தோகை பாரி
மருக்கொழுந்து பொன்வண்ணன் அல்லி வள்ளல்
மல்லிகை மாவளவன் காவேரி சிங்கம்
கரும்புபெருந் தகைமுத்தப் பந்தல் சேந்தன்
கயற்கண்ணி காத்தமுத்து வீரி மன்னன்
முருகாத்தாள் புகழேந்தி தேனி மானன்
முத்தம்மா தமிழ்வாணன் தாயார் வேலன்

அழகம்மை ஆளவந்தான் வேனில் தென்றல்
ஆரமுது தமிழத்தொண்டன் இலந்தை பொன்வேல்
மழைமுத்து மன்னர்மன்னன் தத்தை எட்டி
மணியம்மை பொன்முடிதே னாறு தென்னன்
மொழியரசி இளந்திரையன் புன்னை நன்னன்
முத்துநகை மாவரசு முதலியோரை
அழைத்தார்கள் வருகென்றே நலஞ்செய் தார்கள்
அணிஅணியாய் அனைவருமே உட்சென்றார்கள்


( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இயல் 9

வாழியவே மணமக்கள் என்று சான்றோர்
வாழ்த்தியபின் வாழ்வரசி மாரும் மற்றும்
வாழ்விலுயர் பெரியோரும் அமளி நோக்கி
கோவலனைக் கண்ணகியை வருக என்றார்
நாழிகையின் அரைக்காலிற் முக்காற் பங்கும்
நஞ்சென்பார் பஞ்சணைக்கா வரமறுப்பார்?
யாழ்ஒன்றும் இசைஒன்றும் அமளி ஏற
எல்லாரும் வாழ்த்துரைத்துத் திரும்பலானார்?

திருந்துண்ட மணமக்கள் இருவ ரோடும்
சேர்ந்துண்ட நாட்டுமக்கள் தேய்வு பூசி
வருந்துண்ட அடைகாயின் சுருளை மென்று
வாய்நிறைத்து முகமுயர்த்தி இதழ்விள் ளாமல்
விருந்துண்ட சிறப்பினையும் விரிக்கலானார்
விழும்எச்சில் கண்டவர்கள் சிரிக்கலானார்
0மருந்துண்டேன் விருந்துண்கி லேன்நான் என்றோன்
மலைவாழை மட்டும்நூ றுண்டேன் என்றான்

கறிவகையும் பண்ணியத்து வகையும் நல்ல
கனிவகையும் என்நாவைக் கவர்ந்த தாலே
நிறைமூக்கைப் பிடிக்கநான் உண்டு விட்டேன்
நிலைகடுமை என்றுமதி அழகன் சொன்னான்
நிறைவயிறு குறைவதற்கு நீள்துரும்பை
நீஉள்ளே செலுத்தென்று தென்றல் சொல்லச்
சிறுதுரும்பு செல்லஇடம் இருந்தால் வட்டில்
தேம்பாகை விட்டிரேன் என்றான் அன்னோன்.



( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )

இயல் 10

கடைத்தெருவில் நடுத்தெருவில் காட்டில் மேட்டில்
கால்நடையால் ஊர்திகளால் செல்வோர் யாரும்
படைத்திட்ட உணவுகளைப் புகழலானார்
பாங்கெல்லாம் புதுப்பாங்கென்பான்ஒருத்தன்

வடையினிலே நெய்ஒழுகிற் றென்றான் திண்ணன்
நெய்யினிலே வடைஒழுகிற்றென்றான் வேங்கை!
குடத்தளவு முக்கனியா என்றான் முத்தன்!
குண்டான்தே னாஅதற்கே என்றான் எட்டி!

இந்நாட்டு விருந்துமுறை மாற வேண்டும்
இங்குண்டோம் வீட்டுக்கும் எடுத்துச் சென்று
பின்னாளும் வைத்துண்போம் என்ப தில்லை!
பேராசை கொண்டிவ்வாறுரைத்தான் பொன்னன்!
பின்னாளில் பிறர்வீடு செல்க என்று
பெரியண்ணன் சொல்லவே பொன்னன், "ஏடா!
இந்நாட்டில் எவன்வீட்டில் புத்துருக்கில்
இலைசோறு, கறியெல்லாம் மிதக்கும என்றான்!

அவரைக்காய் உப்புநெய் கடுகு தேங்காய்
ஐம்பொருளைக் கூட்டமுதில் அறியலானேன்
அவற்றோடு மற்றொன்றும் உண்டு போலும்!
எனினுமதன் பேரறியேன் என்றான் ஆண்டான்!
அவைஐந்தின் கூட்டத்தால் மற்றொன்றுண்டாம்;
அதன் பெயர்தான் உயிர்ச்சுவைஎன்றுரைத்தான் தேவன்
எவைஎவையோ பேசுவார் அவற்றிலெல்லாம்
இன்விருந்தைப் புகழாத எழுத்தே இல்லை!



( 220 )






( 225 )




( 230 )




( 235 )




( 240 )