பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 61

"இருவேமாய் இந்நகரிற் புகுந்தோம் அந்தோ!
ஏகலுற்றேன் இதைவிட்டுத் தனியள் ஆகத்
திரிகின்றேன்; வஞ்சிக்கே செல்வேன்; அன்பன்
திருப்புகழில் எனக்கும்இடம் தேடிக் கொள்வேன்!
எரியுண்ட மதுரையிலே வாயில் இல்லை.
என்னுடையான் தனைச்சேர வழியு மில்லை
பெருமகிழ்ச்சி உலவாத நாட்டில் யாரும்
பிறந்தாலும் இறந்தாலும் பெருமை இல்லை.

பிறந்தவர்கள் இறக்கும்வரை பெறுவ தெல்லாம்
பெருந்துன்பம் என்றாலும் பண்டு தொட்டே
சிறந்தொருவற் கொருத்திஒருத் திக்கொ ருத்தன்
எனவாழும் தென்னாட்டுத் தமிழர் யாரும்
பிறழ்ந்தறியா அறம்அன்பு வாய்மை கொண்டு
பேருலகில் வாழ்வாங்கு வாழ்வா ராயின்
பிறந்தவர்கள் பெருந்துன்பம் அடையார்; அன்னோர்
பிள்ளைகளும் துன்பமே பெறமாட்டார்கள்.

உலகுதொடங் கியநாளாய்த் தமிழ கத்தில்
உருப்பெற்ற ஒழுகலா றுகள்தாம் நன்றே
நிலைபெறலால் ஒழுக்கமெனல் இதுவாம் என்றே
நீணிலத்து மாந்தரெல்லாம் மேற்கொண் டார்கள்
இலகுமிவ் வொழுக்கந்தான் உயிரின் மேலாய்
எண்ணியே ஓம்பிடுக என்றார் தேவர்:
எலியானார் ஒழுக்கத்தால் புலிகள் ஆவர்
எளியாரும் வலியாரால் இறப்பதில்லை"





( 5 )





( 10 )




( 15 )





( 20 )

இயல் 62

மதுரையிலே தீமூளும் முன்பே தீய
மன்னவனின் மதுரையேன் என்ற கன்றார்.
இதுநன்றே என்றாராய்ச் சேர நாட்டை
எய்தினார் மகளிர்சிலர் மக்கள் சில்லோர்;
எதுநாடு? தீதாட்சி இன்மையாலே
அதுநாடே என்றுசிலர் சேர்ந்தார்; சில்லோர்
மிதித்தகிளை பிடித்தகிளை அற்றார் ஆகி
வீழ்ந்தார்கள் விலகிவாழ் ஆரியர்பால்;

குன்றேறி வாழ்ந்திடலாம் என்று சென்றோர்
குறுக்கினிலே திரும்பினார் தீயொ ழுக்கம்
ஒன்றேறும் நாகரிவர் என்று கண்டே!
ஓட்டாறு காட்டாறே எனினும் சில்லோர்;
சென்றேறிக் குடித்தனமும் செய்ய லானார்.
செந்தமிழர் சேருமிடம் காடோ மேடோ
நன்றேறும் என்றார்கள் போலும் சென்றார்;
நாடோறும் நன்றுழைப்பார் நன்றே காண்பார்;

தாயகத்தை விட்டகல எண்ணார் சில்லோர்,
தாயகத்தில் மூள்தணலும் நன்றே என்று
தீயகத்திற் புகுந்தார்கள்! தாய கந்தான்
தென்னாடு பொன்னடென் றோர்தீத் தப்பிப்
போயடைந்தார் சோணாடு சேர நாடு
புறம்போக்கும் மலைநாடு யாண்டும் நன்றே
தூயானைத் துறந்திடடுத் துயரில் மூழ்கித்
தோகையவள் என்ஆனாள் காண்போம் இங்கே!

( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45)

வஞ்சிக் காண்டம்

இயல் 63

கெண்டைவிழி ஊற்றுநீர் ஆறே ஆகக்
கிளிப்பேச்சும் அழுதழுதே ஒலிஇ ழக்கத்
தொண்டையினில் நீர்வற்றக் கால்க டுக்கச்
சுடுவெயிலும் படுகுழியும் வெள்ள நீரும்
கண்டையோ எனக்கதறிக் கதறித் தாண்டிக்
களைப்போடும் இளைப்போடும் சேர நாட்டில்
அண்டைநெடு வேள்குன்றின் வேங்கை நீழல்
அடிநின்றாள்; குன்றத்தூர் வருதல் கண்டாள்.

நெஞ்சத்தே வழிந்துவரும் துன்பச் செய்தி
நெடிதுரைத்தாள்; நின்றிருந்தாள் வீழ்ந்தி றந்தாள்
நஞ்சொத்த நடுக்கத்தை நன்னீர் ஒத்த
இரக்கத்தை நண்ணினோர் ஆகித் தென்னன்
வஞ்சத்தை வேண்மாளோடிருந்த சேர
மன்னவனாம் செங்குட்டுவன்பால் சொன்னார்
கொஞ்சத்தை அழுதபடி கேட்ட மன்னன்
கொள்ளாத ஆவலுற்றான் பிறவும் கேட்க

தொன்மதுரை ஆசிரியர் சாத்த னார்தாம்
தோன்றலொடு வீற்றிருந்தார் அறிவோம் என்று
முன்னடைந்த பிறவெல்லாம் கூறி நின்றார்;
முடிதாழாக் குட்டுவனும் முடிதாழ்ந் தான்!அம்
மன்னியவள் வாடாத முகம்வா டுற்றாள்;
மனமிரங்கி னார்இருவர் கண்ணீர் விட்டார்!
அன்புடையாய் உன்மனத்திற் பட்ட தென்ன
அறிவிப்பாய் எனக்கேட்டான் குட்டுவன்தான்.


( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )

இயல் 64

தனித்திருந்தான் தலைவனயல் வாழ்நா ளெல்லாம்
தன்னைத்தான் காத்துக்கொண் டாள்அ தன்பின்
இனிக்கவந்தே இல்லாமை சொல்லிக் கேட்டான்
எழிற்சிலம்பை! அளித்தேதன் அன்பு மாறா
மனத்தோடு மாமதுரை சென்றே வாய்த்த
மாப்பழிச் சொல் தீர்த்துமணந்தான்சீர் காத்தாள்;
அனைத்துலகும் புகழ்தமிழர் குடிச்சீர் காத்தாள்;
அல்லலெண்ணாள்; அவனிறந்தான் எனஇறந்தாள்.

ஒருநாளும் பெறத்தக்க இன்ப வாழ்வும்
பெற்றறியாப் பொற்பாவை தன்ம ணாளன்
ஒருநாளில் படுகொலைக்குள் ளாகத் துன்பம்
உன்றான்என் றாலும், அவன்பெற்ற தீச்சொல்
வருநாளும் நில்லாமல் விரைந்து சென்று
வழக்கிட்டுப் பாண்டியனைச் சிலம்பால் வென்ற
திருநானள வாழ்த்தாமல் இருந்த நாள்தான்
சிறுநாளே எனினும் அதுதீயநாளே

முற்கண்ட நாளிலெல்லாம் அரிது செய்த
மொய்குழலார் உருவெழுதி இயற்றும் தச்சுக்
கற்கண்டு பெற்றதுவே கற்பாம் என்று
கடல்கண்ட குமரிநா டியம்பும் உண்மை
பிற்கண்டோம் கண்ணகியின் அரிய செய்கை
பிழைகண்ட பிறநாட்டு மகளிர் காணத்
தெற்கண்டை வஞ்சியிலே வஞ்சியாளின்
திருவுருவக் கல்நாட்டல் நன்றே என்றாள்.



( 75 )




( 80 )





( 85 )






( 90 )




( 95 )

இயல் 65

மிடியிழுத்துக் கட்டிச்சாக் காட்டில் தள்ளி
வில்லிழுத்துக் கட்டித்தன் திறத்தால் மற்றக்
குடியிழுத்துக் கட்டித்தூய் ஆட்சி காட்டக்
கொடியிழுத்துக் கட்டியதென் னவனைச் சீறி
மடியிழுத்துக் கட்டித்தன் மார்பின் கச்சு
வாரிழுத்துக் கட்டியகண் ணகிசீர் வாழ்த்தும்
படியிழுத்துக் கட்டிடுவேன் உலகை என்றான்
பனையிழுத்துக் கட்டியபூந்தாரன் சேரன்

இல்ஒன்று வாழ்வின்பம் அளியான் சொல்லின்
எழுத்தொன்று தள்ளாத இளைய பெண்ணாள்
வெல்ஒன்று மாள்ஒன்று பாண்டி யன்பால்
விலைக்கொன்று போகாமற் றொருசி லம்பில்
எல்ஒன்று மாணிக்கம் காணக் காட்டி
இழுக்கொன்று காத்தாட்குக் கற்பின் தாய்க்குக்
கல்ஒன்று நாட்டெனும்உன் சொல்ஒவ் வொன்றின்
கால்ஒன்று கோடிபெறும் கழிவொன்றில்லை

தெள்ளிவைத்த தமிழினிலே நற்க ருத்தைத்
திருத்திவைத்த சொல்லாளே பொன்னா லாகிப்
புள்ளிவைத்த பசுந்தோகை மயிலே! நீதான்
புகழ்ந்துரைத்த கண்ணகியை மறவேன்; என்று
வெள்ளிவைத்த தேர்ப்படியிற் கால்வைத் தேதன்
வேண்மாளை வாணுதலை இன்ன மிழ்தை
அள்ளிவைத்துச் செலுத்தென்றான் கோயிலின்முன்
அணைத்துவைத்த படிபொன்னை இறக்கி வைத்தான்.





( 100 )





( 105 )




( 110 )





( 115 )

இயல் 66

இளங்கோவேண் மாள்தானும் அமைச்சனான
எழில்வில்லவன்கோதை சாத்தனாரும்

விளங்கோவ மணிமன்றில் தனிஇருந்தே
மென்கோவ லன்வாய்மை காக்கத் தென்னன்
உளங்கொள்ள வழக்குரைத்துச் சிலம்பால் வென்ற
உலகத்து மாதர்மணி ஆம்அவட்கே
வளங்கோயிற் பேரரசு "கல்லே கற்பு
வரலாறு பேசும்வகை உருவம் நாட்ட;

எண்ணிமுடித் தோமென்று குட்டுவன்தான்
இயம்பிமுடித் தான்கேட்ட மக்கள் மேலோர்
கண்ணிமுடித் தேன்வண்டு வண்ணம் பாடக்
கவித்தமுடி மன்னவா, வாழ்க! நீவிர்
பண்ணிமுடித் தோமென்ற முடிவை வாழ்த்திப்
பாடிமுடித் தோம்என்று பதில்முடித்தே
மண்ணிமுடித் தேபெற்ற மணிச்சி லம்பின்.
வஞ்சியொடு வஞ்சிதான் வாழ்க என்றார்

"ஒருபாதி ஆடவர்கள் வாழ்கின் றார்மற்
றொருபாதி மாதர்களும் வாழ்கின் றார்இவ்
விருபாதி யும்வாழும், இந்த நாட்டில்
இருக்குமனை யின்கணவன் இருவர் தம்முள்
ஒருபாதி நான்என்று மனைவி சொல்வாள்
ஒருபாதி நான்என்பான் கணவன் என்றால்
ஒருபாதி பெற்றதுயர் பிறபாதிக்கும்
உண்டென்போம்; கண்ணகிபால் கண்டோம என்றான்.

( 120 )





( 125 )





( 130 )




( 135 )





( 140 )

இயல் 67

கொண்டவன்தன் கைப்பிள்ளை பாலில் லாத
குறைதாங்க முடியாமல் செத்தான் என்றால்
கொண்டவள்தன் மார்படித்துத் தலைவிரித்துக்
கூத்தாடி பாட்டொன்று நீளப் பாடி
அண்டைஅயல் மாதர்களை வரவேற் றுத்தன்
அல்லல்விரித் திருப்பாள்பால் இல்லாப் பிள்ளை
தொண்டைவறண்டு ஒழியவைப்பாள்; மனஇ ருட்ட
தோகையள் கண்ணகிஓர் சுடர்விளக்கே!

தனைஅயலான் நெருங்காமல் தனைம ணந்தான்
தனைத்தீமை நெருங்காமல் தன்குடிச்சீர்
தனைக்கெடுப்பான் நெருங்காமல் முயல்வாள் நெஞ்சம்
தனைச்சோர்வு நெருங்காமல் காப்பாள் இல்லாள்!
புனைஆடை அணிகுவதும் கூத்துப் பார்க்கப்
போவதுமே கடமைஎன எண்ணு கின்ற
மனக்கப்பல் துயர்கடலைத் தாண்டிச் சேர
மங்கைஓரு கலங்கரைவிளக்க மன்றோ!

இறந்தானுக்குதவிஎனல் இருந்த போதில்
இருந்தபொதுக் குறைநீக்கல் ஆகும்; அன்றி
இறந்தானின் உடலுக்குத் தேரும் தாரும்
ஏற்பாடு செய்வதுவும் வேறிடத்தில்
சிறந்தான்என் றெண்ணுவதும் அங்கே அன்னோன்
சீரடைய இங்குள்ள பார்ப்பனர்க்கு
முறங்காணும் அரிசிமுதல் செருப்பு ஈறாக
முடிதாழ்த்துக் கொடுப்பதுவும் மடமை என்றான்.


( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )

இயல் 68

சோணாட்டிற் பிறந்துபின் பாண்டி நாட்டில்
தோகைதான் பட்டதெல்லாம் சொல்லு வாள்போல்
சேணுள்ள நம்அருமை வஞ்சி நாட்டைச்
சேர்ந்தாள்இப் பாரெல்லாம் செல்லும் கற்பு
வாணுதலாள் திருவுருவம் அமைப்ப தற்கு
வாய்ப்பான கல்எங்கே எடுப்பதென்று
காணுங்கால் இமையத்துக் கல்லே என்று
கண்டுவைத்தோம் காரணம்உண்டதற்கும் என்றான்.

''தெற்குமலைக் கல்லைப்போல் முதிர்ச்சி யில்லை
வடக்குமலை யிற்காணும் கல்லில்! ஆனால்
தெற்குமலை நம்முடமை அதனைக் காப்போர்
செந்தமிழர் நமையிகழும் பகைவர் அல்லர்;
தெற்குடைய தமிழிகழ்ந்த வடக்கர் தம்பால்
திறங்காட்டிக் கொள்ளுங்கல் சிறப்பிற் றென்றான்''.
மற்றுமுள்ளோர் பல்யானை இடையாட் டுக்கும்
வால்குழைக்கும் வரிப்புலியே வெல்க என்றார்.

ஆங்கிருக்கும் தமிழ்ச்சான்றோர் ஈங்கு வந்தார்.
ஆரியர்கள் தமிழ்பழித்தார் என்று சொன்னார்.
தீங்குள்ளார் கனகனொடு விசயன் என்றார
'செந்தமிழர் திறங்காட்டா திருந்தோ மானால்
ஆங்கிருக்கும் தமிழ்ச்சான்றோர் நெஞ்சம் என்ஆம்
அனைத்துலகில் தமிழன்சீர் என்ஆம்' என்றான்
'யாங்குள்ளான் தமிழ்பழித்தான் ஆங்குச் சென்றே
அழித்துயர்க' என்றார்அங்கிருந்தோர் யாரும்.



( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இயல் 69

இவ்வாறு குட்டுவன்தான் பெருமக்கள்பால்
இயம்பினோன், தன்னருமை முதலமைச்சர்
வெவ்வேலிற் கண்வைத்தால் தெவ்வர் அஞ்சும்
வில்லவன்கோ தைதன்னை நோக்கி "எண்ணம்
எவ்வாறு மேல்நடப்ப தென்ன" என்றான்
யாண்டுபல வாழ்கநின் கொற்றம் என்றே
அவ்வமைச்சன் கார்முகிலாய்க் கண்கள் மின்னக்
குரலிடித்துச் சொன்மாரி பொழிவானாங்கே.

''வாளெடுத்து வரிப்புலியார் கயலார் நும்பால்
மாறுபட்டார்; கொங்கர்செங் களத்தில் வந்தார்;
தோளெடுத்த எடுப்பினிலே தோல்வி கண்டார்.
தொகுத்தெடுத்தே இருகொடியும் நும்பால் தந்த
நாள்எடுத்த ஓட்டத்தைத் திசைகள் எட்டும்
நன்றெடுத்துக் கூறுவன. கொங்க ணர்க்கள்
கோளெடுத்த கலிங்கர், மறக் கருநாடர்கள்
கொடும்பங்க ளர்,கங்கர் கட்டியர்கள்,

ஆரியர்க ளுடன் தமிழர் கைகலக்கும்
அப்போரில் நும்மரிய யானை வேட்டை
நேரிருந்து நான்அன்று கண்டேன்; இன்றும்
நெஞ்சரங்கில் காணாத நேர மில்லை!
ஊரிருந்து பார்த்துவர எம்கோ மாட்டி
உடன்சென்ற விற்கொடிக்கீழ் உமைஎ திர்த்த
ஆரியத்து மன்னர்தோள் அறுதல் கண்டார்
ஆயிரம்தோள் பறந்தவிடம் காணுகில்லார்.




( 195 )





( 200 )




( 205 )





( 210 )




( 215 )

இயல் 70

அத்தகையீர் கடல்சூழ்ந்த இந்நி லத்தை
அந்தமிழ்நா டாக்குவதாம் இந்தக் கொள்கை
எத்தகுதி எவருடையார் இதைஎ திர்க்க?
எந்நிலத்து நல்லாரும் எய்தத் தக்க
மெய்த்தகுதி யாம்கற்பு விளக்க அன்றோ
வில்லெடுத்தீர் இமயத்துக் கல்லெடுக்க!
வைத்தெழுதுவீர் அஞ்சல் உங்கள் கொள்கை
வடபுலத்து மன்னர்க்கு வருகை ஏற்க,

இந்நாட்டில் இதுகுறித்துப் பறைமு ழக்கம்
எழப்புரிவீர்; பன்னாட்டின் ஒற்றர் யாரும்
தம்நாட்டிற் கறிவிக்கக் கடமைப் பட்டார்!
தமிழ்எழுக வீரமிலா வடக்கு நோக்கி!
அந்நாட்டார் நமைஎதிர்க்க எண்ணுவாரேல்
அவருண்டு நமையறிந்த மூத்தோ ருண்டு
தென்னாட்டின் பழவீரம் அன்றும் இன்றும்
என்றுமே உணடெ''ன்றான் எடுத்த தோளான்

மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட மன்னன் "எங்கே
மாவீரர் எங்கேநாற் படைத்த லைவர்?
பட்டத்து யானைஎங்கே? ஆகஆக
பறையறைவிப் பீர என்றான் நாட்டி லெங்கும்
'குட்டுவனார் நம்மன்னர் வாழ்க நாளும்
கோதைஉருக் கல்கொணர வடக்குச் செல்வார்
வட்டத்து மன்னரெலாம் திறைகொணர்க
வரவேற்க'' என்றுபறை முழக்கம் கேட்டான்.





( 220 )





( 225 )




( 230 )





( 235 )