பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 11

முகில் தழுவும் எழுநிலைமாடத்துக் கட்டில்
முழுநிலவு முகத்தாளை அழகன் தான்தன்
அகம்தழுவிச் சிறப்புறுங்கால் சாளரத்தால்
அசைந்துவரும் நறுந்தென்றல் இனிமை வார்க்க
மகிழ்ந்தவராய்க் காதல்மிகப் பட்டாராகி
மாடத்தின் நிலாமுற்றும் வந்து சேர்ந்தார்
தகைசிரித்தான் நாணமுற்றி ருந்தாள் மங்கை!
தடங்கைகள் நீட்டினான் அவற்றில் சாய்ந்தாள்!

தழுவும்உடற் கூட்டத்தில் தனிமை காணார்
தமைஇழந்தார்; இன்பத்தின் எல்லை கண்டார்!
முழுநிலவைத் தன்இடது கையால் ஏந்தி
மூடவரும் சுரிகுழலை விலக்கி ஆளன்,
அழகுக்கோர் இலக்கணமும் நீயோ கண்ணே!
அன்புசெய வாய்ந்தஇலக் கியமோ! என்றன்
அழல்நீக்கும் குளிர்நிழலே இன்பப் பாவாய்!
அனைத்தும்பெற்றேனுன்னைப் பெற்றதாலே!

என்வாழ்வில் நிறைஅமிழ்தே நினைக்கும் தோறும்
இனிப்பவளே! வாய்திறந்து பேசுந் தோறும்
தென்தமிழின் நறுஞ்சாறாய்த் தித்திப் போளே!
தீண்டுதொறும் ஐம்புலனும் இன்பில் ஆழ்த்தும்
பொன்னே! நன் முத்தே! என் பூவே! என்பான்!
புதிதொன்று பழைதாக மேலும், மேலும்
இன்பத்தில் ஆழ்ந்திடுவான் மீள்வான் பின்னும்
இன்பத்தில் ஆழ்ந்திடுவான் கோவலன்தான்!




( 5 )





( 10 )




( 15 )





( 20 )

இயல் 12

பாட்டொன்று கேட்டுப்போ என்று சொல்லிப்
பாவையினை அழைத்திட்ட கோவலற்குக்
கூட்டொன்று விருந்தினர்க்குப் பண்ணு கின்றேன்
கூவாதீர் என்றுரைத்தாள். அடிஎன் பாட்டைக்
கேட்டலினும், விருந்தினர்க்குக் கூட்டுச் செய்தல்
இனியதோ கிளத்தென்றான் கோவலன்தான்!
பாட்டுக்கும் நம்காதல் கூட்டி னுக்கும்
பாகற்காய்க் கூட்டுமுறை இனிதே என்றாள்

நூற்றுக்கு மேற்பட்டோர் பகல்விருந்தாய்
நோக்குவார் மனமகிழ வருகை தந்தார்
ஆற்றுநன் ஆற்றிஅவர் அமர்வதற்கும்
ஆடற்கும் உதவுதற்கும் பாடுதற்கும்
காற்றுக்கும் காட்சிக்கும் வகைபுரிந்து
கலந்துண்ண வாரீரோ எனஅழைக்கச்
சோற்றுக்கும் சாற்றுக்கும் கறிக்கும் எண்ணத்
தூய்மைக்கும் தாய்மைக்கும் வியந்தார், உண்டார்!

சாப்பிட்டார் கமழ்தேய்வு நிறக்கப் பூசிக்
கண்மலர்த்தேன் மழைநனைந்தே அடைக்காய் மென்றே
வாய்ப்புக்குப் பற்பலவும் கேட்டு நாட்டு
வளம்பேசிச் செந்தமிழ்நூல் இன்பந் துய்த்து
மாப்பட்டு மெத்தையிலும் சாய்ந்திருக்க
வய்ப்புற்ற கட்டிவிலும் அமைந்தார் தம்மில்
கூப்பிட்டாள் ஒருமுதியோன் கால்நோய் என்றே
குறுக்கோடிக் கண்ணகிதான் கால்பிடித்தாள்!

( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )

இயல் 13

கால்பிடித்த கண்ணகியின் கைப்பிடித்தே,
கண்ணகிக்கு மாமியவள் கோவலன்தாய்
தோல்பிடித்தும் விதைமுதிராப் பயற்றங் காயைத்
துவட்டுமுறை எவண்கற்றாய்? தாயூட்டிட்ட
பால்பிடித்த கறைமாறா இதழினாளே!
பாங்கடிநின் மனையறந்தான் மகிழ்ச்சி என்றாள்!
சேல்பிடித்து வைத்தனைய விழிவியக்கத்
திடுக்கிட்டாள் கண்ணகிதான் பறந்தாள் ஓர்பால்

அத்தான்நும் அம்மாஎன் அருமை மாமி!
அதோகாண்பீர்! விருந்துண்ட மகளிர் தம்மில்
முத்தொன்றைச் சிப்பிமறைத்ததுபோல் நன்கு
முக்காடு முகமறைக்க அமர்ந்துண் டாரே!
அத்தகையோர் இத்தகையோர் எனக்காண் கில்லோம்
அறையினின்று கால்வலியாம் என்றனழக்க
எத்தாயோ என்படுமோ என்று சென்றேன்
இருகாலைத் தொட்டேன்என் இருகை தொட்டார்

என்றேகண்ணகிகூற அதேநேரத்தில்
எதிர்வந்தாள் கோவலனின் அன்னை தானும்!
சென்றுவணங் கினர்இருவர் அன்பால் அள்ளித்
தென்னகத்துப் பண்பாட்டுப் பொன்வி ளக்கைக்
குன்றிலிட்டீர்! நன்றாக வாழ்க நீவீர்
கொண்டுவந்தேன் பல்பொருள்கள் கொள்க கொள்க
என்றுரைத்தாள்! அங்கிருவர் எதிரிற் கண்டார்
இருநூவண்டிகளில் பல்பொருள்கள்!


( 50 )




( 55 )





( 60 )






( 65 )




( 70 )

இயல் 14

காவிரிப்பூம் பட்டினத்தின் கண்ணும் காதும்
கலைவெறிதான் தலைக்கேற நிலைகு லைந்து
மீவிரித்த வளைவுக்கும் மணிமே டைக்கும்
நடுவினிலே மின்னலோ கொடியோ சான்றோர்
பாவிரித்த இலக்கணமோ குழலோ யாழோ
பைந்தமிழோ நன்னிலவோ யாதோ என்று
நாவிரிக்க மாதவிதான் ஆடுகின்றாள்
நானிலமே மகிழ்ச்சிக்கூத்தாட ஆட !

முழவினோன் முழவின்மேல் ஒற்றும் கையும்
மொய்குழலாள் அடைவுபெற மிதிக்கும் காலும்
வழிஒத்தி ருக்குமிது கூர்ந்து காணின்
வையத்துக் கொருபுதுமை ஆகும் என்று
பிழைபாட்டு வடவர்களும் பேச லானார்!
பிறநாட்டின் அறிஞரெலாம் பிற்றை நாளும்
அழகிருந்த தமிழ்நாட்டின் ஆடற் பாங்கை
அறிவதெனில் அருமையே எனப்புகன்றார்.

கருவிழிகள் கடையோடி விரலின் காதற்
கருத்துரைத்துச் செவ்விதழில் மின்னக் கண்டோர்
இருதோளும் சிற்றிடையும் அடித்த பூப்பந்
தெழில்மார்பின் மேற்குலுங்கும் புதுமை காணார்
இருந்தபடி வலம்புரிதான் இருக்க மேலே
இடம்வலமாய் ஒருநிலவு மிதக்கக் கண்டோர்
சுரும்பிருந்து பாடுமலர்ப் பின்னற் பாம்பு
துடியிடையைச் சுற்றுவது காணுகில்லார்.




( 75 )





( 80 )




( 85 )





( 90 )




( 95 )

இயல் 15

இயலிசைநா டகமூன்றும் இந்தா என்றே
இவ்வுலகு கண்டுகேட் டுணர்ந்து வக்கக்
கயல்விழியால் மலர்வாயால் சுவடிக் காலால்
கடிதீந்த திறம்அரிது நாம்இ தன்முன்
குயில்கேட்டோம் கிளிஅறிந்தோம் மயிலைப் பார்த்தோம்!
கூற்றும்பாட் டும்கூத்தும் ஒருங்கு காணோம்
அயலார்பால் கண்டவெலாம் சுண்டைக் காய்கள்
அரிவயைால் பெற்றதுதேன் வாழை யாகும்!

இவ்வாறு புகழ்ந்தானாய் மன்னர் மன்னன்
இந்தாடி என்கண்ணே பச்சை மாலை
செவ்விதின்நீ தலைக்கோலி ஆக! மேலும்
தேடரும்பொன் ஆயிரத்தெட் டுக்க ழஞ்சே
எவ்வாறும் விலைபெறும்என் றான்அ ளித்தான்
இருந்தவர்கள் எல்லாரும் மகிழ்ந்தா ராகி
அவ்வளவும் தகும்தகும்என்றுரைத்தார் ஆங்கே
மற்றவரும் தகும்பரிசில் அடைந்து வந்தார்!





( 100 )





( 105 )




( 110 )

இயல் 16

கடைஓடி நொடிமீளும் கண்ணென்ன கண்ணோ!
காப்பியத்தின் பொருள்முடிக்கும் விரலென்ன விரலோ!
துடைஅரங்க மின்னிநெளி இடைஎன்ன இடையோ!
தூண்டாத மணிவிளக்கின் ஒளிப்பிழம்பு காற்றால்
அடைவதென அடைவுபெறும் உடலென்ன உடலோ!
ஆடிக்கொண்டும்பாடிக் கொண்டுமிருந் தவளை
விடைகொடுத்துப் பரிசளித்து நம்வேந்தர் வேந்தன்
விரைந்தனுப்பினான் அவளும் செல்லுகின்றாள் அந்தோ!
எனக்கூறி மனம்செல்லக் கண்களெலாம் செல்ல
இன்பத்தை விடாதுபற்றும் இயற்கைஉயிர் செல்ல
இடம்தொடரச் செல்கின்ற மாதவியி னோடே,
எல்லாரும் செல்லலுற்றார் ஆயிரங்கண் அன்னாள்
இனியதேன் இதழினிலே ஒருங்கோடி மொய்க்கும்!
இரண்டாயி ரங்கண்கள் சண்ணீலத் தேனில்
உனக்கெனக்கென் றேஓடி மொய்க்கும் மிகு மக்கள்
ஒருகடலே; மாதவிதான் நடுவில்ஒரு புள்ளி!

அவள்முதுகின் பின்னிருந்த ஓர் ஆள் கழுத்தை
அணுகிஅவள் மலர்முகத்தை உற்றுப்பார்க் கின்றான்
துவளுகின்ற பின்னலினைத் தொடுகின்றான் ஒருவன்
சுடர்ப்பொன்னோ மின்னலோ என்றுடலை ஒருவன்
கவலையுடன் பார்த்தபடி நடக்கின்றான் மற்றும்
கரத்துறுத்தும் காதலால் வஞ்சியவள் முதுகை
அவுக்கென்று தொட்டுநக்கிச் சுவைக்கின்றான் ஒருவன்
அவள் ஆடை மேற்பறக்கச் சோலைஎன்றான் ஒருவன்




( 115 )




( 120 )




( 125 )





( 130 )




( 135 )

இயல் 17

நகரமக்கள் நெருக்கத்தில் மாத விக்கு
நலிவுவரா திருக்கவே பல்லோர் சேர்ந்து
தகுநெடுங்கை கோத்துமா வட்டம் ஆக்கித்
தையலினை நடுவினிலே நடத்திச் சென்றார்
திகழ்தருமோர் தனைச்சூழ்ந்த ஆட வர்கள்
முகவரிசை மேற்றனது விழிசெலுத்தும்
வேளையொரு காளைதன் நெஞ்சைத் தொட்டான்!

காவலரும் கடன்கேட்கும் செல்வர் பிள்ளை;
கட்டழகன்; கண்ணகியை மணந்த செம்மல்;
பாவலரும் பொருள் கேட்கும் தமிழ்வல் லாளன்
பலரோடு மாதவியின் ஆடல் காணும்
ஆவலினால் அங்குவந்தோன் வெளியிற் சென்ற
அன்னாளின் பின்சென்றான் கடைக்கண் பிச்சை
ஈவாளா எனக்கிடந்தான் ஈந்தாள்; ஏற்றான்
இரண்டுள்ளத் திறப்புவிழா இதுவாம் என்க.

கண்ணைக்கண் மனத்தைமனம் கன்னம் வைக்கும்
கதைமுடிந்து போனவுடன் மங்கை சார்பில்
நண்ணிஒரு கூனிதான் ''ஒன்று கேட்பீர்!
நம்மன்னர் உவந்தளித்த நன்மா லைக்கே
உண்ணசையால் ஆயிரத்தெண் கழஞ்சு தகந்தோன்
ஓவியத்தை மாதவியைப் பெறுக'' என்றாள்!
ஒண்ணுதலும் அவன்தோளில் மாலை போட்டாள்;
உவப்போடு கோவலன்பொன் ஈந்தான் கையில்!

ஓடுகின்றார் ஓடுகின்றார் இருவர் தாமும்!
உடனிருந்த கூட்டத்தார் ஏமாந் தார்கள்!
வாடுகின்றார் அவர்களிலே சில்லோர்! சில்லோர்
மகிழ்கின்றார் அவ்விருவர் மகிழ்ச்சி கண்டு,
பாடுகின்றார் சில்லோர்அப் பாவையாட்கும்
பைந்தமிழ்ச் செம்மலுக்கும் பொருத்தம் என்றே!
ஓடுகின்றார்; மாதவியின் வீட்டுக்கூட்டின்
உள்ளடைந்தாள் மாதவிகோவலன்அன்றில்கள்!





( 140 )





( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )

இயல் 18

உட்புகுந்து கூடத்தின் நடுவில் நின்றே
ஒண்டோடியின் முகம்பார்த்தான்; வீட்டைப் பார்த்தான்
சுட்டினான் பஞ்சணையின் அறையை! அன்னோன்
எட்டினான் பஞ்சணையை! உடன்ப றந்தாள்!
இருபெருக்கின் ஒருவெள்ளப் புனலே யானார்
கட்டிக்க ரும்படிஎ னத்தொ டங்கும்
கவிக்கிடையில் முகத்தில்முகம் கவிழ்க்க லானான்

புதுத்தேனில் ஊறவைத்த கனியு தட்டைப்
புகல்என்றான் கண்ணகியை மறந்தே போனான்!
எதிர்ப்பாரும் நட்பாரும் இலாத தான
இன்பஉல கிதுவென்றே அவள்தோள் சாய்ந்தான்
இதற்குத்தான் நான்பிறந்தேன் இவ்வை யத்தில்
என்பான்போல் தழூஉமார்பை விடாதி ருந்தான்
முதற்றொடங்கும் முத்தமழை கடைசி யூழி
முடியுமட்டும் முடியாது போலும் அங்கே!

கைந்நொடியை ஓரிலக்கம் பொன்னாற் போக்கிக்
கைப்பொருளைப் போக்கிவரும் நாளில் அன்னோன்
தன்அறையின் பஞ்சணையில் அவளின் தோளில்
சாய்ந்தபடி பலகணியால் தெருவிற் சென்ற
சின்னவனைக் கண்டிட்டான்; கோவ லன்தான்,
திடுக்கிட்டான்; உடலதிர்ச்சி உணர்ந்த மங்கை
என்னஎன்றாள்; என்போன்றான் துணைவி இன்றி
எவ்வாறு தனித்தும்உயிர் வாழ்ந்தான்?- என்றான்.




( 170 )





( 175 )




( 180 )





( 185 )

இயல் 19

காதற்பாட் டேயன்றிப் பிறபாட் டில்லை
கட்டிலிலே உண்பதன்றி இறங்கல் இல்லை
மோதல்வரக் காரணமே இருந்த தில்லை
முத்துநகை இதழுக்குள் மறைந்த தில்லை
ஈதலில்லை ஏற்றலில்லை இன்பப் பொய்கை
இறங்கினோர் கரையேறும் நினைப்பே இல்லை
ஈதில்லை என்பதில்லை கோவ லற்கே
இவளிருந்தாள் மாதவிக்கே அவனிருந்தான்

அந்நாளில் மாதவிநி லாமுற் றத்தில்
அன்பனிடம் இன்பமே நுகர்தல் போல
பன்மகளிர் மணாளர்தோள் ஒடுங்கு வார்கள்!
பாவைகண் ணகிமட்டும் கொழுந னின்றித்
தன்பாற்பொங் கலைஇழந்த உழவ னைப்போல்
தளர்வுற்றாள் பஞ்சணையிற் புரள லுற்றாள்
இன்கண்ணில் மைஎழுதாள் பொட்டும் வையாள்
இருண்டகுழல் நெய்யணியும் இன்றிச் சோர்வாள்

மங்கலத்தின் அணியன்றி அணிம றந்தாள்
வழக்கத்தால் செய்கின்ற ஒப்ப னைகள்
மங்கைதான் செய்தறியாள் செந்த மிழ்தான்
மாப்புலவர் இழப்பின்உயர் விழத்தல் போலே
எங்குமுள்ளார் தம்மிற்கண் ணகியே என்ன
இணைபிரிந்து சீரற்றார் பலரா னார்கள்
திங்கள்ஒன்றே குளிர்கொண்டும் அழகு கொண்டும்
சிலர்க்கல்லல் சிலர்க்குநலம் செயல்வியப்பே.

( 190 )




( 195 )





( 200 )




( 205 )





( 210 )

இயல் 20

பூவிரிந்து வானெங்கும் தேன்வி ரிந்து
பொன்விரிந்தாற் போலுநறும் பொடிவி ரிந்த
காவிரிதல் போலெங்கும் விரித லாலே
காவிரிஆ றென்றார்கள்; அதன்தொ டர்பால்
காவிரிப்பூம் பட்டினம்என் றேமுன் நாளில்
கவிவிரியும் நாவினோர் நகரைச் சொன்னார்;
மூவிரிநூற் றமிழ்வேந்தர் மூவருள்ளும்
முந்துபுகழ் மாவளவன் அதற்கு மன்னன்

காளைக்கு நாளெண்ணிக் காத்தி ருக்கும்
காதலிபோல், இனிப்பான பதநீர்த் தென்னம்
பாளைக்குக் காத்திருக்கும் ஊரார் போல்,அப்
பட்டினத்து வாழ்கின்ற மக்கள் யாரும்
வேளைக்கு வேளைஇதோ வந்த தென்று
விளம்புமொரு காவிரிவி ழாநெ ருங்க
நாளைக்கே என்றுமகிழ் கொண்டார், காலை
நடுப்பகல்; இராப்போது நகர்ந்த பின்னே,

பழாமரத்திற் பழுத்தஒரு மாம்ப ழம்போல்
பாசிபடர் குளத்தி லொரு தாம ரைபோல்
முழாக்கண்ணில் கையுற்ற வௌவடுப்போல்
மொய்த்தகருங் குழற்கிடையில் மகள்முகம்போல்
எழாஉளத்தும் மகிழ்ச்சிஎழ இருளின் நாப்பண்
எழுந்தஇள ஞாயிற்றின் ஒளியில் யாண்டும்
விழாப்பெருநாள்; காவிரிநற் றிருநாள் என்று
வேந்துமுரசானையின்மேல் அறைந்தான் வீரன்


( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )